எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Sunday, May 31, 2009

ராமா நீ சமானமெவரு!

ராமனுக்கு யாரும் நிகரில்லை. தன்னுடைய தந்தையின் ஒரு சொல்லுக்காகத் தனக்கு உரிமையுள்ள நாட்டையே விட்டு விட்டுக் காட்டிற்குச் சென்றான். காட்டிலும் க்ஷத்ரிய தர்மத்தின்படி அனைவரையும் காப்பது தன் கடமை என ஒரு ரக்ஷகனாய் இருந்தான். மனைவியைப் பறி கொடுத்து அவன் ஒரு அன்பான உண்மைக் கணவனாய் துடிதுடித்து அழுதான். அவன் யார் சாக்ஷாத் ப்ரப்ரும்மமே அவன் தான். என்றாலும் சாக்ஷாத் ப்ரப்ரும்மமாகவே அவன் இருந்தாலும், அந்த ப்ரும்மமே துடிதுடித்து அழுதது மனைவியைக் காணோம் என.

3574 ஓடி வந்தனன், சாலையின்
சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ் சுரிக் குழலாள்
தனை காணான்,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர்,
குறியா,
நேடி வந்து, அது கண்டிலது என
நின்றான். 158


3575 கைத்த சிந்தையன், கணம் குழை
அணங்கினைக் காணாது,
உய்த்து வாழ்தர வேறு ஒரு
பொருள் இலான், உதவ
வைத்த மா நிதி, மண்ணொடு
மறைந்தன, வாங்கிப்
பொய்த்து உளோர் கொளத் திகைத்து
நின்றானையும் போன்றான். 159


எதுக்கு? கட்டிய மனைவியின் மேல் ஓர் கணவன் வைக்கும் பாசமும், அன்பும் எத்தகையது என நாம் புரிந்து கொள்வதற்காக. ஓர் சாதாரணக் கணவனைப் போல் அழுது புலம்பினான். ராம நாமத்தின் மஹிமை பற்றிப் பலரும் சொல்கின்றனர். ஆனால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டே, ஓர் அவதார புருஷனாக இருந்து கொண்டே ராமன் அழுகின்றானே? இவன் எப்படிக் கடவுளின் அவதாரம் ஆவான்? சாதாரண மனிதன் போல் அல்லவா மனைவியைக் காணோம், ராக்ஷஸன் தூக்கிப் போனானே எனக் கதறுகின்றானே? தன் மனைவியைக் காக்கத் தெரியாதவன் கடவுளின் அவதாரமா எனக் கேட்கின்றனர்.

3577 “அறத்தைச் சீறுங்கொல்? அருளையே
சீறுங்கொல்? அமரர்
திறத்தைச் சீறுங்கொல்? முனிவரைச்
சீறுங்கொல்? தீயோர்
மறத்தைச் சீறுங்கொல்? ‘என் கொலோ
முடிவு? ‘என்று மறையின்
நிறத்தைச் சீறுங்கொல்? நெடுந்தகையோன் ‘‘
என நடுங்கா. 161


ஆம், அவன் கடவுளின் அவதாரம் தான். ஆனால் இந்த அவதாரத்தில் அவன் ஒரு பூரண மனிதனாக அல்லவோ வாழ்ந்து காட்டினான். மனிதர்கள் அதிலும் ஓர் அரசன் கடைப்பிடிக்க வேண்டிய நீதிநெறிகள், தர்மம் போன்றவற்றை எப்போது எந்த வகையில் கடைப்பிடிக்கணுமோ அப்படியல்லவோ கடைப்பிடித்து வாழ்ந்து வந்தான். அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக அல்லவோ வாழ்ந்து காட்டினான். அவன் வாழ்ந்தது என்னமோ சாதாரண அரசகுமாரனின் வாழ்க்கையைத் தானே? ஒரு அரசகுமாரன் வாழ்க்கையில் தோன்றும் காதல், வீரம், சோகம், பெற்றோர் மேல் பாசம், சகோதரர் பாசம், சண்டைகள், குடும்பக் குழப்பங்கள், சமாதானங்கள், அதீத ஆசைகள், காமங்கள் என எல்லாமும் நிரம்பிய ஒன்றே அவன் வாழ்ந்த வாழ்க்கை. அதனாலேயே கடைசிவரையில் தான் யார் எனக் காட்டிக் கொள்ளாமலேயே சாதாரண மனிதனைப் போலவே மனைவியை மாற்றான் தூக்கிச் செல்லக் கொடுத்துவிட்டுத் தேடித் தேடி அலைந்து திரிந்தான். இதெல்லாம் அவன் எதுக்குச் செய்தான்? நம் போன்ற சாமானியர்கள் அதைப் பார்த்து ஓரளவேனும் கற்றுக் கொள்ளவேண்டும் என்றே. ராமனைப் போல் நாம் வாழவேண்டும் என்பதற்காகவே. எத்தனை கஷ்டம் அடைந்தாலும் தன் தர்மம் என எது கடைப்பிடிக்கப் படுகின்றதோ, அதிலிருந்து சற்றும் வழுவாமல், தன் குடிமக்களைத் தன் பெற்ற மக்கள் போல் ஓர் அரசன் நினைக்கவேண்டும் என்பதை சொல்லாலும், செயலாலும் கடைப்பிடித்தான். இன்றைய ஆள்வோருக்கும், இன்றைய நாகரீக வாழ்க்கையை மேற்கொள்வோருக்கும் மட்டுமே ராமன் செய்தது அநியாயம், மனைவியைத் துன்புறுத்தினான் என்று எல்லாம் தோன்றும்.

ஆனால் உற்று நோக்கினால் தன் அன்பு மனைவியுடன் நடத்தும் குடும்ப வாழ்க்கையை விடத் தன் குடிமக்களின் நல்வாழ்வும், தன் ராஜ்ஜியத்தின் மேன்மையுமே அவனுக்கு மிக மிக முக்கியமாய்ப் பட்டது. அதனாலேயே அவன் குடும்ப வாழ்க்கையைத் துறந்தான். மனைவியைப் பிரிந்த அவன் அதனால் உடனேயே வேறு பெண்ணையும் நாடிப் போகவில்லை. மனைவியுடன் கூடி வாழ்ந்த இன்ப நினைவுகளிலேயே காலத்தைக் கழித்தான். எத்தனை பேரால் இது முடியும்? ஓர் ஆதர்ஸ புருஷனாக வாழ்ந்த ராமனைக் குற்றம் சொல்லுபவர்கள், சீதையைத் துன்புறுத்தினான் என்று சொல்லுபவர்கள் வெறும் விவாதத்துக்காகவே சொல்லுகின்றனர். அரசனுடைய, ஆட்சியாளனுடைய தர்மம் எது என்பதைத் தன் நடத்தையின் மூலம் சுட்டிக் காட்டினான். தனக்கென உரிமையானதைக் கூடத் துறந்தான். பதவியைத் தேடி அலையவில்லை. தன் மக்களுக்கெனச் சொத்து, சுகம் சேர்க்கவில்லை. ஆட்சியில் இருந்தும், அனைத்தையும் துறந்து ஓர் துறவி போலவே வாழ்ந்தான். ராமா உனக்கு நிகர் ஏது? நீ மட்டுமே தான். உன்னைப் போல் மீண்டும் ஓர் ராமன் தோன்றுவானோ?

ராமனின் கல்யாண குணங்கள் ஒன்றொன்றாய்ப் பார்க்கலாமா??

2 comments:

  1. இராமன் பரம சொரூபம். அவனிடம் குறையோ களங்கமோ ஒருபோதும் இருப்பதில்லை. அப்படியே கண்டாலும், அது காணும் கண்ணில் இருந்தால் மட்டுமேயாம்.

    ReplyDelete
  2. நன்றி ஜீவா, முதல் வருகைக்கும், அருமையான கருத்துக்கும்.

    ReplyDelete