எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Friday, March 27, 2009

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

இப்போ ராம நாமம் வரும் ஒவ்வொரு ஸ்லோகமாய்ப் பார்ப்போமா? எனக்குச் சின்ன வயசில் முதலில் பழக்கம் ஆனது இந்த ஸ்லோகம் தான். இந்த ஸ்லோகம் அர்த்தம் அப்போ தெரியாது. இன்னும் சொல்லப் போனால் உச்சரிப்புக் கூடச் சரியா வராது. ஏழு வயதில் கற்ற அந்த ஸ்லோகம் இதுவே:-
"அக்ரத: ப்ருஷ்டதஸ்சைவ பார்ஸ்வதஸ்ச மஹாபலெள!
ஆகர்ண பூர்ண தந்வாநெள ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!"
இந்த ஸ்லோகம் பயமில்லாமல் தனிவழி செல்லவும், இரவு படுக்கும்போது சொல்லவும் சொல்லிக் கொடுக்கப் பட்டது. இதைச் சொன்னால் ராம, லக்ஷ்மணர்கள் உங்களுக்குத் தெரியாமல் கையில் வில், அம்போடு வந்து உங்களைக் காப்ப்பார் என்றும் சொல்லிக் கொடுத்தாங்க. அது முதல் எங்கே, என்னவிதமான கஷ்டம் வந்தாலும் இந்த ஸ்லோகம் ஒன்றே தான் திரும்பத் திரும்பத்திரும்ப திரும்பத் திரும்ப மனதில் ஓடும். அதுக்கப்புறம் தினமும் கணக்கில்லாமல் இந்த ஸ்லோகம் மனதிலேயே ஓடுவது வழக்கமாய்ப் போச்சு! இப்போ என் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அவங்களையும் கஷ்டம் வரும் நேரத்தில் மட்டுமில்லாது எப்போவுமே சொல்லச் சொல்லுவேன். இந்த ஸ்லோகத்தின் அர்த்தமே முன்னாலும், பின்னாலும் அதி பலசாலிகளான ராமனும், லக்ஷ்மணனும், காதளவு நீட்டப் பட்ட நாணை உடைய வில் மற்றும் அம்பைத் தரித்துக் கொண்டு வந்து நம்மை ரக்ஷிக்கட்டும் என்பதே!

அடுத்து ஆபத்துக்களைத் தவிர்க்கும் ராம நாமம் இதோ:-

"ஆபதாரமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்!!"
சகலவிதமான கஷ்டங்களைப் போக்குபவரும் சகல சம்பத்துக்களையும் அளிப்பவரும் ஆன, உலகிலேயே அழகானவரும் ஆன ஸ்ரீராமனை அடிக்கடித் துதிக்கின்றேன். இதையும் ஆபத்துகள் நேரும்போதெல்லாம் சொல்லலாம்.

அடுத்து ஸ்ரீராமபக்தனும், பரம அடியானும் ஆன ஆஞ்சநேயனே சீதையைக் கண்டு பிடிக்க முடியாமல் மனம் நொந்து தற்கொலை வரைக்கும் போயிருக்கான்னா பார்த்துக்குங்க. நாமெல்லாம் எம்மாத்திரம்! தன் மேலேயே நம்பிக்கை இழந்து உயிரை விடத் தீர்மானித்த அனுமன் கடைசியாகச் சொல்லவேண்டியது எனச் சொன்ன இந்த மந்திரம் ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தில் உள்ளது. 13-ம் ஸர்க்கத்தில் 59-வது ஸ்லோகம் இது! ஸ்ரீராம தாரக மந்திரத்தின் விவரணம் இது என்று ஆன்றோர் வாக்கில் அருளியது.

"நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச ஜனகாத் மஜாய
நமோஸ்து ருத்ரேந்த்ர யமானிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க்க ம்ருத்கணேப்ய!!"

ஸ்ரீ ராமனையும் லக்ஷ்மணனையும், ஜனகபுத்திரியான சீதையையும் வணங்குகின்றேன். ருத்ரன், இந்திரன், யமன், அக்னி போன்ற சகல தேவர்களையும் வணங்குகின்றேன். சந்திரன் சூரியன் மற்றும் மருத்துக்கள் அனைவரையும் வணங்குகின்றேன்.என்று இந்த ஸ்லோகத்தைச் சொன்ன உடனேயே அசோகவனம் ஆஞ்சநேயன் கண்களில் பட்டது. கண்டான் சீதையை!

தொடரும்!

2 comments:

  1. ஸ்ரீ த்வாதசநாம பஞ்ஜரம்- இதில் வரும் சுலோகங்களை அது தரும் லயத்துக்காக விரும்பி படிப்பேன். சிலவரிகளுக்கு அர்த்தம் புரியும். உங்கள் பதிவு இன்னும் சில கருவூலங்களின் திறவுகோளாய் அமைந்தது.
    நன்றி கீதா அம்மா.

    ReplyDelete
  2. அட, சுபஸ்ரீ எப்போ வந்தீங்க? புரியலையே? நன்றிம்மா.

    ReplyDelete