எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Thursday, March 26, 2009

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

சென்ற வாரம் எங்க வீட்டுக்கு வந்திருந்த ஸ்ரீகாழியூரர் அவர்கள் நாம ஜபத்தின் மகிமை பற்றிச் சொன்னார். ஏற்கெனவே சின்ன வயசிலே இருந்து ஸ்ரீராமஜயம் எழுதும் வழக்கம் உண்டு என்றாலும் அவ்வப்போது இயலாது. ஆகவே வாயால் சொல்ல ஆரம்பிச்சேன். பலவருடங்களாய்த் தனி வழி சென்றாலும் சரி, சேர்ந்து போனாலும் சரி, எங்கே போனாலும், எது செய்ய ஆரம்பிச்சாலும் ஸ்ரீராமஜயம் சொல்லியே ஆரம்பிக்கும் வழக்கம் இன்னும் இருக்கு. மனதுக்குக் கஷ்டமாய் இருக்கும் நேரங்களிலும், அச்சம் ஏற்படும்போதிலும், காரணம் தெரியாத கலக்கம் ஏற்பட்டாலும் ஸ்ரீராமஜயம் சொன்னால் நிச்சயமாய் அது விலகிச் செல்வதையும் கண்கூடாய் உணர்ந்திருக்கிறேன். இனம் புரியாத ஒரு நிம்மதி மனதை ஆக்கிரமிக்கும். இப்போது ராமநாமத்தின் மகிமை பற்றிக் கொஞ்சம் சொல்கின்றேன்.

அனைவருக்கும் தெரிஞ்சது இந்த விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம்:
"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!"

இந்த ஸ்லோகமானது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அகில உலகுக்கும் அதிபதியான சர்வலோக ரட்சகன் ஆன ஈஸ்வரன், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியான சாட்சாத அம்பாளிடம் சொல்லுகின்றார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பலன்களைக் கூறும் சமயம், ஈசன் கூறுவதாவது. "அனைத்திலும் உயர்ந்தது இந்த "ராம" நாமமே! இந்த "ராம" நாமத்தை ஜபித்து வந்தாலே சஹஸ்ரநாமத்தைச் சொன்னதன் அத்தனை பலனும் ஒருவனுக்குக் கிட்டி விடுகின்றது.அத்தனை உயர்வானது இந்த "ராம" நாமம்." என்று சொல்கின்றார்.

ராமநாமம் உருவான விதம்:

எட்டெழுத்து மந்திரமான "ஓம் நமோ நாராயணாயா' வில் உள்ள "ரா" என்னும் எழுத்தும், ஐந்தெழுத்து மந்திரமான "ஓம் நம சிவாயா" வில் உள்ள "ம" என்னும் எழுத்தும் சேர்ந்தே "ராம" என்னும் இரண்டெழுத்து மந்திரமானது. ஓம் நமோ நாராயணாயாவில் உள்ள "ரா" வை எடுத்துவிட்டால் மிச்சம் இருப்பது "ஒம் நமோ நா அயனாயா" என்றாகி விடுகின்றது. அதே போல் "ஓம் நம சிவாயா" வில் உள்ள "ம" வை எடுத்துவிட்டால் "ஓம் ந சிவாயா" என்றாகின்றது. ஓம் நமோ நா அயனாயா என்றால் நா அயனாயா= கண்களே இல்லாத என்ற பொருள் ஆகின்றது அல்லவா? அதே போல் இப்போது ஓம் ந சிவாயா என்றால் ந சிவாயா=சுகமில்லாதவன், மங்களமில்லாதவன் என்ற பொருள் அமைந்து விடுகின்றது அல்லவா? அப்போது இந்த ரா வும், ம வும் இல்லை என்றால் பொருளே மாறியும் விடுகின்றது. இந்த ரா வும் ம வுமே பொருளைக் கொண்டு வருகின்றது. இவை இந்த எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரச் சொற்களின் ஜீவன் என்றே சொல்லலாம். ஆகவே ராம நாமம் தாரக மந்திரமாகி விடுகின்றது.

பாசுரப் படி ராமாயணம் எழுதணும்னு நினைப்பு. முடிஞ்சால் புத்தகம் கிடைச்சால் நாளையில் இருந்து எழுதறேன். இல்லைனால் என்ன? ஸ்ரீராமர் பற்றி எழுத விஷயமா இல்லை? நாளை பார்ப்போம். ஸ்ரீராமநவமி வரை தினம் ஒரு பதிவாய் வரும். எந்தத் திரட்டியிலும் சேர்க்கப் போவதில்லை. தானாய்த் தெரிந்து கொண்டு பின்னூட்டம் இடுபவர்கள் இடலாம் என்பதற்காக பின்னூட்டப் பக்கம் திறந்தே இருக்கின்றது.

ஸ்ரீராமஜயம்!
ராம ஜயம் ஸ்ரீராம ஜயம்
நம்பின பேருக்கு ஏது பயம்!

1 comment:

  1. Thanku My child for ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்! .God bless you

    ReplyDelete