எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Saturday, March 28, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

ஸ்ரீராமன் பல்வேறுவிதமான பெயர்களால் அழைக்கப் படுகின்றான் அல்லவா? ஒரு ஆங்கிலப் பழமொழி உள்ளது, "ரோஜாப்பூவை எந்தப் பெயரிட்டு அழைத்தால் என்ன" எனும் பொருள்படி, "A ROSE IS A ROSE IS A ROSE" என. அது போல சர்வ ரட்சகனை எந்தப்பெயரிட்டு அழைத்தாலும் என்ன? ஆனாலும் இங்கே பாருங்கள், தசரதன் அவனை அழைப்பதையும், தாயான கோசலை அழைப்பதையும், வசிஷ்டர் போன்ற பிரம்ம ரிஷிகள் அழைப்பதையும், மற்ற ரிஷிமுனிவர்கள் அழைப்பதும், மக்கள் சொல்லும் பெயரும், சீதையின் தோழிகள் அடையாளம் காட்டுவதும் இப்படித் தானாம்.

"ராமாய ராமப்த்ராய ராமசந்த்ராய வேதஸே!
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:"

வசிஷ்டர் போன்ற பிரம்மரிஷிகளால் "ராமா" என்றும், தந்தை தசரதனால் வாஞ்சையுடன் "ராமபத்ரா" எனவும், தாயான கோசலை தன் அன்பை வெளிக்காட்டும் விதமாய் "ராமச்சந்த்ரா" எனவும், மற்ற ரிஷிமுனிவர்களால் "வேதஸ்"(படைக்கும் கடவுள் ஆன பிரம்மதேவனைக் குறிக்கும் சொல்) எனவும், நாட்டுக் குடிமக்களாலும், மற்றவர்களாலும் "ரகுநாதன்" எனவும், ஸீதையின் தோழியர்களால் "ஸீதாபதி" என்றும் ஒவ்வொருவராலும், ஒவ்வொரு விதமாய்ப் போற்றப் படும், "ஹே, ராமசந்த்ரமூர்த்தியே, உமக்கு நமஸ்காரம்."

அடுத்து வருவதைப் பாருங்கள். தசகண்ட ராவணனே தன் சைனியம் யுத்தத்தில் சின்னாபின்னமாக்கப் பட்டதை அறிந்து, வந்திருப்பவன் யார் என உள் மனதிலும் உணருகின்றான். அதைச் சொல்லவும் சொல்கின்றான்.


"யஸ்ய விக்ரம மாஸாத்ய ராக்ஷஸா நிதனம் கதா:!
தம் மன்யே ராகவம் வீரம் நாராயணமனாமயம்!!"

"ஆஹா, நம்முடைய மொத்த சைனியமும் இவனால் அழிக்கப் பட்டுவிட்டதே? எனது சைதன்யமும் அழிக்கப்பட்டுவிட்டது. இவனுடைய வீர, தீர, பராக்கிரமாத்தால் அன்றோ ராக்ஷஸர்கள் அழிந்தனர்! அப்போது இவன் சாமானிய மனுஷன் அல்ல! இவன் அந்த சாட்சாத் ஸ்ரீமந்நாராயணனே ஆவான்." என்று ராவணன் சொல்கின்றான். இப்படிப் பகைவனாலேயே போற்றப் பட்ட ராமனை நினைத்தாலே போதுமே!

அடுத்து ச்யவன மஹரிஷி சொல்லுவது.

"ஸ்ருதி ஸ்ம்ருதி புராணே ஷூ ராமநாம ஸமீரிதம்!
தந்நாம கீர்த்தனம் பூய: தாபத்ரய வினாசனம்!!"

வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லப் பட்டிருக்கின்ற ஸ்ரீராம நாமாவை அடிக்கடி ஜபித்து வந்தால் சகல துக்கங்களும் நசிந்துவிடும் என்று ச்யவன மஹரிஷி சொல்கின்றார். ஆகவே ஸ்ரீராம நாமாவை இடைவிடாது ஜபித்து வருகின்றவர்களுக்கு அனைத்து ஆபத்துகளும் நீங்கும் என்பது உறுதி.

ஸ்ரீராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்.

அடுத்து ஸ்ரீராமனின் சில சிறப்புகள்.

No comments:

Post a Comment