எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Tuesday, May 5, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!


ஸ்ரீராமனையும், அவன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களையும் நினைத்தாலே தன்னை மறந்து அழுதுவிடுவார் ஸ்ரீ ஸ்வாமிகள். பெற்றோர் அவர் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என விரும்ப அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஜானகி என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். நாடெங்கும் பாத யாத்திரையாகவே சென்று ராமநாமத்தின் மகிமையைப் பாடியும், ஆடியும், பஜனைகள் செய்தும் அற்புதமாய் நடத்தி வந்தார். உஞ்சவிருத்தி, பூஜை, உபந்யாஸம், பஜனை என்று பாகவத தர்மத்தை விடாமல் கடைப்பிடித்தார். ஏராளமான சீடர்கள் இவருடைய யாத்திரையில் இவருடன் பங்கு கொண்டனர். ராமநாம ஜபம் செய்து ஆனந்தத்தை அனுபவித்தனர். ஒரு முறை ராம ஜன்ம பூமியான அயோத்திக்குச் சென்று கொண்டிருந்தபோது, இவருடைய தூக்கத்தில் ஒரு கனவு. அந்தக் கனவில் தோன்றியவர் யார்? ஸ்ரீஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் அவர்களே தான் கனவில் தோன்றினார். ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகளைத் தென் திசைக்குப் போகச் சொல்லி, அங்கே ஒரு நற்காரியம் இவர் மூலம் நிகழப் போவதாய்ச் சூசகமாய்ச் சொல்லி மறைந்தார்.

குருவின் கட்டளைப்படி தெற்கே வந்த ஸ்வாமிகள் தஞ்சை ஜில்லா மருதாநல்லூர் என்னும் ஊருக்கு வந்தார் . அங்கே வசித்து வந்த வெங்கடராம ஐயர் என்னும் தனவான் ஸ்வாமிகளை அழைத்துத் தம் இல்லத்திலேயே வைத்து உபசரித்தார். அங்கே சில நாட்கள் தங்கிய ஸ்வாமிகள் அந்த ஊரிலேயே தம் தாயாருடனும், மனைவியுடனும் தங்கி உஞ்சவிருத்தி, நாம ஜபம் போன்றவற்றைத் தொடங்கினார். ஆனால் குருநாதர் சொன்ன வேலையைச் செய்ய வில்லையே என்ற தாபமும் இருந்தது. குருநாதர் அதிஷ்டானம் அப்போது காவிரிக்குள் மறைந்து முழுகி இருந்தது. அதைக் கண்டு பிடித்து பக்தர்களுக்குத் தெரியப் படுத்துவதே தம் முதல் கடமை என உணர்ந்த ஸ்ரீஸ்வாமிகள் அப்போதைய தஞ்சை மகாராஜாவின் விருப்பத்தைக் கேட்டறிந்தார். அதன்படி காவிரி நதியைச் சற்றே திசை திருப்பி வடப்பக்கம் திருப்பி, போதேந்திராளின் அதிஷ்டானம் கண்டுபிடிக்கப் பட்டதும் அதற்கு எதிர்காலத்தில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படா வண்ணம் தடுப்பு வேலைகளைத் திறம்படச் செய்து முடித்தார். எல்லாம் சரி, அதிஷ்டானத்தை எப்படிக் கண்டு பிடிப்பது?

காவிரிக்குள் முழுகி இருக்கும் அதிஷ்டானத்தைக் கண்டறிய ஒரு வழியைக் கண்டறிந்தார் ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகள். தம் கால்களில் துணியைச் சுற்றிக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் காவிரி நதியின் மணலில் படுத்து உருண்டு செல்வார். ஏன்? நடந்து சென்று பார்க்கக் கூடாதா? பார்க்கலாம். ஆனால் அதிஷ்டானம் இருக்கும் இடத்தில் தம்முடைய கால்கள் பட்டுவிட்டால்??? அதற்காகவே உருண்டு சென்றார் ஸ்ரீ ஸ்வாமிகள். உருண்டு செல்லும்போதே ஒவ்வொரு இடத்திலும் தம் காதுகளை வைத்து உன்னிப்பாய்க் கவனித்தபடி செல்வார் ஸ்ரீஸ்வாமிகள். ஒருநாள் ஒரு இடம் வந்ததும், “இதோ, ஸ்ரீ போதேந்திராளின் அதிஷ்டானம் இருக்குமிடம். அவருடைய ஜீவன் இங்கே தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.” என்று சொல்லிவிட்டு ஆனந்தத்தில் குதித்து ஆடிப் பாடினார். சுற்றி நின்றவர்களுக்கும், கூட இருந்தவர்களுக்கும் ஒரே ஆச்சரியம்! இது எங்கனம் நடந்தது?

ஸ்ரீஸ்வாமிகள் சொன்னார்: உருளும்போதே என் காதுகளை வைத்துக் கவனித்துக் கொண்டு வந்தேன் அல்லவா? அப்போது மற்ற இடங்களில் எல்லாம் அமைதி நிலவ, இந்த ஒரு இடத்தில் மட்டும் “ராம” நாமம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே இங்கு தான் அதிஷ்டானம் இருக்கவேண்டும்.” என்று சர்வ நிச்சயமாய்ச் சொன்னார்.
அனைவரும் மகிழ்ந்ததோடு அல்லாமல் சத்குருவின் யோக சக்தியையும் கண்டு வியந்தனர். அனைவரும் அங்கேயே விழுந்து நமஸ்கரிக்க, மன்னனுக்குத் தகவல் சொல்லப் பட்டு, அதிஷ்டானத்துக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் காவிரி திருப்பி விடப் பட்டு, அதிஷ்டானமும் புனர் நிர்மாணம் செய்யப் பட்டது.

அரசன் சத்ரபதி சிவாஜியின் வழித் தோன்றல் ஆவான். இயல்பாகவே இறைவழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். இப்போது ஸத்குரு ஸ்வாமிகளின் பிரதம சிஷ்யனாகவும் ஆனான். ஸத்குரு ஸ்வாமிகளுக்கு மட்டுமில்லாமல் அவரைப் பின்பற்றும் அவரது சிஷ்யர்கள் அனைவருக்கும் ஏதேனும் செய்ய விரும்பினான் மன்னன். ஸத்குரு ஸ்வாமிகளைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு ராமநாம ஜபம் ஜபிக்கும் இந்த பாகவதர்கள் அனைவரும் நிரந்தரமாய்த் தங்கும் வண்ணம் ஒரு கிராமத்தையே, மான்யம் அளித்தான். ஸத்குரு ஸ்வாமிகள் மனம் மகிழ்ந்து மன்னனிடம் அந்த கிராமத்தை பாகவதர்கள் பெயரிலேயே மான்யம் செய்து கொடுக்கச் சொல்ல திருவிசநல்லூருக்கு அடுத்து இருக்கும் ஒரு கிராமம் ஒன்றையே பாகவதபுரம் என்ற பெயரில் மான்யமாய்க் கொடுத்தான் மன்னன். இன்றும் அந்தக் கிராமம் பாகவதபுரம் என்ற பெயராலேயே வழங்கப் படுகின்றது.

No comments:

Post a Comment