எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Tuesday, July 21, 2009

ராமனுக்கு யார் நிகர்?

பத்ராசலம் போனதே இல்லை. பத்ராசலம் போய் அங்கே ராமரைப் பார்த்துட்டு வரணும்னு ஓர் ஆசை. இந்தப் பக்கம் வந்து பதிவு போட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. ஒரு பதிவு தயார் செய்திருக்கேன். என்றாலும் திங்களுக்குப் பின்னர் தான் போட முடியும். பின் தொடருகின்றவர்களுக்கு நன்றி. பத்ராசலத்தில் தான் ராமர் லக்ஷ்மணனுடன் தங்கி இருந்ததும், பொன்மானைப் பார்த்து சீதை ஆசை கொண்டதும், ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதும் என்று சொல்லப் படுகிறது. இதற்குப் பின்னர் நடந்த வாலிவதம் நடைபெற்ற குகையை நவபிருந்தாவனம் செல்லும்போது பார்க்க நேர்ந்தது. இந்த பத்ராசலம் பலரையும் கவர்ந்த ஓர் இடம். பத்ரா என்ற மலைக் குழந்தை மேரு மலையான மலையரசனுக்கும், மேனகாவுக்கும் வரத்தின் மூலம் பிறந்த குழந்தை என்று சொல்லப் படுகின்றது.

கோதாவரி நதி தென்முகமாய்ச் சுற்றிக் கொண்டு போகும் இடத்தில் உள்ள பத்ரா மலையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. தண்டகாரண்யம் என ராமாயணத்தில் சொல்லப் பட்டதும் இது தான். பத்ரா பல யுகங்கள் தொடர்ந்து ராமரைக் குறித்து தவம் செய்ததாகவும் சொல்லப் படுகிறது. ராமரைத் தன் தலையில் தாங்கிக் கொண்டு செல்லத் தயாராக இருந்ததாயும், சீதையைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த ராமர், தற்சமயம் அவருடைய ஆவலைப் பூர்த்தி செய்யமுடியாது என்று சொன்னதாகவும், மனைவியைத் தேடிக் கொண்டு செல்வதாகவும் மனைவியைக் கண்டுபிடித்து அவளைத் தூக்கிச் சென்ற ராவணனைக் கொன்று அவனுக்குத் தண்டனை அளித்து தர்மத்தை நிலை நாட்டவேண்டும் என்றும் சொல்லிச் சென்றார்.


சீதையைக் காணாமல் இராமன் திகைத்து நிற்றல் (3574-3575)
3574 ஓடி வந்தனன், சாலையின்
சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ் சுரிக் குழலாள்
தனை காணான்,
கூடு தன்னுடையது பிரிந்தாருயிர்,
குறியா,
நேடி வந்து, அது கண்டிலது என
நின்றான். 158

சீதையைக் காணாத ராமன் இவ்விதம் திகைத்துப் போனான் என்று கம்பர் சொல்லுகின்றார். ராமாயணம் படிப்பதும் சரி, கேட்பதும் சரி மனப்புண்ணை ஆற்றும். அந்தப் பரப்பிரம்மமே மனைவியைத் தொலைத்துவிட்டுக் குலுங்கி அழுதது என்பதை உணரும்போது நாமெல்லாம் என்ன சாமானியம், தூசி மாத்திரம் என்றே தோன்றும். அவனுக்குத் தெரியாதா தான் யார் என?? ஆனால் அவன் அப்போது ஒரு மனிதனாக அல்லவோ வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தான். சாமானிய மனிதனுக்கு ஏற்படும் அனைத்துக் கஷ்டங்களும் அவனுக்கும் ஏற்படுத்திக் கொண்டு அதில் இருந்து ஒரு சாமானியன் எவ்வாறு மீள்வானோ, தர்மத்தின் பாதையில் இருந்து சற்றும் பிறழாமல் எவ்வாறு வாழவேண்டுமோ அவ்வாறே வாழ்ந்து காட்டி ஒரு முன்மாதிரியாக அல்லவோ திகழ்ந்தான். ஒரு மனிதனுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கும் வல்லமையை ராமநாமமும், ராமாயணத்தைப் படிப்பதும், ராமன் பெருமையை நினைப்பதும் தரும். ராமனின் பெருமையைச் சொல்லச் சொல்ல நா இனிக்கும், மனம் அமைதி பெறும்.

வேதவேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே|
வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா||

"வேதவேத்யே"- வேதத்தினால் அறியப்பபட வேண்டிய ஒருவன், அவனே பரம்பொருள். அவன் யார்?" பரே பும்ஸி"- பரம புருஷன். வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம
புருஷன். ஜாதே தசரதாத்மஜே=அந்தப் பரம்பொருளே வேதத்தினாலே அறியப்பட வேண்டிய பரம புருஷனே ராமனாக உலகில் அவதாரம் செய்தான். வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா= அவன் தசரதனுடைய குழந்தையாக அவதாரம் செய்தவுடன்,வேதம், ராமாயணமாக அவதாரம் பண்ணுவோம் என்று வால்மீகியின் குழந்தையாக
வந்தது!

ராமாயண காவியத்தில் இல்லாததே கிடையாது. தினம் ஒருமுறை அதில் ஓர் அத்தியாயத்தை மட்டுமாவது படித்தாலே போதும். வேத பாராயணம் பண்ணமுடியலையே எனப் பெண்கள் வருந்தாமல் இதைப் படிச்சாலே போதும். மனம் அமைதி பெறும். ராமநாம மஹிமை தொடரும்.

1 comment:

  1. //பத்ராசலத்தில் தான் ராமர் லக்ஷ்மணனுடன் தங்கி இருந்ததும், பொன்மானைப் பார்த்து சீதை ஆசை கொண்டதும், ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதும் என்று சொல்லப் படுகிறது. //

    Intha mari niraya edatha solranga..ethu unmai. salem - Namakal Highwayla Poiman Karadunu oru edam iruku. anga oru angelaa irunthu partha maan nikkara mathiri terium.. ithe mathiri nashik pakkathila oru idam solranga.. ethu unmain

    ReplyDelete