எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Saturday, August 8, 2009

ராம நாம உபதேசம் சாதாரணமானதா???

“ராம” என்ற இரண்டெழுத்து சாதாரணமாய்த் தோன்றலாம். ஆனால் இந்த ராம நாமம் உபதேசம் பெறவேண்டிக் காத்திருந்தவர்களில் கபீர்தாஸரும் ஒருவர். பிறப்பால் முஸ்லீம் என்று சொல்லப் பட்டாலும், (சிலர் பழக்கவழக்கங்களும், சுற்றுச் சூழலுமே காரணம் என்றும் சொல்லுவார்கள்) எப்படியானாலும் கபீரின் மனம் பூராவும் ராம நாமத்திலேயே லயித்தது. அதில் தான் இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய ஆநந்தம் இருக்கிறது என்பதைப் பூரணமாய் உணர்ந்தார் கபீர். ஆனால் இந்த மந்திரத்தைத் தாமாகச் சொல்லுவதை விட குரு மூலம் உபதேசம் பெற்றுச் சொன்னால்?? ஆஹா! அத்தகைய குரு நமக்குக் கிடைப்பாரா?? ஏன் கிடைக்க மாட்டார்? இதோ ராமாநந்தர் இருக்கிறாரே? தினம் தினம் ராமாநந்தரின் வழிபாட்டு சமயத்தில் ராம, லக்ஷ்மணர்கள் நேரிலேயே தோன்றி வழிபாட்டை ஏற்பது வழக்கம். அத்தகையதொரு குரு மட்டும் கிடைத்துவிட்டால்??? தன் நெசவுத் தொழிலைக் கூட மறந்து ராம நாமத்தில் லயித்துப் போயிருந்த கபீருக்கு, ராமாநந்தர் உபதேசம் என்பது சும்மா வெளிப்பார்வைக்கு மட்டுமே. என்றாலும் அந்த ராமன் கபீரின் இந்தச் சின்னஞ்சிறு ஆசை மூலம் வேறே எதையோ யாருக்கோ உணர்த்த விரும்பினானோ?

கபீரும் ராமாநந்தர் உபதேசிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்துடனேயே வேறு நபர்களையும் நாடினார். யாருமே கபீருக்கு ராம நாமத்தை உபதேசிக்கவில்லை. ராமாநந்தரிடமே நேரிடையாகச் சென்று வேண்டுகோள் விடுத்தார் கபீர்தாஸர். ராமாநந்தர் மறுத்துவிட்டார். அந்நிய மதத்தைச் சேர்ந்தவனுக்கு ராமநாம உபதேசமா? இகழ்ச்சியுடனேயே ராமாநந்தர் கபீரை அங்கிருந்து போகச் சொன்னார். கிட்டத் தட்ட விரட்டப் பட்டார் கபீர். ராமாநந்தரின் அன்றைய வழிபாடு தொடர்ந்தது . வழிபாடு முடிவதற்குள்ளாக ராம, லக்ஷ்மணர்கள் வந்துவிடுவார்கள். ஆனால்,, ஆனால் இன்று வரவில்லையே?? ஏன்?? என்ன குறை?? பூஜைக்கான பொருட்களில் எதுவும் குறைவில்லை. ஆசார, அனுஷ்டானங்களிலும் குறைவில்லை. என்றாலும் நேரில் வந்து இத்தனை நாட்கள் பூஜையை ஏற்ற ராமன் இன்று வரவில்லையே? ஏன்? என்ன காரணம்? துன்பம் அடைந்தார் ராமானந்தர்.

மெல்ல எழுந்து வெளியே வந்தார். மடத்தின் வாயிலில் நின்று கொண்டு யோசித்தவண்ணம் அங்குமிங்கும் பார்த்தார். சுற்றுமுற்றும் தேடினார். அப்போது அசரீரி போன்ற ஒரு குரல்,” அண்ணா, அண்ணா, என்ன இது?” என்று கேட்டது. யார் பேசுவது?? குரல் மட்டுமே வருகிறதே? ராமாநந்தர் உற்றுக் கவனித்தார். “லக்ஷ்மணா, என்ன விஷயம்?” என்று மறு குரலும் கேட்டது. ஆஹா, ராம, லக்ஷ்மணர்கள் கடைசியில் நம் பூஜைக்கு வந்தே விட்டார்களா??? ராமாநந்தர் உற்சாகத்தில் ஆழப் போகும் சமயம். லக்ஷ்மணன் என்று அழைத்த குரல்” அண்ணா என்ன இது? இன்று ராமாநந்தரின் வழிபாடலில் கலந்து கொள்ளாமல் திரும்பலாம் என்று சொல்லிவிட்டாயே?” ராமாநந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன நம் வழிபாட்டில் ராமன் கலந்து கொள்ளப் போவதில்லையா? ராமன் குரல் கேட்டது அப்போது,” ஆம், தம்பி லக்ஷ்மணா, உத்தம பாகவதன் கபீர், என்னைத் தவிர வேறு யாரையுமே எப்போது நினையாதவன். அவன் என்னுடைய நாமாவைச் சொல்லுவதைக் கேட்கும்போதே எனக்குப் பரவசமாய் இருக்கும். அத்தகையவன் ராமாநந்தரிடம் உபதேசம் பெற வந்தான். அவனை விரட்டி விட்டார்களே! என் பக்தன் விரட்டப் பட்ட இடத்தில் எனக்கு என்ன வேலை? வா, நாம் போகலாம்.” எங்கும் அமைதி. ராமாநந்தர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் கண்களால் ராமனும், லக்ஷ்மணனும் அங்கிருந்து திரும்புவதையும் உணரமுடிந்தது.

ஆஹா, ராமனே வந்து கபீருக்கு மந்திர உபதேசம் செய்யாதது என் தவறு எனச் சுட்டிக் காட்டிவிட்டானே? அப்படி எனில் அந்தக் கபீர் எத்தனை பெரிய பாகவதோத்தமனாய் இருக்கவேண்டும்? அவனுடைய தேடுதல், ராமனைப் பற்றிய பக்தி எத்தனை விசாலமாய், ஆழமாய் இருந்திருக்கவேண்டும். நாம் தான் ராமனைப் பற்றிப் பாடுகிறோம், பேசுகிறோம், ராமன் நேரில் வருகின்றான் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு? நம்மிலும் பெரிய பரமபாகவதன் கபீரை அவமதித்துவிட்டேனே? ராமாநந்தர் கபீர் எங்கு இருப்பார் என விசாரித்தார். கங்கை நதிக்கரையில் இருப்பார் எனத் தெரிய வந்தது. உடனேயே அங்கே விரைகிறார். தூரத்தில் இருந்தே ராமாநந்தர் வருவதைப் பார்த்துவிடுகிறார் கபீர். குருவானவர் வருகிறார். எதற்கு, என்ன என நமக்குத் தெரியாது. பெரும் பதட்டத்தோடு வேறு வருகிறார். அதை அதிகப்படுத்தும் வண்ணம் நாம் இன்னும் நேரில் அவருக்கு முன்னால் போய் தொந்திரவு செய்யக் கூடாது.

ஒரு க்ஷணம் தான். கபீர் தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கங்கைக் கரையின் படித்துறைப் படிகளில் ஒன்றில் படியோடு படியாகப் படுத்துக் கொண்டார். அந்த வழியாக ராமாநந்தர் வருவார் என்ற நிச்சயத்துடன் காத்திருந்தார். ராமாநந்தரும் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கபீரைத் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. படிகளில் இறங்கிப் பார்ப்போம் என இறங்கினால், படியென நினைத்து அவர் மிதித்தது, யாரோ மனிதனை அன்றோ? ஆஹா, என்ன இது? “ராம், ராம்” என்று அலறிக் கொண்டே நகர்ந்தார். கீழே இருந்து பதில் வந்தது. “வந்தனம் குருதேவரே! என்னைக் காலாலும் தீண்டி, மந்திர உபதேசமும் செய்து வைத்தமைக்குப் பலகோடி வந்தனங்கள்” கபீரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது

Friday, August 7, 2009

ராம என்ற இரண்டெழுத்தின் மகிமை!

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்றிரண்டெழுத்தினால்.

இந்தப் பாடலில் ராம என்ற இரண்டெழுத்தின் மகிமை பற்றிக் கூறி உள்ளது. ராம என்ற இரண்டெழுத்தை ஜபித்து வந்தால் நன்மையும், செல்வமும் தருவதோடு மட்டுமல்லாமல், நம் பாவங்களும் தொலையும் என்றும், மறு ஜென்மம், அதனால் மரணம் என்றெல்லாம் இல்லாமல் முக்தியை அடைவோம் இந்த இம்மையிலேயே என்றும் சொல்லுகின்றது. இத்தனைக்கும் ராமாயணம் எழுதியது என்னமோ ஒரு கொள்ளைக்காரர் தான். ராமாயணத்திலேயே இந்த ராம என்ற இரண்டெழுத்தின் வல்லமை பற்றி அநேக இடங்களில் சான்றுகள் கூறி உள்ளார் வால்மீகி. அவ்வளவு ஏன்? வால்மீகி இந்தக் காவியத்தை எழுதுமளவுக்கு புலமை பெற்றதே “ராம” என்ற இரண்டெழுத்தை ஜபித்துத் தவம் செய்ததால் அல்லவோ?

ரத்னாகர் என்னும் கொள்ளைக்காரன் தன் குடும்பத்தையே கொள்ளை மூலம் காத்து வந்தான். ஒரு சமயம் சப்தரிஷிகளும் கானகத்தின் வழியே பிரயாணப் படும் போது அவர்களையும் தன்னியல்புப் படி கொள்ளை அடிக்க முயல, அவர்களோ அவனுக்குப் புத்திமதி சொல்லித் திருத்த முயன்றனர். இந்தக் கொள்ளை அடிப்பதால் வரும் பாவமூட்டையை அவன் ஒருவனே சுமக்கவேண்டும் எனவும், அவன் குடும்பம் இதற்கு ஒத்துழைக்காது எனவும் புரிய வைத்தனர். அவனுக்கும் புரிந்துபோனது. “ராம” நாமத்தை உபதேசித்தனர் சப்தரிஷிகளும் அந்தக் கொள்ளைக்காரனுக்கு. இதை உச்சரித்தபடியே தவம் செய்யச் சொன்னார்கள். அவனும் விடாமுயற்சியுடன் ராம நாமத்தை உச்சரிக்க உச்சரிக்க மெய்ம்மறந்து, தன்னை மறந்து, பசி, தாகம் என்ற எந்த உணர்வும் இல்லாமல் தவம் செய்ய ஆரம்பித்துவிட்டான். அவனைச் சுற்றி மண் மூடிப் புற்றாக மாறியது. உயரமாய்ப் புற்று வளர்ந்தும் விட்டது. என்றாலும் அவன் விடாமல் ராம நாமத்தை ஜபித்து வந்தான்.

திரும்பிச் சென்ற சப்தரிஷிகள் கானகத்தைக் கடக்கும்போது ரத்னாகரின் நினைவு வந்து அவனை அழைத்தனர். ராம நாம உச்சரிப்பும் அவர்களைக் கவர்ந்தது. ரத்னாகரை அழைக்க அவனோ புற்றிலிருந்து வெளிப்பட சப்தரிஷிகள் மனம் மகிழ்ந்து அவனை வால்மீகி என அழைத்தனர். அவனால் ஒரு பெரிய காரியம் நடக்க இருப்பதையும் குறிப்பால் உணர்த்திச் சென்றனர். வால்மீகியும் ராமாயணத்தைப் படைக்கும் திறனைப் பெற்றார். இது எதனால் நடந்தது? ராம நாமத்தை உச்சரித்ததால் அன்றோ? அதுவும் ராமர் இருக்கும்போதே ராமாயணத்தை அரங்கேற்றமும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது வால்மீகி ஒருவருக்குத் தான்.

இத்தகைய மனிதருள் மாணிக்கம் ஆன ராமனைப் பற்றி மஹா பாரதம் என்ன சொல்கிறது? உத்தராயனம் வருவதை எதிர்நோக்கி. பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார் . அப்போது அரசனுக்குரிய தர்மங்களைப் பற்றி யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் கூறுகின்றார். அப்போது பிறந்ததே விஷ்ணு சஹஸ்ரநாமம். இந்த நாமாவளிகளிலேயே, “ராம” நாமத்தை மட்டும் உயர்வாய்க் கூறுகின்றார். தர்மங்களில் சிறந்தது நாமங்களை உச்சரித்தலே என்று சொல்லும் பீஷ்மர், அதிலும் “ராம” என்னும் இரண்டெழுத்து மந்திரத்தை உச்சரித்தல் அதனிலும் உயர்வானது என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார் கீழ்க்கண்ட ஸ்லோகம் மூலமாக/

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராநனே!!” என்று சொல்லுகின்றார். மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் அந்த வேளையிலும், “ராம” நாமத்தை உச்சரிப்பதைப் பற்றிக் கூறி, அதுவே அனைத்திலும் சிறந்த உயர்வான ஒன்று என்றும் கூறுகின்றார்.