எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Thursday, January 19, 2012

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 7

இங்கே சண்டனையும் முண்டனையும் குறிப்பிட்டதன் காரணம் இருவரும் ஏறுக்கு மாறாகப் பேசுவார்கள்; நடந்து கொள்வார்கள். சண்டன் ஏறுக்கு மாறாகப்பேசுவதோடு நினைக்கவும் செய்வான். முண்டனோ தலையே இல்லாதவன் என்ற பொருளில் வருவதால் யோசிக்க எதுவுமே இல்லை என்றே இருப்பான். அவர்களிடம் நாம் என்ன சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். அவர்கள் இஷ்டத்திற்கே செய்வார்கள். இதைத் தான் மானுட வாழ்வில் பிடிவாதம் என்கிறோம். எத்தனை படித்து புத்திசாலிகளாய் இருந்தாலும் சில சமயங்களில் இந்த அசட்டுப் பிடிவாதம் நம்மை விடாது. தேவையே இல்லாமல் பிடிவாதம் பிடிப்போம். அப்போது நமக்கு யார் என்ன நன்மையாகச் சொன்னாலும் ஏற்க முடியாது. சொன்னதையே சொல்வோம். அல்லது அவர்கள் நம்மோடு பேசவே இல்லை என்னும்படி நடப்போம். இதைத் தான் தேவியின் கடைக்கண் கடாக்ஷத்தின் மூலம் மாற்றலாம். அவளுடைய நினைவால், அவள் கண்ணசைவால், நம்முடைய மூடத்தனமான பிடிவாதங்கள் விலகி நமக்கு வேண்டியவர்கள் வேண்டியபோது சொல்வதைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டு மன முதிர்ச்சியைப்பெறுவோம்.

அடுத்து வருபவன் தூம்ரலோசனன். தூம்ரம் என்பது புகை வருவதையும் லோசனம் என்பது கண்களையும் குறிக்கின்றன. தூம்ரலோசனன் என்றால் புகை படிந்த கண்களை உடையவன். அந்தகாசுரனுக்கு அண்ணனோ?? கண்கள் இருந்தாலே நல்லவற்றைப் பார்க்க யோசிக்கும்; அப்படி இருக்கையில் புகை படிந்த கண்களோடு தூம்ரலோசனன் நல்லவற்றை எங்கே பார்ப்பான்! பார்வை மறைக்கும். நல்லதே தெரியாது. இதன் காரணமும் சக்தி இல்லாமையே. சக்தியைப் பற்றாமையே. சக்தி வேண்டும் என முழுமனதோடு அவள் தாள்களைப் பணியாமல் இருப்பதே ஆகும். நம் உடலில் பரிபூரணமாய் சக்தி ஊடுருவி இருந்தால் மேற்சொன்ன ராக்ஷஸர்கள் எவரும் நம்மை ஆக்கிரமிக்க மாட்டார்கள். நமக்கு சக்தி தேவை எனில் அதற்கு நாம் அம்பிகையைச் சரண் அடைவதே நன்மை தரும்.

தேவி மஹாத்மியத்தின் மேற்சொன்ன அசுரர்களை நம் உடலோடு சம்பந்தப் படுத்தி விளக்கங்கள் கொடுத்துச் சொற்பொழிவு ஆற்றியவர் பண்டிட் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆவார். தூம்ரலோசனன், சண்டன், முண்டன் ஆகியோர் முன்னால் உள்ள அத்தியாயங்களிலேயே வந்துவிடுவார்கள். இங்கே என்னுடைய நினைவாற்றலைப் பொறுத்து முன்பின்னாகச் சொல்லி இருப்பதற்கு மன்னிக்கவும். இப்படி சர்வ வல்லமையுள்ள சக்தியை வழிபடுபவன் சகல செளபாக்கியங்களையும் பெறுவான்.

சிவசக்தி என இரண்டு பேரைச் சொன்னாலும் அம்பாளே ஈசனுக்கு சக்தியை அளிப்பதால் அவனுக்கெனத் தனியாக எந்தத் தொழிலும் இல்லை என்றே ஏற்படும். ஆனால் அவளோ சாக்ஷாத் காமேஸ்வரனுடைய ஜீவநாடியாகவே விளங்கி வருகிறாள். அவள் இந்நிலையில் இருப்பது மணிபூரக சக்கரத்தில். இங்கு தான் அஹம் என்னும் தன்னுணர்வு தோன்றுகிறது. இதுவே அம்பிகையின் ஸ்வரூபம் என்கிறார் ஆசாரியார். அவனுக்கும் உள்ள முக்கியத்துவத்தை நினைந்தே முதலில் ஈசனைச் சொல்லி வந்த ஆசாரியர் பின்னர் அம்பிகையின் தனித்துவத்தை மட்டும் சொல்ல ஆரம்பிக்கிறார். இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் ஸ்வரூபம் வர்ணிக்கப் படுகிறது. அம்பிகை எப்படி விளங்குகிறாள் எனில்,

क्वणतकाञ्ची-दामा करिकलभ-कुंभ-स्तन -नता
परिक्षीणा मध्ये परिणत शरचचन्द्र -वदना
धनु -र्बाणान पाशं सृणिमपि दधाना करतलै:
पुरस्ता दासतां न: पुरमथितु राहो -पुरुषिका

க்₁வணத₁கா₁ஞ்சீ₁-தா₃மா க₁ரிக₁லப₄-கு₁ம்ப₄-ஸ்த₁ன -நதா₁
ப₁ரிக்₁ஷீணா மத்₄யே ப₁ரிணத₁ ஶரச₁ச₁ந்த்₃ர -வத₃னா
த₄னு -ர்பா₃ணான பா₁ஶம்ʼ ஸ்ருʼணிமபி₁ த₃தா₄னா க₁ரத₁லை:
பு₁ரஸ்தா₁ தா₃ஸதா₁ம்ʼ ந: பு₁ரமதி₂து₁ ராஹோ -பு₁ருஷிகா₁

மேகலை பொங்க மதாசல கும்பம் எனா
முலை கண்டு இடை சோரா நீர்
மாக வளங்கெழு நாள் இறை அம்புலி
வாண்முகம் அம்பு வில் ஏடார் போது
ஏகநெடுங்கழை பாசம் ஓடு அங்குசம்
மேர்பற வந்தருள் காபாலி
நீ கமலம் திகழ் தாள் வருடு என்று அரன்
நீணர்மையின் விஞ்சிய கோ மாதே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

இங்கே அம்பிகையின் ஆபரணங்கள் மட்டுமில்லாமல் ஆயுதங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன. காஞ்சீ என்றால் ஒட்டியாணம். அந்த ஒட்டியாணத்தின் கீழே தங்கத்தால் சலங்கைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அந்தச் சலங்கைகள் அம்பிகை அசையும்போதெல்லாம், “கிணுகிணு” எனச் சப்திக்கின்றனவாம். அத்தகைய ஒட்டியாணம் பூண்ட அம்பிகையின் மார்பகமானது யானையின் மத்தகம் போன்று காணப்படுகின்றனவாம். அதான் அம்பிகை சற்றே உடல் வளைந்து கொள்வதை வணங்கிய உடல் என்கிறார் இங்கே ஆசாரியர். சரத் காலத்துச் சந்திரனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தை உடைய அம்பிகையின் இடையானது மிகவும் மெலிந்து காணப்படுகிறதாம். ஆனால் இவள் கைகளோ கரும்பால் ஆன வில்லையும், புஷ்ப பாணங்களையும் ஏந்திக்கொண்டிருப்பதோடு கூடவே பாசம், அங்குசம் போன்றவற்றையும் ஏந்திக்கொண்டிருக்கிறாள். திரிபுரங்களையும் தன் அட்டஹாசச் சிரிப்பால் எரித்த அந்த ஈசனின் “அஹம்” எனப்படும் ஸ்வரூபவடிவான இந்த அம்பிகை இங்கே நமக்காக எழுந்தருளட்டும்.

மன்மதனின் புஷ்பபாணங்களால் காமவசப்பட்டு அதிலேயே மூழ்கிக் கிடக்கும் சாமானிய மனிதர்களைக் கரையேற்ற வேண்டியே அம்பிகை அந்தப் புஷ்ப பாணங்களைத் தன் கைகளில் வைத்துக்கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்கள் மனதையும் கட்டுப்படுத்துகிறாள். ஆனால் ஈசனிடமோ மோஹத்தை உண்டு பண்ணுகிறாள். அம்பாளின் வடிவங்கள் பல இடங்களிலும் பல்வேறு மாறுபட்ட மாதிரிகளில் இருந்தாலும் அனைத்துமே லலிதா திரிபுரசுந்தரியாகவே ஸ்ரீ வித்யா தந்திரத்தில் சொல்கின்றனர். அத்தகைய அங்க லக்ஷணங்களோடு காணப்படுபவள் காஞ்சி காமாக்ஷி தான் என்கிறார் பரமாசாரியார்.

காஞ்சி மாநகரே அம்பிகையின் நாபிஸ்தானமாகச் சொல்லுவதுண்டு. அந்த நாபிஸ்தானத்தில் கட்டப்படும் ஒட்டியாணத்தின் சிறப்பைத் தான் மேலே பார்த்தோம். இங்கே அம்பிகை வைத்திருக்கும் ஆயுதங்கள் லலிதா திரிபுரசுந்தரியின் அடையாளங்கள் ஆகும். நாலு ஹஸ்தங்களுடைய அவளுக்கு மேலிரண்டு கைகளில் பாசமும், அங்குசமும், கீழிரண்டு கைகளில் கரும்பால் ஆன வில்லும், புஷ்பபாணங்களும் காணப்படும்.

நமக்கு விருப்பும் உண்டு, வெறுப்பும் உண்டு. நம்முடைய விருப்பையும், வெறுப்பையுமே காமக்ரோதம் என்று சொல்கிறோம். காமமும் அடங்கிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். க்ரோதமும் அடங்கிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இங்கே அம்பிகையின் கையில் உள்ள பாசத்தை காமத்துக்கு உவமையாகச் சொல்லப் படுகிறது. பொதுவாகப் பாசம் என்று பற்றுக்குச் சொல்கிறோம் அல்லவா? அந்த ஆசை, பற்று தான் காமம். இது நம்மைக் கட்டுப்படுத்துகிறது. அங்குசம் யானையைக் குத்தி உசுப்பி விடப்பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இங்கே க்ரோதம் என்னும் அங்குசம் நம்மையே குத்துகிறது. பிறரைக் குத்துவதை விட நம்மைத் தான் அதிகமாய்க் குத்துகிறது. இரு விதத்திலும் நம் சக்தி வீணாகச் செலவாகிறது.

இங்கே நம் மனமாகிய யானையைப் பாசம் என்னும் சங்கிலியில் போட்டுக் கட்டி வைக்கவேண்டும். அதோடு போதாது. அங்குசத்தாலும் அந்த யானையை அடக்கியாக வேண்டும். மனதை அடக்குவதற்காகவே பாசமும், அங்குசமும் இங்கே அம்பிகையின் ஆயுதங்களாகக் காட்டப்பட்டுள்ளது.


துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

அம்பிகையைத் திரிபுரசுந்தரி என உணர்ந்து கொண்டதாய் பட்டர் தெரிவிக்கிறார். திருக்கடையூரில் அபிராமி அம்மன் வரத ஹஸ்தம், அக்ஷ மாலையோடு காணப்பட்டாலும் பட்டர் கண்களுக்கோ அம்பிகை திரிபுரையாகக் காட்சி அளித்திருக்கிறாள். நாங்கள் அனைவரும் இவளே துணை என நம்பித் தொழும் தெய்வம் ஆன இவள் எங்களைப் பெற்ற தாய். வேதமென்னும் விருக்ஷமும் இவளே. அதன் கிளைகளும் இவளே, அடியிலுள்ள வேரும் இவளே, கொழுந்துகளும் இவளே. அப்படிப் பட்ட இவள் கைகளில் ஏந்தி இருக்கும் பூங்கணைகளாலும் கரும்பு வில்லாலும், பாசாங்குச ஆயுதங்களின் மூலமும் இவளே சாக்ஷாத் திரிபுரசுந்தரி என அறிந்தோம். ஆயிற்று, அம்பிகையை எழுந்தருளப் பண்ணியாயிற்று.


சிவம் வெறுமனே சிவமாகவே உட்கார்ந்திருந்தால் இவ்வுலகம் நடப்பது எப்படி? ஆகையால் அவனின் லீலைகள் நடக்கவேண்டி அம்பிகை காமன் தோற்றுப் போனாலும் விடாமல் தன் வசீக்ரத்தால் தானே அந்தக் கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் எடுத்துக்கொண்டு அவனிடம் சேர்ந்தாள். சிவனைக் காமேஸ்வரனாக்கித் தானும் காமேஸ்வரியானாள். அதன் பின்னர் தன் கருணைப் பார்வையால் கருணா கடாக்ஷத்தால் காமன் எனப்படும் அநங்கனையும் உயிர்ப்பித்து சிருஷ்டி தத்துவம் நிறைவேற வேண்டி சாமானியமக்களிடம் காமத்தை உண்டாகும் அதிகாரத்தைத் திரும்ப அவனிடமே கொடுக்கிறாள். ஆனாலும் மீண்டும் சிவன் யோகத்தில் ஆழ்ந்துவிடாமல் இருக்க வேண்டி, தானே அந்தக் கரும்பு வில்லையும், பஞ்ச பாணங்களையும் விடாமல் வைத்துக்கொண்டாள். இந்த சிவசக்தி ஐக்கியமே இதன் முக்கிய தத்துவம்.

செளந்தர்ய லஹரி விளக்கங்கள்: தெய்வத்தின் குரல், செளந்தர்ய லஹரி பாஷ்யம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம்.

தேவி மஹாத்மியம் விளக்கம்: தேவி மஹாத்மியம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம், மற்றும் பண்டிட் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் நவராத்திரிச் சொற்பொழிவுகள்.

அபிராமி அந்தாதி: உதவி தினமலர், சொந்தமாய்க் கொஞ்சம். போன வருஷம் கி.வா.ஜ. உரையைப் போட்டாச்சு. அதான் எல்லாரையும் கொஞ்சம் சோதனை பண்ணச் சொந்த முயற்சி.

No comments:

Post a Comment