எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, April 1, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

வால்மீகி ராமாயணம் கிமு 2 அல்லது மூன்றாம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்கலாம் என்று சொல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து வந்தது யோக வாசிஷ்ட ராமாயணம், பிரம்மானந்த தத்துவ சங்கிரஹ ராமாயணம், உத்தர ராம சரிதம் போன்றவையாகும். தமிழில் ஒன்பதாம் நூற்றாண்டில் கம்பர் ராமாயணத்தை எழுதினார். சங்க காலத்திலேயே ராமாயணம் பாடப் பட்டிருக்கின்றது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிலும் ராமர் பாதம் பதியாத இடங்களே இல்லை என்னும்படியாகப் பதினான்கு வருஷ வனவாசத்தின் போது ராமர் அனைத்து மாநிலங்களிலும் விஜயம் செய்திருக்கின்றார் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன.

வடமொழியில் துளசிதாசர் “ராம சரித மானஸ” என்னும் தன்னுடைய ராமாயண நூலை கி.பி. 1513-ம் ஆண்டில் இயற்றினார். மலையாள மொழியில் பதினான்காம் நூற்றாண்டில் ராமாயணம் எழுத்தச்சனால் எழுதப் பட்டது. தெலுங்கில் ரங்கநாதரின் தவிபாதி ராமாயணம், திக்கண்ணா என்பவரின் நிர்லகதா ராமாயணம், பாஸ்கர ராமாயணம் போன்றவை எழுதப் பட்டது. ஒரிய மொழியில் பதினாறாம் நூற்றாண்டில் பலராம்தாஸ் என்பவரால் ராமாயணம் எழுதப் பட்டது. அஸ்ஸாமிய மொழியில் மாதங்குளி என்பவரும், குஜராத்தியில் அஜாஷ்ட மல்லன் ஹரிதாஸ், துர்க்காதாஸ் ஆகியோரும் ராமாயணம் எழுதினார்கள். மராட்டி மொழியில் ஏகநாதரின் பாவிர்த்த ரமாயணம் கிருஷ்ண தாஸ் முத்கல் யுத்தகாண்டம், முத்தேவரின் ராமாயணம், சமர்த்த ராமதாஸரின் லகு ராமாயணம் போன்றவை பதினேழாம் நூற்றாண்டில் எழுதப் பட்டவை.

வங்க மொழியில் கிருதிலாஸ் ஓஜாஸ்ரீராம பாதாஞ்சலி என்ற பெயரிலும் உருது மொழியில் ராமாயண குஷ்டார் என்ற பெயரில் முன்ஷி ஜெகந்நாத குஷ்டார் என்பவரும் எழுதினார்கள். நேபாள மொழியில் பானுபட் என்பவர் அத்யாத்ம ராமாயணம் எழுதினார். ராமரின் புகழ் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும், முக்கியமாய்க்கீழை நாடுகளில் பரவி இருக்கின்றது. தாய்லாந்து நாட்டின் அரசர்கள் தங்களை “ராமா” என அழைத்துக் கொள்ளுகின்றனர். தற்சமயம் இருந்த அரசர் பெயர் “பூமிபால் அதுல்யதேஜ் 9-வது ராமா” ஆவார். மேலும் தாய் மொழியில் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட ராம காவியம் “ராம கீர்த்தி” என்ற பெயரில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகின்றது. தாய்லாந்து நாட்டு குத்துச் சண்டை விளையாட்டு, அனுமன், வாலி, சுக்ரீவன் முதலிய வான்ர வீரர்களின் சண்டை முறைகளை அடிப்படையாகக்கொண்டது என்று சொல்லுகின்றனர். மேலும் தாய்லாந்து நாட்டின் பெயர் அவர்களது அரசியல் சட்டத்தின் படியாக “ஷ்யாம் தேசம்” அதாவது “விஷ்ணு நாடு” என்ற பெயரில் அழைக்கப் படுகின்றது. அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி என்ற பெயர்களில் ஊர்கள் அங்கே உண்டு.

பினாங்கில் உள்ள ஒரு மசூதியில் உள்ள பெயர்ப்பலகையில் “இந்த மசூதி 1974-ம் ஆண்டு ஸ்ரீ ராம பாதுகையின் ஆணைப்படி கட்டப்பட்டது” எனப் பொறித்திருப்பதாய்ச் சொல்லுகின்றார்கள். மலேசிய அதிபரோ தாம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது, “ஸ்ரீராமதூளி மேல் ஆணையாக” என்று சொல்லித் தான் பதவி ஏற்பார் எனச் சொல்கின்றனர். மலேசியப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட “ஹிகாய்த் செரிராமா” என்ற மலாய் மொழி ராமாயணம் பாடமாகப் பயிற்றுவிக்கப் படுகின்றது. மலேசிய சுலதானை, “ ராஜ பரமேஸ்வர” என்றும் ராணியை “ராஜ பரமேஸ்வரி” என்றும் ராஜகுமாரனை “லக்ஷ்மண” என்றும் அழைக்கின்றனர்.

தொடர்ந்து எழுத முடியாமல் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.

No comments:

Post a Comment