எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Friday, April 3, 2009

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

இனி மேலும் சில தகவல்களைப் பார்ப்போம். தென் மாநிலங்களை விடவும், வடமாநிலங்களில் ஸ்ரீராமரும், கிருஷ்ணரும் அன்றாட வாழ்க்கையிலேயே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். வட மாநிலங்களில் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும், பிரியும்போதும், “ஜெய் ஸ்ரீராம்” என்றோ, “ராம் ராம்” என்றோ, “ஜெய் ஸ்ரீகிருஷ்ணா” என்றோ தான் சொல்லிக்கொள்வார்கள். அதே ஒருவனின் குணாதிசயம் சரியில்லை என்றால் அவர்கள் சொல்லுவது அவன் நல்லவன் அல்ல என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். உஸ்மே ராம் நஹீம் ஹை! என்றே சொல்கின்றார்கள். அந்த அளவுக்கு ஸ்ரீராமன் ஒரு மரியாதைக்குகந்த புருஷோத்தமனாய் இன்றும் வாழ்ந்து வருகின்றான். ராமாயணம் நிகழ்ந்ததுக்கு அடையாளமாக பூகோளம், தொல்பொருள் ஆராய்ச்சி, சரித்திரச் சான்றுகள், கலாசாரச் சின்னங்கள், காவியத்தின் குறிப்புகள் என்று ஏராளமாய்க் கிடைக்கின்றன. டாக்டர் ராம் அவதார் என்பவர் செய்த ராமாயண ஆராய்ச்சியில் 195 இடங்களை ராமரும், சீதையும் சென்ற இடங்களாய்க் கண்டறிந்துள்ளார். அவற்றில் சிருங்கிவேரபுரி என்றழைக்கப் பட்ட சிருங்கேரி, பாரத்வாஜ ஆசிரமம் (அலஹாபாத்), சித்ரகூடம், பஞ்சவடி, சீதாசரோவர், சீதாமடி, ஜனக்பூர், தர்பங்கா, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம், ராமநதீஸ்வரம், புள்ளப் பூதங்குடி ஆகிய இடங்களும் இடம் பெறுகின்றன. ஸ்ரீலங்காவில் சீதை சிறை இருந்த அசோக வனம் தற்போது “அசோக் வாடிகா” என்ற பெயரில் அழைக்கப் பட்டு புண்ய ஸ்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் பாதுகாக்கப் படுகின்றது.

இந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. ஸ்ரீராமன் பிறந்தபோது விண்மீன்களும், கோள்களும் இருந்த நிலை குறித்து ஆய்வாளர்கள் மென்பொருள் மூலம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் ஸ்ரீராமன் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சுக்லபட்ச நவமிதிதியில் பிறந்தார் என்னும் வால்மீகியின் குறிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த ஜோதிட அடிப்படையில் ஆராயப் பட்ட இன்னொரு விஷயம் கைகேயி ஜோதிட சாத்திரத்தில் வல்லுநர் எனவும், புனர்பூச நட்சத்திரத்தை சூரியன், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரஹங்கள் சூழ்ந்திருப்பதால் அரசனுக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்தே ஸ்ரீராமன் பட்டாபிஷேஹம் நடைபெறுவதைத் தடுத்துத் தன் கணவனே அந்தச் சமயம் ஆட்சியில் இருக்குமாறு செய்தாள் எனவும் சொல்லுவார்கள். பரதனும் பதவி ஏற்க மறுக்கவே அப்போது ஆட்சியில் இருந்த தசரதன் மரணம் அடைந்தான் எனவும் சொல்கின்றனர். நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி ஸ்ரீராமநாமத்தை ஒரு முறை கூறினாலே ஆயிரம் முறை கூறியதற்குச் சமம் என்கின்றனர் ஆன்றோர்கள். துளசிதாசரும், தியாகராஜ ஸ்வாமிகளும் ஒன்பது கோடி முறை ஸ்ரீராம நாமாவைக் கூறி ஜபித்து வந்ததால் ஸ்ரீராமன் நேரிலேயே வந்து அவர்களுக்கு தரிசனம் அளித்திருக்கின்றார். கும்பகோணத்தை அடுத்த கோவிந்த புரத்தில் போதேந்திராள் அதிஷ்டானத்தில் அன்றும், இன்றும், என்றும் ஸ்ரீராமநாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அயோத்தியிலும், குஜராத் ஜாம்நகரிலும் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அகண்ட ராமநாம பஜனை கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

"வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே!
வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!"

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு. மேற்கண்ட ஸ்லோகத்தின் அர்த்தமும் அதுவே. அப்படி என்னதான் அந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றது? தர்மத்தின் பாதையில் வாழச் சொல்லிக் கொடுக்கின்றது. அந்த தர்மமே மானுட உருவெடுத்து வந்த ஸ்ரீராமன் என்றும் சொல்லுகின்றது.

அதிலும் பகைவன் ஆன வாலி, மாரீசன், ராவணன் போன்றோர் பாராட்டும்படியாக ஸ்ரீராமன் தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலனாக வாழ்ந்து மரியாதைக்கு உரிய புருஷ உத்தமனாய் இருந்து காட்டினான். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ,அங்கெல்லாம் அவன் பக்தன் ஆன ஆஞ்சநேயன் இருப்பான். ஆஞ்சநேயன் இல்லாமல் ராமாயணம் இல்லை. வேதமாக இருக்கும்போது ஞானமார்க்கத்தை உபதேசித்த வேதங்கள், ராமாயணமாக மாறியதில் தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லுகின்றது. வேதமே தர்மம். தர்மமே வேதம். எத்தனை கஷ்டம் வந்தாலும் தர்மத்தின் வழிசென்றால் அஞ்சனாபுத்திரன் துணையுடன் வெல்லலாம்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்,
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்!

ஸ்ரீராம் ஜயராம், ஜயஜயராம்!

No comments:

Post a Comment