
ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேஹம் நிச்சயம் செய்தாயிற்று. ஊரில் அனைவரும் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர். மந்தரைக்குச் செய்தி தெரிகின்றது. உடனேயே கைகேயியிடம் சென்று சொல்கின்றாள் மந்தரை. கைகேயியோ பரிசளிக்க அதைத் தூக்கி எறிந்த மந்தரை ராமன் முடி சூடினால் கைகேயியின் நிலைமை மோசமடையும் எனச் சொல்ல, கைகேயி அதைக் கேட்க மறுத்தாள். ராமன் முடி சூடுவது தனக்குச் சம்மதமே என்கின்றாள். ஆனால் தேவாதிதேவர்களுக்கோ அவதார நோக்கம் நிறைவேற வேண்டுமே? கவலை வந்தது. சரஸ்வதியை வேண்ட அவள் கூனியின் நாவில் புகுந்தாள். கூனியான மந்தரை கைகேயியைப் பார்த்து, “உன் தந்தைக்கும், ஜனக மஹாராஜாவுக்கும் ஜன்மப் பகை என்பதை அறியாயா? தசரதச் சக்கரவர்த்திக்காகவே அந்தப் பகை முற்றாமல் இருக்கிறதையும் அறிவாய் அல்லவா? இப்போது ஸ்ரீராமன் முடி சூட்டிக் கொண்டு அரசன் ஆனால் சீதை பட்டமஹிஷி! அதை நினைவில் வைத்துக் கொள், சீதை நிர்பந்தித்தால் ஜனகன் உன் தந்தையோடு போருக்கு வந்தால்? உன் தந்தை கதி என்ன ஆகும்? யோசி!” எனப் பலவாறு தூண்டுகின்றாள். இத்தனைக்குப் பின்னரே கைகேயி தான் ஏற்கெனவே கேட்ட இரு வரங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்கின்றாள். அப்போது பதினான்கு வருட வனவாசம் செய்யவேண்டும் எனவும் கைகேயி கேட்டாள். அவள் என்னமோ அப்படிக் கேட்டாள் எனினும் அதற்கும் காரணம் இருப்பதாலேயே வாக் தேவி அந்தச் சமயம் கைகேயியின் வாயில் குடி இருந்து கேட்க வைத்தாள். காரணம் பின்னால் வரும்.
வனவாசம் துவங்கியது. ஸ்ரீராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர் காட்டிற்குள் வருகின்றனர். முதன் முதல் பாரத்வாஜ முனிவரின் ஆசிரமம் கண்ணில் படுகின்றது. முனிவரும் ஸ்ரீராமனை வரவேற்றுச் சில காலம் அங்கேயே பர்ணசாலை அமைத்துத் தங்கச் சொல்லுகின்றார். அப்போது சில நாட்களில் பரதன், மூன்று அன்னையருடனும், முனிவர்கள், மற்ற ஜனங்களோடு அங்கே வந்து ஸ்ரீராமனைக் கண்டு செல்கின்றான். இம்மாதிரி பரதன் வரப்போவதை முன்கூட்டி அறிந்தே பாரத்வாஜர் இவ்வாறு கூறினார்.
அதே போல் பதினான்கு வருடம் வனவாசம் செய்த ராமன் ராவணனோடு போரிட்டபோது இந்திரஜித்தை எவராலும் வெல்ல முடியவில்லை. பல்வேறு விதமான யுக்திகள் கடைப்பிடிக்கப் பட்டன. ஆனாலும் மந்திர, தந்திரத்தில் யாராலும் ஜெயிக்க முடியாத இந்திரஜித்தை வெல்லவே முடியாமல், கடைசியில் மிகக் கஷ்டப் பட்டு லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொன்றான். விபீஷணனுக்கு ஆச்சரியம். வியப்போடு லக்ஷ்மணனைப் பார்த்தான். பாராடினான். ராமன் என்ன காரணம் இப்படித் தனியாய்ப் பாராட்டுகின்றாய்? வியப்புடன் வேறே லக்ஷ்மணனைப் பார்க்கின்றாயே எனக் கேட்டான். அதற்கு இந்திரஜித் சொன்ன பதில் வியப்பூட்டியது.
பல்வேறு தவங்கள் செய்த இந்திரஜித் எவராலும் வெல்லமுடியாத வரத்தை மட்டும் பெறவில்லை. பதினான்கு வருஷங்கள் ஊண், உறக்கம் இன்றி இருப்பவனால் மட்டுமே தான் கொல்லப் படவேண்டும் எனவும் வரம் வாங்கி இருந்தான். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. பதினான்கு வருடங்கள் சாமானியமா? ராமன் ஆச்சரியத்தின் உச்சிக்கே போனான். லக்ஷ்மணனைப் பார்த்தான். லக்ஷ்மணன் கூறினான்” “அண்ணலே, தங்களையும் அண்ணியாரையும், காக்க வேண்டி பகல் பொழுதுகளில் மட்டுமின்றி இரவுகளிலும் நான் தூங்கவில்லை. மேலும் தங்களுடன் நான் காட்டிற்குக் கிளம்பும்போது என் தாய் சுமித்திரை எனக்குச் சொன்ன அறிவுரையாவது: உன் அண்ணனும், அண்ணியும் உணவு அருந்தி முடித்த பின்னர் மிச்சம் இருப்பதை மட்டுமே நீ சாப்பிட வேண்டும் என்பதே. ஆனால் எனக்குச் சிரமம் வைக்காமல் நீங்கள் சாப்பிட்டு விட்டு இலைகளையும் நீங்களே எறிந்து சுத்தம் செய்துவிடுவீர்கள். ஆகவே தாங்கள் உண்ட பிரசாதத்தை உண்ணும் பாக்கியமும் எனக்குக் கிட்டவில்லை.” என்று சொல்லிக் கொண்டே தன் அம்பறாத் தூணியைக் கவிழ்க்க சபரி கொடுத்த உலர்ந்த பழங்கள் அதிலிருந்து கீழே விழுந்தன.

டிஸ்கி: நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் படங்கள் அல்ல.
No comments:
Post a Comment