எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Saturday, August 20, 2011

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

சொல்லின் செல்வனான அனுமன் பேசி முடித்ததும் ராமர் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்தோம். அதோடு இருவரும் ஏற்கெனவே ஒருவரை ஒருவர் சிறு வயதிலேயே அறிந்தவர்கள் எனவும் பார்த்தோம் அல்லவா? ஒருவருக்கென மற்றவர் பிறந்திருக்கிறார்கள். அதை இப்போதே அறிந்து கொள்ளவும் போகின்றனர். நடுவில் மாயை இருவரையும் சேர விடாமல் தடுத்தது எனலாமா? அல்லது சரியான நேரத்தில் தான் ராமனை அடையவேண்டும் என அனுமன் எண்ணியதாய்க் கொள்ளலாமா? எது எவ்வாறாயினும் அனுமனின் தூது நன்மையாகவே முடிந்தது. ராமரின் பேச்சைக்கேட்ட லக்ஷ்மணனும் மகிழ்வோடு அனுமனைப் பார்த்து, தாங்கள் இருவரும் சுக்ரீவனின் நட்பை நாடியே வந்திருப்பதாய்க் கூறினான். சுக்ரீவனின் ஆணையை ஏற்று எங்களைக் காண இங்கே வந்திருக்கும் அனுமனின் விருப்பம்போல் நடப்போம் என்றும் கூறினான். அனுமனுக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ‘என் அரசனான சுக்ரீவனுக்கு அரசாட்சி மீண்டும் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது போலும். அதனாலேயே இவ்வளவு உயர்ந்த மனிதர்களின் நட்பு கிடைக்கிறது. ‘என்றெல்லாம் எண்ணி மகிழ்ந்த அனுமன் ராமரிடம் காட்டுக்கு வந்த காரணத்தை வினவினான்.

லக்ஷ்மணன் ராமரின் கதையை மீண்டும் ஒரு முறை அனுமனிடம் கூறுகிறான். ராமன் தகப்பன் சொல்லுக்காகப் பட்டத்தைத் துறந்ததில் இருந்து இப்போது ஸீதை அபகரிக்கப்பட்டது வரையிலும் அனைத்தையும் சொல்லி முடித்தான். ராமாயணத்தில் இவ்வாறு பலமுறை ராமாயணம் பலராலும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். பின்னர் சுக்ரீவனைப் பற்றிக் கபந்தன் என்னும் கந்தர்வன் சொன்ன விஷயங்களைக் கூறிய லக்ஷ்மணன் அவன் சொன்னதாலேயே சுக்ரீவனை நாடி தாங்கள் வந்திருப்பதாயும், உலகத்தைப் பாதுகாக்கும் வல்லமை படைத்த ராமன் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி அவனிடம் அடைக்கலம் நாடி வந்திருப்பதைக் கூறுகிறான். மனைவியை இழந்து ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கி இருக்கும் ராமருக்கு வேண்டிய உதவிகளை சுக்ரீவன் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறான். அவ்வளவில் அனுமன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது தங்கள் அதிர்ஷ்டம் எனவும், வாலியினால் துன்புற்று மனைவியை இழந்து, ராஜ்யத்தையும் இழந்து ஒவ்வொரு இடமாக அலையும்சுக்ரீவனுக்கு உங்கள் உதவி தேவைப்படும். எனக்கூறிவிட்டு அவர்களைத் தன் தோளில் சுமந்த வண்ணம் சுக்ரீவன் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் அனுமன்.

சுக்ரீவனிடம் ராமரின் பெருமையை எடுத்துக்கூறி அத்தகைய பெருமை வாய்ந்த ராமர் இப்போது சுக்ரீவனின் உதவியை நாடி வந்திருப்பதையும் கூறுகிறான். சுக்ரீவனோ தர்மத்தின் பாதையில் இருந்து தவறாத ஸ்ரீராமர் தன் நட்பை நாடி வந்திருப்பது தனக்குச் செய்த கெளரவம் எனக் கூறி விட்டுத் தன் கையை நீட்டி ராமரைப் பிடிக்கச் சொல்லி தனது நட்பை ராமருடன் உறுதி செய்து கொள்கிறான். ராமரும் அவ்வாறே சுக்ரீவனின் கையை இறுகப் பற்ற அனுமன் அக்னியை மூட்ட, இருவரும் அக்னியை வலம் வந்து வணங்கி, இனித் தங்கள் இன்பம், துன்பம் அனைத்தும் ஒன்றே எனக்கூறி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இதைக்கம்பர் கூறுகையில்

"மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் தீயேரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர்த்துணைவன் என்றான்.

என்று கூறுகிறார்.