எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Saturday, March 28, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

ஸ்ரீராமன் பல்வேறுவிதமான பெயர்களால் அழைக்கப் படுகின்றான் அல்லவா? ஒரு ஆங்கிலப் பழமொழி உள்ளது, "ரோஜாப்பூவை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன" எனும் பொருள்படி, "A ROSE IS A ROSE IS A ROSE" என. அது போல சர்வ ரட்சகனை எந்தப்பெயரிட்டு அழைத்தாலும் என்ன? ஆனாலும் இங்கே பாருங்கள், தசரதன் அவனை அழைப்பதையும், தாயான கோசலை அழைப்பதையும், வசிஷ்டர் போன்ற பிரம்ம ரிஷிகள் அழைப்பதையும், மற்ற ரிஷிமுனிவர்கள் அழைப்பதும், மக்கள் சொல்லும் பெயரும், சீதையின் தோழிகள் அடையாளம் காட்டுவதும் இப்படித் தானாம்.

"ராமாய ராமப்த்ராய ராமசந்த்ராய வேதஸே!
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:"

வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளால் "ராமா" என்றும், தந்தை தசரதனால் வாஞ்சையுடன் "ராமபத்ரா" எனவும், தாயான கோசலை தன் அன்பை வெளிக்காட்டும் விதமாய் "ராமச்சந்த்ரா" எனவும், மற்ற ரிஷிமுனிவர்களால் "வேதஸ்"(படைக்கும் கடவுள் ஆன பிரம்மதேவனைக் குறிக்கும் சொல்) எனவும், நாட்டுக் குடிமக்களாலும், மற்றவர்களாலும் "ரகுநாதன்" எனவும், ஸீதையின் தோழியர்களால் "ஸீதாபதி" என்றும் ஒவ்வொருவராலும், ஒவ்வொரு விதமாய்ப் போற்றப் படும், "ஹே, ராமசந்த்ரமூர்த்தியே, உமக்கு நமஸ்காரம்."

அடுத்து வருவதைப் பாருங்கள். தசகண்ட ராவணனே தன் சைனியம் யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப் பட்டதை அறிந்து, வந்திருப்பவன் யார் என உள் மனதிலும் உணருகின்றான். அதைச் சொல்லவும் சொல்கின்றான்.


"யஸ்ய விக்ரம மாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:!
தம் மன்யே ராகவம் வீரம் நாராயணமனாமயம்!!"

"ஆஹா, நம்முடைய மொத்த சைனியமும் இவனால் அழிக்கப் பட்டுவிட்டதே? எனது சைதன்யமும் அழிக்கப்பட்டுவிட்டது. இவனுடைய வீர, தீர, பராக்கிரமாத்தால் அன்றோ ராக்ஷஸர்கள் அழிந்தனர்! அப்போது இவன் சாமானிய மனுஷன் அல்ல! இவன் அந்த சாட்சாத் ஸ்ரீமந்நாராயணனே ஆவான்." என்று ராவணன் சொல்கின்றான். இப்படிப் பகைவனாலேயே போற்றப் பட்ட ராமனை நினைத்தாலே போதுமே!

அடுத்து ச்யவன மஹரிஷி சொல்லுவது.

"ஸ்ருதி ஸ்ம்ருதி புராணே ஷூ ராமநாம ஸமீரிதம்!
தந்நாம கீர்த்தனம் பூய: தாபத்ரய வினாசனம்!!"

வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லப் பட்டிருக்கின்ற ஸ்ரீராம நாமாவை அடிக்கடி ஜபித்து வந்தால் சகல துக்கங்களும் நசிந்துவிடும் என்று ச்யவன மஹரிஷி சொல்கின்றார். ஆகவே ஸ்ரீராம நாமாவை இடைவிடாது ஜபித்து வருகின்றவர்களுக்கு அனைத்து ஆபத்துகளும் நீங்கும் என்பது உறுதி.

ஸ்ரீராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்.

அடுத்து ஸ்ரீராமனின் சில சிறப்புகள்.

Friday, March 27, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

முதல்லே இதை வேறே எங்கேயும் பப்ளிஷ் பண்ணவேண்டாம்னே நினைச்சேன். ஆனால் நம்பிக்கை குழுவில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அபிப்பிராயங்களைச் சொல்லிக் கொண்டு, விவாதத்தில் இறங்க, கொஞ்சமானும் இதனால் அமைதி அடையட்டுமேனு தோணியது. அதனாலேயே போட்டேன். இப்போப் போட ஆரம்பிச்சாச்சு அதனால் மிச்சம் எழுதறதையும் ஸ்ரீராமநவமி வரை போட்டுடறேன்.
****************************************************************************************
அடுத்த ஸ்லோகம் இது: ராமன் முதன்முதல் தன் வீரத்தைக் காட்டியது விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றபோதே. அப்போதில் இருந்து கடைசியாக ராவணன் வதம் வரையிலும் ஸ்ரீராமன் தன் கடமையான தர்மத்தில் இருந்து தவறவே இல்லை.
துஷ்டர்களை அழிப்பதையும், நல்லவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதையுமே தன் கடமையாகக் கொண்டிருந்தான். ஸ்லோகத்தின் அர்த்தம் இது அல்ல.

"ஆர்த்தானாம் ஆர்த்திஹந்தாரம் பீதானாம் பீதநாஸனம்!
த்விஷதாம் கால்தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்!!"

பீடைகள்=துன்பங்களினால் பாதிக்கப் பட்டவர்களின் துன்பங்களையும் பயந்தவர்களின் பயத்தையும், சத்ருக்களால் துன்பம் அடைவோருக்கு உதவி சத்ருக்களை நாசம் செய்து காலதண்டம் போல் விளங்குபவருமான ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியை வணங்குகின்றேன்.

ஸந்நத்த: கவசீ கட்கி சாபபாணதரோ யுவா!
கச்சன் மாகம்ரதோ நித்யம் ராம: பாது ஸ ல்க்ஷ்மண!!

யெளவனமாய்க் காட்சி தருபவரும், இளவல் ஆன லக்ஷ்மணனுடன் எப்போதும் இணை பிரியாது இருப்பவரும், கவசம் அணிந்து, வில், அம்பு இவற்றை எப்போதும் தரித்தவரும் ஆன ஸ்ரீராமசந்த்ர மூர்த்தி என்னை எப்போதும் காக்கவேண்டும்.

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய ச!
கண்டிதாகில தைத்யாய ராமாயா பந்நிவாரிணே:"

கோதண்டம் என்னும் காதளவு நீண்ட நாணை உடைய வில்லைத் தரித்துக் கொண்டு அம்பை அதில் ஏற்றி எப்போதும் தயார் நிலையில் உள்ள பாணத்தை உடையவரும், எல்லா அசுரர்களையும் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்தவரும் ஆன ஸ்ரீராமசந்த்ர மூர்த்திக்கு நமஸ்காரங்கள்.

டிஸ்கி: அர்த்தம் நானாக ஒரு மாதிரியாய் எழுதியது. வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கொடுக்கலை. பொதுவான அர்த்தமே கொடுத்திருக்கேன்.

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

இப்போ ராம நாமம் வரும் ஒவ்வொரு ஸ்லோகமாய்ப் பார்ப்போமா? எனக்குச் சின்ன வயசில் முதலில் பழக்கம் ஆனது இந்த ஸ்லோகம் தான். இந்த ஸ்லோகம் அர்த்தம் அப்போ தெரியாது. இன்னும் சொல்லப் போனால் உச்சரிப்புக் கூடச் சரியா வராது. ஏழு வயதில் கற்ற அந்த ஸ்லோகம் இதுவே:-
"அக்ரத: ப்ருஷ்டதஸ்சைவ பார்ஸ்வதஸ்ச மஹாபலெள!
ஆகர்ண பூர்ண தந்வாநெள ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!"
இந்த ஸ்லோகம் பயமில்லாமல் தனிவழி செல்லவும், இரவு படுக்கும்போது சொல்லவும் சொல்லிக் கொடுக்கப் பட்டது. இதைச் சொன்னால் ராம, லக்ஷ்மணர்கள் உங்களுக்குத் தெரியாமல் கையில் வில், அம்போடு வந்து உங்களைக் காப்ப்பார் என்றும் சொல்லிக் கொடுத்தாங்க. அது முதல் எங்கே, என்னவிதமான கஷ்டம் வந்தாலும் இந்த ஸ்லோகம் ஒன்றே தான் திரும்பத் திரும்பத்திரும்ப திரும்பத் திரும்ப மனதில் ஓடும். அதுக்கப்புறம் தினமும் கணக்கில்லாமல் இந்த ஸ்லோகம் மனதிலேயே ஓடுவது வழக்கமாய்ப் போச்சு! இப்போ என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அவங்களையும் கஷ்டம் வரும் நேரத்தில் மட்டுமில்லாது எப்போவுமே சொல்லச் சொல்லுவேன். இந்த ஸ்லோகத்தின் அர்த்தமே முன்னாலும், பின்னாலும் அதி பலசாலிகளான ராமனும், லக்ஷ்மணனும், காதளவு நீட்டப் பட்ட நாணை உடைய வில் மற்றும் அம்பைத் தரித்துக் கொண்டு வந்து நம்மை ரக்ஷிக்கட்டும் என்பதே!

அடுத்து ஆபத்துக்களைத் தவிர்க்கும் ராம நாமம் இதோ:-

"ஆபதாரமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!!"
சகலவிதமான கஷ்டங்களைப் போக்குபவரும் சகல சம்பத்துக்களையும் அளிப்பவரும் ஆன, உலகிலேயே அழகானவரும் ஆன ஸ்ரீராமனை அடிக்கடித் துதிக்கின்றேன். இதையும் ஆபத்துகள் நேரும்போதெல்லாம் சொல்லலாம்.

அடுத்து ஸ்ரீராமபக்தனும், பரம அடியானும் ஆன ஆஞ்சநேயனே சீதையைக் கண்டு பிடிக்க முடியாமல் மனம் நொந்து தற்கொலை வரைக்கும் போயிருக்கான்னா பார்த்துக்குங்க. நாமெல்லாம் எம்மாத்திரம்! தன் மேலேயே நம்பிக்கை இழந்து உயிரை விடத் தீர்மானித்த அனுமன் கடைசியாகச் சொல்லவேண்டியது எனச் சொன்ன இந்த மந்திரம் ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தில் உள்ளது. 13-ம் ஸர்க்கத்தில் 59-வது ஸ்லோகம் இது! ஸ்ரீராம தாரக மந்திரத்தின் விவரணம் இது என்று ஆன்றோர் வாக்கில் அருளியது.

"நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச ஜனகாத் மஜாய
நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க ம்ருத்கணேப்ய!!"

ஸ்ரீ ராமனையும் லக்ஷ்மணனையும், ஜனகபுத்திரியான சீதையையும் வணங்குகின்றேன். ருத்ரன், இந்திரன், யமன், அக்னி போன்ற சகல தேவர்களையும் வணங்குகின்றேன். சந்திரன் சூரியன் மற்றும் மருத்துக்கள் அனைவரையும் வணங்குகின்றேன்.என்று இந்த ஸ்லோகத்தைச் சொன்ன உடனேயே அசோகவனம் ஆஞ்சநேயன் கண்களில் பட்டது. கண்டான் சீதையை!

தொடரும்!

Thursday, March 26, 2009

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

சென்ற வாரம் எங்க வீட்டுக்கு வந்திருந்த ஸ்ரீகாழியூரர் அவர்கள் நாம ஜபத்தின் மகிமை பற்றிச் சொன்னார். ஏற்கெனவே சின்ன வயசிலே இருந்து ஸ்ரீராமஜயம் எழுதும் வழக்கம் உண்டு என்றாலும் அவ்வப்போது இயலாது. ஆகவே வாயால் சொல்ல ஆரம்பிச்சேன். பலவருடங்களாய்த் தனி வழி சென்றாலும் சரி, சேர்ந்து போனாலும் சரி, எங்கே போனாலும், எது செய்ய ஆரம்பிச்சாலும் ஸ்ரீராமஜயம் சொல்லியே ஆரம்பிக்கும் வழக்கம் இன்னும் இருக்கு. மனதுக்குக் கஷ்டமாய் இருக்கும் நேரங்களிலும், அச்சம் ஏற்படும்போதிலும், காரணம் தெரியாத கலக்கம் ஏற்பட்டாலும் ஸ்ரீராமஜயம் சொன்னால் நிச்சயமாய் அது விலகிச் செல்வதையும் கண்கூடாய் உணர்ந்திருக்கிறேன். இனம் புரியாத ஒரு நிம்மதி மனதை ஆக்கிரமிக்கும். இப்போது ராமநாமத்தின் மகிமை பற்றிக் கொஞ்சம் சொல்கின்றேன்.

அனைவருக்கும் தெரிஞ்சது இந்த விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம்:
"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!"

இந்த ஸ்லோகமானது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அகில உலகுக்கும் அதிபதியான சர்வலோக ரட்சகன் ஆன ஈஸ்வரன், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியான சாட்சாத அம்பாளிடம் சொல்லுகின்றார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்களைக் கூறும் சமயம், ஈசன் கூறுவதாவது. "அனைத்திலும் உயர்ந்தது இந்த "ராம" நாமமே! இந்த "ராம" நாமத்தை ஜபித்து வந்தாலே சஹஸ்ரநாமத்தைச் சொன்னதன் அத்தனை பலனும் ஒருவனுக்குக் கிட்டி விடுகின்றது.அத்தனை உயர்வானது இந்த "ராம" நாமம்." என்று சொல்கின்றார்.

ராமநாமம் உருவான விதம்:

எட்டெழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாயா' வில் உள்ள "ரா" என்னும் எழுத்தும், ஐந்தெழுத்து மந்திரமான "ஓம் நம சிவாயா" வில் உள்ள "ம" என்னும் எழுத்தும் சேர்ந்தே "ராம" என்னும் இரண்டெழுத்து மந்திரமானது. ஓம் நமோ நாராயணாயாவில் உள்ள "ரா" வை எடுத்துவிட்டால் மிச்சம் இருப்பது "ஒம் நமோ நா அயனாயா" என்றாகி விடுகின்றது. அதே போல் "ஓம் நம சிவாயா" வில் உள்ள "ம" வை எடுத்துவிட்டால் "ஓம் ந சிவாயா" என்றாகின்றது. ஓம் நமோ நா அயனாயா என்றால் நா அயனாயா= கண்களே இல்லாத என்ற பொருள் ஆகின்றது அல்லவா? அதே போல் இப்போது ஓம் ந சிவாயா என்றால் ந சிவாயா=சுகமில்லாதவன், மங்களமில்லாதவன் என்ற பொருள் அமைந்து விடுகின்றது அல்லவா? அப்போது இந்த ரா வும், ம வும் இல்லை என்றால் பொருளே மாறியும் விடுகின்றது. இந்த ரா வும் ம வுமே பொருளைக் கொண்டு வருகின்றது. இவை இந்த எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரச் சொற்களின் ஜீவன் என்றே சொல்லலாம். ஆகவே ராம நாமம் தாரக மந்திரமாகி விடுகின்றது.

பாசுரப் படி ராமாயணம் எழுதணும்னு நினைப்பு. முடிஞ்சால் புத்தகம் கிடைச்சால் நாளையில் இருந்து எழுதறேன். இல்லைனால் என்ன? ஸ்ரீராமர் பற்றி எழுத விஷயமா இல்லை? நாளை பார்ப்போம். ஸ்ரீராமநவமி வரை தினம் ஒரு பதிவாய் வரும். எந்தத் திரட்டியிலும் சேர்க்கப் போவதில்லை. தானாய்த் தெரிந்து கொண்டு பின்னூட்டம் இடுபவர்கள் இடலாம் என்பதற்காக பின்னூட்டப் பக்கம் திறந்தே இருக்கின்றது.

ஸ்ரீராமஜயம்!
ராம ஜயம் ஸ்ரீராம ஜயம்
நம்பின பேருக்கு ஏது பயம்!

Wednesday, March 25, 2009

பிள்ளையார், பிள்ளையார்!

"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லோன்!

புதிதாய் அறிமுகம் ஆகி இருக்கும் கோமாராஜன் அனுப்பிய முதல் பிள்ளையார் இவர். அவங்களே வரைஞ்சிருக்காங்க. எனக்கும் வரையணும்னு ஆசை தான். ஆனால் முடியலை, பல்வேறு காரணங்களால் பல்வேறு ஆசைகளைத் தொடர முடியலை. இப்போ அது பற்றி நினைக்கவும் கூடாது. பதிவுகள் அது பத்தி இல்லை. முதல் முதல் அறிமுகம் ஆன கடவுள் பிள்ளையார் தான். அதுவும் மேலமாசிவீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் இருக்கும் நேரு பிள்ளையார் தான் ஆத்மார்த்த சிநேகிதர். பள்ளிக்குப் போகும், பள்ளியில் இருந்து வரும் வழி அது தானே. எல்லாத்தையும் அவர் கிட்டேயே சொல்லிடுவேன். அப்பாவோட கட்டுப்பாடுகளாலே அதிகமாய் நண்பர்கள் வீடுகளுக்கும் போகமுடியாது. விளையாட முடியாது. ஆகவே புத்தகங்களும், இம்மாதிரி கோவில்கள், பஜனைகள் என்று அம்மாவோடு போவதும் தான் பொழுது போக்கு.

எப்படி இப்படி திடீர்னு ஆன்மீகமாய் மாறிட்டாயா எனப் பலரும் கேட்கின்றனர். என்னைப் பொறுத்த வரையில் அப்படி இல்லை. குடும்பத்தில் எல்லாருக்குமே பக்தி உணர்வு உண்டு. ஆன்மீகமும் தெரியும். பிறந்த இடம், புகுந்த இடம் இரண்டுமே அப்படியே அமைந்துவ்ம் விட்டது. எப்போவும் பூஜை, வழிபாடு என்று இருந்திருக்கின்றேன். இப்போது அவை குறைந்துள்ளது. உடல்நிலைகாரணமாவும், வேறு காரணங்களாலும். ஆகவே இது புதுசு இல்லை. பல்வேறு ஆன்மீகச் சொற்பொழிவுகள், பஜனைகள், கோயில் வழிபாடுகள், வீட்டிலே பூஜை வழிபாடுகள் என உண்டு. பலரும் சொல்லுவதைப் பார்த்தால் கடவுள் இல்லை என்ற கொள்கை உடையவர்களாக இருந்துட்டு அப்புறமாத் திடீரென மனம் மாறியவர்களாகவே இருக்கின்றனர். இது தான் எனக்குப் புரியவில்லை. இந்த உலகம் ஒரே நியதியோடு நடந்து வருகின்றது. பருவங்கள் மாறுவது தப்பவில்லை, பூக்கள் மலருவதும், காய்கள் காய்ப்பதும், கனிகள் பழுப்பதும் யார் உதவியினால்? என்னதான் நாம் விவசாயத்தில் பாடுபட்டாலும் அதற்கான பலனை பூமித்தாய் அருள் இருந்தால் அன்றோ கொடுப்பாள்?? சூரியனுக்கு யார் ஆணை இட்டனர் தினமும் உதிக்க? சந்திரனுக்கு யார் ஆணை தினமும் தேய்ந்து வளர? அப்புறம் எதை வைத்து கடவுள் இல்லை என முடிவு பண்ணுகின்றார்கள்? தெரியலை, ஆனால் என்னை பொறுத்த வரையில் ஒவ்வொரு நிமிஷமும் கடவுள் இருப்பதை உணர்ந்து கொண்டிருக்கின்றேன்.

இந்த ஞானம், யோகம், பிரம்மம் பற்றியும் எழுதாமல் ஏன் புராணக் கதைகள், இதிஹாசக் கதைகள்னு தெரிஞ்சதைப் பத்தி எழுதறேனும் சிலர் கேட்கிறாங்க. நமக்குத் தெரிஞ்சிருந்தாலும் இது பற்றிய முழு அறிவு சில பெரியவங்களுக்கே இருக்கிறதில்லை. அதோட இளைய தலைமுறைக்குச் சுத்தமா இந்த அறிவு இல்லை. அவங்களுக்கு மறுக்கப் பட்டே வந்திருக்கின்றது. இப்போது இணையம் மூலமாய்ப் பலருக்கும் இது சென்றடையும். மேலும் பிரம்மம் பற்றி அறியவேண்டுமானால் கொஞ்சமாவது இறை உணர்வு, நம்பிக்கை வேணும். முதலில் அதை வளர்த்துக்கணும் இல்லையா? நான் இப்போது தான் பக்தி என்னும் படியிலேயே நிற்கின்றேன். அந்தப் படியைக் கடந்து மேலே செல்லவேண்டும். ஒருவேளை இந்தப் பிறவியில் அது நடக்குமா, நடக்காதா தெரியலை. எத்தனை பிறவி எடுக்கணுமோ தெரியாது. எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாத உள்ளம் வேண்டும் என்பதே என் ஒரே எண்ணம்.

இலக்கியம் எழுத வா எனத் தோழி ஒருத்தி அழைத்தார். இலக்கியம் எழுத எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். மேலும் இலக்கியம் படைப்பதை விட தெரிந்த ஒரு விஷயத்தை எழுதுவதே எனக்கு சுலபமாய் இருக்கின்றது. வாழ்நாளில் எனக்கு நேர்ந்த அவமானங்களையும், எதிர்ப்புகளையும், சோகங்களையும் எழுத நேர்ந்தால் ஒரு இலக்கியமாய் மாறக் கூடும். ஆனால் சுலபமான வழி எல்லாவற்றையும் மறப்பதே. எதை மறக்கவேண்டும் என முயல்கின்றோமோ அதையே நினைக்க ஆரம்பிப்போம் சாதாரணமாய். ஆனால் எனக்கு ஒரு ஆயுர்வேத மருத்துவர் கூறியது: "உனக்கு ஏற்பட்ட அவமானங்களை நீ மறக்கவேண்டும் என்றால் அந்தக் குறிப்பிட்ட அவமானத்தை 21 முறை ஒரு வெள்ளைத் தாளில் எழுதிவிட்டுப் பின்னர் அதை 21 துண்டுகளாய்க் கிழித்துப் போடு." என்று சொன்னார். என் வாழ்க்கையில் நேர்ந்த சில குறிப்பிட்ட சம்பவங்களை அப்படியே எழுதிக் கிழித்தேன். இப்போது அவற்றின் நினைவு வந்தாலும் என்னிடம் அவற்றின் தாக்கம் குறைந்தே இருக்கின்றது. இன்னும் முயன்றால் சுத்தமாய் மறந்தும் விடுவேன்.

தனியாக இந்த வலைப்பூ ஆரம்பித்ததின் நோக்கமே என் தனிப்பட்ட பக்தி உணர்வுகளை எழுதத் தான். இப்போது ஸ்ரீராமநவமியை முன்னிட்டு சில ராமர் பற்றிய தகவல்கள் எழுதணும்.