எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Saturday, May 2, 2009

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகளைப் பற்றிக் கொஞ்ச நாட்கள் முன்னாலே தான் படிக்க நேர்ந்தது. சக்தி விகடனில் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு ஆன்மீகப் பெரியவர்களைப் பற்றி திருவடி தரிசனம் என்ற பெயரில் வருகின்றது. அதிலே படிக்க நேர்ந்தது. கல்யாணத்துக்கு முன்னாலே இப்படி ஒரு ஸ்வாமிகள் இருந்தது தெரியாது. அப்புறமும் அடிக்கடி என் மாமியார் இவரைப் பத்திச் சொல்லுவாங்க. அதுதான் தெரியும் அவ்வளவு விபரமாய்த் தெரியாது. இப்போ திரு தேவ் அவர்கள் ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி எழுத ஆரம்பிச்சதும் மறுபடியும் மருதாநல்லூர் ஸ்வாமிகள் பற்றித் தேடி எடுத்துப் படிச்சேன். இந்தப் பதிவை ராமநவமியை ஒட்டியே போட்டிருக்கணும். முடியலை. இப்போவாவது போட முடிஞ்சதேனு சந்தோஷம் அடைகிறேன்.

நாம சங்கீர்த்தனமும், நாம ஜபமும் மட்டுமே கலியுகத்தில் இறை அருள் பெற்று உய்ய மிகச் சிறந்த வழியாகச் சொல்லப் படுகின்றது. தேவரிஷியான நாரதரில் இருந்து ஆரம்பித்து, இன்றைக்கும் பல்வேறு மஹான்களும், ரிஷி, முனிகளும் நாம ஜபத்தையும் நாம சங்கீர்த்தனத்தையும் நாடெங்கிலும் பரப்பி வந்திருக்கின்றனர். அனைத்திலும் சிறந்த நாமம் “ராம” என்ற தாரக மந்திரமே. அனைவருக்கும் உயிர்நாடியாக விளங்கும் இந்த ராம நாம ஜபத்தைப் பரப்பியவர்களுள் முக்கியமானவர்கள் கோவிந்தபுரத்தில் அதிஷ்டானம் கண்டிருக்கும் ஸ்ரீஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள், திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் போன்றவர்கள் ஆவார்கள். இவர்களில் ஸ்ரீஸ்ரீ போதேந்திரரும், ஸ்ரீதர ஐயாவாள் அவர்களும் சமகாலத்தவர்கள். இவர்களுக்குப் பின்னர் ஏறக் குறைய நூறு வருஷங்கள் சென்ற பின்னர் தோன்றியவரே மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள்.

ராமநாம ஜபத்தின் மகிமையை நாடெங்கும் பரப்பிய இவர் பிறந்ததும் சில வருஷங்கள் பேசவே இல்லை, தெரியுமா? ஸ்வாமிகளின் அவதாரம் பற்றிக் காண்போமா இப்போது? தஞ்சை ஜில்லாவில் திருவிச நல்லூர் கிராமத்தில் கி.பி.1777-ம் ஆண்டில் வேங்கடசுப்ரமணிய ஐயருக்கும் அவர் மனைவிக்கும்(தாயார் பெயர் தெரியவில்லை) மகனாய்ப் பிறந்தார் ஸத்குரு ஸ்வாமிகள். இவருடைய இயற்பெயர் வேங்கடராமன் என்பதாகும். பிறந்து மூன்று வருஷங்கள் ஆகியும் பிள்ளை வாயில் இருந்து ஒரு சொல் முத்துக் கூட உதிரவில்லை. தாயும், தந்தையும் ஏங்கித் தவித்து உருகிப் போனார்கள். வேண்டாத தெய்வம் இல்லை. மணி, மந்திர, ஒளஷதங்கள் அனைத்தும் பலிக்கவில்லை. குழந்தை வாயே திறக்கவில்லை. முத்துப் போல் பேசுவான் என நினைத்திருக்க “அம்மா” என்று கூட அழைக்க மாட்டேன் என்கின்றானே அருமை மகன் எனத் தாயார் மனம் வெதும்பிப் போனாள்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்திருந்தார். பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று புனித நீராடி, யாத்திரை சென்று வரும் வழியில் அந்த ஊருக்கும் வந்திருந்தார் துறவி. துறவிக்கு பிக்ஷை அளித்து அவரிடம் ஆசிகளைப் பெற விரும்பிய வேங்கடசுப்ரமணிய ஐயரும், அவரின் மனைவியும் அவரைத் தங்கள் இல்லத்துக்கு வந்தருளுமாறு வேண்ட துறவியும் அவ்வாறே வந்தார். இருவரும் துறவியை நமஸ்கரித்துவிட்டுத் தங்கள் பிள்ளையையும் அவருக்குக் காட்டி நமஸ்கரிக்கச் சொன்னார்கள். பிள்ளை சும்மா நின்றது. மனம் வருந்திய பெற்றோர் துறவியிடம் பிள்ளை இன்னும் பேசவே இல்லை என்பதையும் துயரத்துடன் தெரிவித்தார்கள். குழந்தையைக் கூர்ந்து கவனித்தார் துறவி. அவர் முகம் மலர்ந்தது.

ஸ்வாமிகளின் படம் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் மெயிலில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

No comments:

Post a Comment