எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Friday, July 30, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!


"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிதமஸ்த காஞ்சநம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ரக்ஷ ஸாந்தகம்!"



மன அமைதியின்றித் தத்தளிக்கும் அஞ்சனையைக் கண்டு குறத்தியான உமை அவளை நோக்கி வருகிறாள்.
அவளைக்கண்டு உன் கணவனும், பிள்ளையும் வீடு திரும்பவில்லை எனக் கவலைப்படுகிறாயா என வினவ, அஞ்சனையும் அதை ஆமோதிக்கிறாள். உமையாள் வாக்கென்று நினைத்துக் கேட்டுக்கொள் என்று உமையாளே அவளுக்குச் சொல்லிவிட்டுக் குறி சொல்ல ஆரம்பிக்கிறாள். அதற்குள்ளாக இங்கே அநுமனைத் தூக்கிச் சென்ற குரங்காட்டியைத் துரத்திச் சென்றான் கேசரி. இவன் உண்மையில் குரங்கல்ல என்றும் தெய்வப் பிறவி என்றும் நீ வித்தை காட்டிப் பிழைக்க வேறு குரங்குகள் வனத்தில் கிடைக்கும் என்றும் அநுமனை விடும்படியும் வேண்டுகிறான். மாபெரும் காரியம் ஒன்றை நிறைவேற்றப் போகிறவருக்குத் துணையாகப் பிறப்பெடுத்திருக்கிறான் இவன் என்றும் தனக்குத் தேவாதி தேவர்கள் கூறியதை அந்தக் குரங்காட்டியான ஈசனிடம் கூறினான் கேசரி. வரம் அளித்தவரிடமே அவர் அளித்த வரத்தைப் பற்றிய விளக்கம். விசித்திரம் தான்.

ஆனால் விஷமக் காரக் குரங்காட்டியோ பல மலைகள் அலைந்து திரிந்து இத்தகையதொரு குரங்குக்காகவே தான் காத்திருந்ததாயும், அதனால் இவனை விடமாட்டேன் என்றும் கூற, தான் அம்மலையின் மன்னன் எனவும், மன்னன் வாக்கை மீறக்கூடாது என்றும் கேசரி ஆணையிடுகிறான்.ஹா, நான் யார் எனத் தெரியாமல் பேசுகிறாயே? மன்னனாய் இருந்தால் என்ன? நீ எனக்குச் சின்னவன் தான்! அதெல்லாம் இவனை விடமுடியாது எனத் திட்டவட்டமாய்த் தெரிவிக்கிறான் குரங்காட்டி. அநுமனோடு ஓடவும் ஆரம்பிக்கிறான், கோபம் கொண்ட கேசரி தன் கதாயுதத்தால் அவன் மார்பில் ஓங்கி அடிக்கிறான். என்ன ஆச்சரியம்? அந்த அடியானது ஒரு அழகான மாலையாக உருமாறி ஈசன் மார்பை அலங்கரிக்கிறது.

தன் சுய உருவில் சடாமகுடதாரியாகக் காட்சி அளித்த ஈசனைக் கண்டு நடுநடுங்கிய கேசரி தன் தவற்றை மன்னிக்கும்படி வேண்டினான். "ஈசனே, உன் அம்சம் அன்றோ இவன்! உன்னுடைய பிம்பமான இவனைத் தூக்கிச் செல்ல நான் எவ்வாறு அநுமதி மறுக்கமுடியும்? தாராளமாய்த் தூக்கிச் செல்வாயாக!" என்று தன் மகனை ஈசன் கைகளில் ஒப்படைத்தான். அப்போது ஈசனிடம் அநுமனைத் தூக்கிச் செல்லும் காரணம் கேட்க, ஈசன் சொல்கிறார்.

"கேசரி, ஒரு மாபெரும் சந்திப்புக்கு இவனை அழைத்துச் செல்கிறேன். இவன் இதயத்திலும் அதற்கான ஏக்கம் கொழுந்து விட்டெரிகிறது. வேறொரு இடத்தில் பிறந்திருக்கும் இளவரசன் ஒருவனுக்கும் இவனைக் காணவேண்டும் என்ற தாபம் அதிகமாய் உள்ளது. இருவரையும் சந்திக்க வைக்கப் போகிறேன். இது இவர்கள் அறியாமலேயே நடக்கப் போகும் முதல் சந்திப்பு. அதன் பின்னர் பல காலம் கழித்தே இவர்களின் சந்திப்பும், அதை ஒட்டிய தர்மத்தின் காவலும் நடைபெறும். ஆகையால் சில நாட்களின் உன் மகனை உன்னிடம் ஒப்படைத்துவிடுவேன். கவலைப்படாதே!" என்று கூறிவிட்டு அநுமனோடு ஈசன் மறைந்தார்.

Thursday, July 15, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!


"அஸாத்ய ஸாதக ஸ்வாமிந் அஸாத்யம் தவ கிம் வத
ஸ்ரீராமதூத க்ருபாஸிந்தோ மத்கார்யம் ஸாதய ப்ரபோ"

இப்போ நாம அயோத்தி வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வரணும். அயோத்தியில் தசரதச் சக்கரவர்த்தி புத்ரகாமேஷ்டி யாகம் செய்து நாலு புத்திரர்கள் பிறந்து ராமன், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கனன் எனப் பெயர் சூட்டப் பட்டு வளர்ந்து வருகின்றனர். ராமன் செயற்கரிய செயல்களைச் செய்வான் என்றும், அதற்கேற்ற துணைவர்களைப் பெறுவான் என்றும் குலகுரு வசிஷ்டர் உள்பட அனைவரும் ஆரூடம் கூறுகின்றனர். குழந்தையான ராமன் அநுமனின் செயல்களைத் தன் மனக்கண்ணால் கண்டாற்போல் விண்ணில் தோன்றிய சூரியனைப்பார்த்துக் கைகொட்டிச் சிரித்து மகிழ்கின்றான். அனைவருக்கும் சாதாரணமாய்க் குழந்தைகள் நிலவைப் பார்த்துச் சிரித்து விளையாட, இவன் சூரியனைக்கண்டு விளையாடுகிறானே எனத் தோன்றினாலும், சூரிய வம்சத்துக் குழந்தை என்ற உணர்வால் அதன் காரணமாய் இருக்கும் என நினைக்கின்றனர். இங்கே அஞ்சனையோ சூரியனை நோக்கிச் சென்ற அருமை மகன் திரும்பாமல் உளம் வருந்தி உயிரையும் விடும் அளவுக்கு உடல்நலம் குன்றி விடுகிறாள்.

சூரியனுக்கு அருகே சென்ற குமாரன் வெப்பம் தாங்காமல் பொசுங்கிச் செத்திருப்பான் என்று எண்ணுகிறாள். கேசரி அவளைச் சமாதானம் செய்கின்றான். அநுமன் திரும்பிவிடுவான் என முனிவர்களும், ரிஷிகளும் கூறுவதாகவும், அதற்காகவே அவர்கள் யாகங்கள் செய்வதாகவும் கூறுகின்றான். ஆனாலும் அஞ்சனையின் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆனால் சற்று நேரத்தில் வாயுதேவன் அநுமனைத் தூக்கிக் கொண்டு வந்து சேர்க்க அனைவருக்கும் ஆச்சரியம் மேலிடுகிறது. முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட அனைவரும் அநுமனைக் காண வருகின்றனர். வாயுதேவன் நடந்தவற்றை விவரிக்கிறான். இந்திரனின் வஜ்ராயுதம் பட்டு நசுங்கிய மோவாய்க்காக இனி இவன் "அநுமன்" என்று அழைக்கப் படுவான் என்றும் கூறுகின்றான். அந்த வஜ்ராயுதம் பட்டதால் இவன் மேனி புண்ணாகவில்லை, பொன்னாகிவிட்டது என்றும் கூறி, இவனை உங்கள் குமாரன் என்று தனியே சொந்தம் கொண்டாடாதீர்கள். இவன் ஒரு முக்கியமான காரியத்திற்காக, அந்த சேவைக்காகப் பிறந்த பிள்ளை. தர்மம் காக்கப்படவேண்டி அவதாரம் எடுத்திருக்கிறான். இவனால் எப்போதும் நன்மையே ஏற்படும். செல்லும் இடங்களில் எல்லாம் உண்மையும், சத்தியமும், தர்மமும் நியாயமும் செழித்து இருக்கும்.ஆகவே இவனை நீங்கள் உங்கள் அன்புச்சிறையில் வைக்காமல் ஊர் காக்கவென அனுப்பி வையுங்கள். என்று கூறிவிட்டுச் செல்கின்றான். அநுமன் தினமும் மரக்கிளையில் அமர்ந்து யாரையோ தேடுவது போல் பார்ப்பான். அதே போல் அங்கே அயோத்தியில் ஸ்ரீராமனும் விளையாடுகையில் ஒரு குறிப்பிட்ட திக்கிலேயே தேடிப் பார்க்கிறான்.

இருவரின் பெற்றோர்களும் காரணம் புரியாமல் விழிக்க, இருவர் மனதுக்குள்ளும், ஒரு பூரணத்துவம் இல்லாமல் வெறிச்சோடுகிறது. திருக்கைலை. ஈசன் இருவரையும் சேர்த்து வைக்கும் நோக்கில் கிளம்ப, உமையோ அதற்கான காலம் இன்னும் வரவில்லையே என வினவுகிறாள். ஈசனோ ஒரு குரங்காட்டியாகப் போய் அநுமனைத் தூக்கிச் சென்று ராமனுடன் விளையாட விடப் போவதாய்க் கூறிவிட்டுக் குரங்காட்டியாக மாறுகிறார். அஞ்சனையின் வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அநுமனைத் தூக்கிச் செல்கிறார். குரங்காட்டி ஒருவர் தன் மகனைத் தூக்கிச் செல்வதைக் கண்ட கேசரி, பின்னாலேயே கூவிக் கொண்டு ஓடுகிறான். கணவனுக்கு உதவியாக அம்மையும் குறத்தி வடிவில் அஞ்சனையிடம் வருகிறாள்.

Friday, July 2, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

ராகுவின் குற்றச்சாட்டைக் கேட்ட இந்திரன் அநுமன் செய்வதைக் காண வந்தால் அநுமனோ விளையாடுகிறான். இந்திரனோடும் விளையாடும் அநுமன், ராகுவையும் பிடிக்கப் பார்க்கிறான். அலறிக் கொண்டு ஓடும் ராகு இந்திரனைத் தஞ்சம் அடைய ஐராவதத்தைப் பார்த்த அநுமனுக்கு இன்னும் ஆநந்தம் அதிகமாகிறது. எல்லாவற்றையும் ஓடிப் போய்ப் பிடித்து தனக்கு விளையாட்டுப் பொருளாக்க முயலும் அநுமனைத் தன் வஜ்ராயுதத்தால் அடிக்கிறான் இந்திரன். வஜ்ராயுதத்தின் சக்தியால் அநுமன் மயங்கி விழுகிறான். வாயு தேவனின் கோபம் எல்லை மீறுகிறது.

அவன் விட்ட பெருமூச்சு புயல் காற்றுப் போல் அனைவரையும் அலைக்கழிக்கிறது. கீழே ஒரு மலையில் விழுந்து மயக்கமாய்க்கிடக்கும் ஆஞ்சநேயனைத் தன் மடியில் போட்டுக் கொண்டு தன் இயக்கத்தை நிறுத்திவிடுவது என முடிவெடுக்கிறான் வாயுதேவன். ஆஞ்சநேயன் கண் விழித்து எழுந்தால் ஒழியத் தன் இயக்கத்தை ஆரம்பிக்கக் கூடாது என முடிவு எடுக்கிறான். உலக இயக்கமே நின்று போகிறது. மரக்கிளைகள், இலைகள், கண் சிமிட்டிச் சிரிக்கும் பூக்கள், நகர்ந்து கொண்டிருந்த மேகங்கள், அலை வீசி ஆர்ப்பரித்த கடல், ஓடிக்கொண்டிருந்த நதியின் பிரவாகம் என அனைத்துமே நின்று போகிறது. வேள்விகளும், யக்ஞங்களும் செய்து கொண்டிருந்த முனிவர்கள் காற்றே இல்லாமல் அக்னியின் வெப்பம் தாங்காமலும், அக்னி அணைந்துவிட்டதால் மூச்சுத் திணறியும் தவிக்கின்றனர். தேவாதி தேவர்களில் இருந்து அனைவரும் காற்றே இல்லாமல் தவிக்க, தேவேந்திரன் படைப்புக் கடவுளைத் தஞ்சம் அடைந்தான்.

பிரம்மாவும் தேவேந்திரனுடைய தனிப்பட்ட தவறுக்காக அகில உலகமுமே தண்டிக்கப் படுவது நியாயம் அல்ல என எண்ணி வாயுவைச் சென்று சந்திக்கிறார். வாயுகுமாரனைப் பிழைக்க வைக்கும் வழியைப் பார்க்கலாம் என்று கூறுகிறார். வாயுதேவனைக் கண்டு பிரபஞ்ச இயக்கம் நின்றால் உலகம் தோன்றியதின் தத்துவமே அழிந்துவிடும் என்றும், உலக நன்மைக்காக வாயு இயங்க வேண்டும் என்றும் வாயுகுமாரனைத் தாம் எழுப்பித் தருவதாகவும் கூறுகிறார். ஆஞ்சநேயன் உடலை பிரம்மா தன் கைகளால் தடவிக் கொடுக்க ஆஞ்சநேயன் எழுந்திருக்கிறான். வாயுவும் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்த மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுகிறான். சலனம் திரும்புகிறது.

உலகில் இயக்கம் ஆரம்பிக்க, ராமகாரியத்தை நிறைவேற்றப் பிறந்திருக்கும் சிவாம்சமான இந்த ஆஞ்சநேயனுக்கு நாம் உதவிகளே செய்யவேண்டும் என்ரும் இவனை வாழ்த்தி வரமளிக்க வேண்டியதல்லாமல் இப்படி எல்லாம் நடக்கக் கூடாது எனவும் இந்திரனிடம் கூறுகிறார். இந்திரனும் தன் தவறை உணர்ந்தவனாக கன்னத்தில் அடிபட்டுப் பின் சரியானதால் இன்று முதல் அநுமன் என இவனை அழைக்கலாம் என்றும், எதிரிகள் இவன் மீது இந்திர வஸ்திரத்தை ஏவினால் அந்த அஸ்திரத்தால் இவனுக்குக் கெடுதல் ஏற்படாது என்றும் வரமளிக்கிறான். அடுத்து சூரியன் தோன்றி, தானே குருவாக இருந்து அனைத்து வித்தைகளையும் கற்பிப்பதாகவும், சூரியனின் கரங்களாகிய கதிர்களின் வல்லமையை அநுமனின் கரங்களுக்கு அளிப்பதாகவும் சொல்கிறான். யமனோ அநுமனுக்கு எங்கேயும், எப்போதும், எவர் ஆயுதத்தாலும் மரணம் என்பதே இல்லை என்று சொல்ல, வருணனோ, நீரால் இவனுக்கு ஆபத்து இல்லை என்றும் கொந்தளித்துப் பொங்கி ஆர்ப்பரிக்கும் கடல் இவனை வணங்கும் என்றும் ஆணையிட்டுக்கூறுகிறான்.

குபேரனோ, கோடி கோடி ஐஸ்வர்யங்களை விட மேலான வெற்றித் திருமகள் எப்போதும் இவன் பக்கத்தில் இருப்பாள். தோல்வி என்பதையே இவன் காணமாட்டான் என்று வரமளிக்க விஸ்வகர்மா தன் குண்டலங்களை அநுமனுக்கு அளித்துவிட்டு தேவர் படையானாலும் இந்த அநுமனை வெல்ல முடியாது என்றும் கூறுகிறான். கடைசியாகப்பிரம்மா பிரம்மாஸ்திரத்தாலும் இவனுக்கு அழிவில்லை என்றும், என்றும் சிரஞ்சீவியாக இருப்பான் என்றும் அருளிச் செய்தான். அனைவரும் மகிழும் வண்ணம் ஈசன் அப்போது அங்கே தோன்றி இந்தக் குழந்தை பிறந்ததன் நோக்கம் நன்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று சொல்கிறார்.