எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Sunday, May 1, 2011

ஜெய் ஆஞ்சநேயா! வாலி, சுக்ரீவன்!

 
Posted by Picasa
திருப்பனந்தாள் மடத்துத் தூணில் காணப்பட்ட வாலி, சுக்ரீவன் சிற்பம்.


சற்று நேரத்தில் வாலியின் குரலைப் போல் ஓர் குரலும் கேட்டதும், அதைத் தொடர்ந்து அந்த அசுரனின் அசுர கர்ஜனையும் கேட்டதும். உடனே வெளியே நின்ற சுக்ரீவன் வாலி இறந்துவிட்டான்; அசுரன் அவனைக் கொன்றுவிட்டான் என்ற ஓர் முடிவுக்கு வந்தான். ஆகையால் அசுரன் வெளியே வராதபடிக்குப் பாறையைத் தள்ளிக் குகையின் வாயிலை அடைத்தான். பின்னர் வாலிக்கு நீத்தார் கடன்களை முறைப்படி செய்தான்; அங்கிருந்து கிளம்பி கிஷ்கிந்தை வந்து நாடு மக்களிடமும், மந்திரி, பிரதானிகளிடமும் நடந்ததை சொன்னான். அவனுடைய முயற்சிகளையும் என்ன நடந்தது என்பதை சுக்ரீவனை வற்புறுத்தியும் கேட்டுத் தெரிந்து கொண்ட மந்திரிகள் ஆலோசனைகள் பலவும் செய்து சுக்ரீவனுக்கு முடி சூட்டினார்கள். சுக்ரீவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் வாலி திடீரெனத் திரும்பி வந்தான். தன்னுடைய சிம்மாதனத்தில் தம்பி ஏறி அமர்ந்து ஆட்சி நடத்துவதையும், தன்னுடைய மந்திரி, பிரதானிகள் அதற்கு ஒத்திசைத்ததையும் பார்த்துக் கோபம் கொண்டான். அமைச்சர்களைச் சிறையில் தள்ளினான். சுக்ரீவன் அண்ணனைக் கண்டதும் உண்மையிலேயே மகிழ்ந்து தன் அரச கிரீடத்தைக் கழற்றி அண்ணன் காலடியில் சமர்ப்பித்து, “அண்ணா, உங்களால் மாயாவியான துந்துபி கொல்லப் பட்டது கண்டு மகிழ்ந்தேன். நாட்டுமக்களுக்கு நன்மை செய்தீர்கள். நீங்கள் வராத காலத்தில் உங்களுக்குப் பதிலாக நாட்டை நான் ஆண்டேன். இனி நீரே எமக்குத் தலைவர். ஒருவருட காலம் அந்தக் குகையின் வாயிலில் பள்ளத்தில் காத்திருந்த நான் பெருகி வந்த ரத்த வெள்ளத்தைக் கண்டு நீங்களே இறந்துவிட்டதாய்த் தவறான முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகையால் பள்ளத்தை மூடிவிட்டுக் கிஷ்கிந்தை வந்தேன்; இங்கே நான் மந்திரி, பிரதானிகளிடம் நடந்த எதையும் கூறவில்லை. பட்டம் சூட்டிக்கொண்டு அரசாள விருப்பமும் தெரிவிக்க வில்லை. மக்களும், மந்திரிகளுமே ராஜ்யம் அரசனில்லாமல் இருத்தல் கூடாது என்பதால் எனக்கு முடி சூட்டினார்கள்.”

“ஆனால் இப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். நான் செய்தது தவறெனில் மன்னிக்கவும். நீங்கள் இல்லாத நேரத்தில் முறையாகவே ஆண்டு உங்கள் நாட்டைக் காத்து வந்திருக்கிறேன். அதை இப்போது உம்மிடம் ஒப்படைக்கிறேன். கோபம் கொள்ளாதீர்கள்.” என்று தயவாகக் கூறித் தன் நாட்டையும், கிரீடத்தையும் வாலியிடம் ஒப்படைத்தான். ஆனால் வாலிக்கோ கோபம் அடங்கவே இல்லை. மிகவும் கொடுமையான வார்த்தைகளால் சுக்ரீவனைத் திட்டினான். மற்றவர்களைப் பார்த்து, “கொடியவனான மாயாவி துந்துபி என்னை சண்டைக்கு அழைத்தபோது வேறு வழியில்லாமல் நான் போனேன். இதோ, இந்த என் தம்பி சுக்ரீவனும் உடன் வந்தான். அந்த மாயாவி ஒரு பள்ளத்தினுள் மறைந்தான். அவனைக் கொல்லாமல் திரும்பக் கூடாது என்பதால் நானும் அந்தப் பள்ளத்தினுள் புகுந்தேன். இவனை வெளியே காவல்தான் இருக்கச் சொல்லி இருந்தேன். அங்கே அவனைத் தேடிக் கொல்ல எனக்கு ஒரு வருடமாயிற்று. என்னால் கொல்லப் பட்ட அவன் கக்கிய ரத்தத்தால் அந்தப் பள்ளம் நிரம்பி ரத்தம் வெளியே ஓடி வரலாயிற்று. நான் பள்ளத்திலிருந்து வெளியே வர முயற்சித்த போது இந்த என் தம்பி பள்ளத்தை மூடிவிட்டிருந்தான். என்னால் வர இயலவில்லை. சுக்ரீவா, சுக்ரீவா, எனப் பல முறை கூவிக் கூவி அழைத்துப் பார்த்தேன். பதிலே இல்லை.”

“அதன் பின்னர் மிகச் சிரமப் பட்டுக் காலினாலும், வாலினாலும் பள்ளத்தை மூடியிருந்த பாறையை நகர்த்தியும், மெள்ள மெள்ள நொறுக்கியும் பள்ளத்திலிருந்து வெளியே வந்தேன். வந்தால், இந்தக் கொடியவன் என் நாட்டை என்னிடமிருந்து அபகரித்திருக்கிறான். அண்ணன் என்ற அன்பைக் காட்டாமல் என் நாட்டை அபகரிக்க வேண்டி வஞ்சகமாய்ச் சூழ்ச்சிகள் செய்திருக்கிறான். இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.” இவ்வாறு கூறிய வாலி அணிய மாற்றுத் துணி கூட இல்லாமல் சுக்ரீவனை அந்தக் கணமே நாட்டை விட்டுத் துரத்தினான். தன் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணிய சுக்ரீவனிடமிருந்து அவன் மனைவியையும் பறித்துக் கொண்டான். வாலியிடமிருந்த பயத்தால் எங்கேயுமே தங்க இயலாமல் தவித்த சுக்ரீவன் கடைசியில் ரிஷ்யமுக பர்வதத்தினுள் வாலி நுழையத் தடை என்பதை அறிந்து அங்கே வந்து தங்கினான். ஆனால் வாலியின் தொல்லைகள் அவனுக்குக் குறையவே இல்லை.