எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Thursday, January 19, 2012

செளந்தர்ய லஹரி எளிய விளக்கம் 5

தேவி மஹாத்மியத்தில் "ரக்தபிந்துர்-யதா பூமெள பதத்யஸ்ய சரீரத:" என்று வரும். ரக்தபீஜன் என்னும் அரக்கனைக் குறித்தது இது. அவனுடைய சரீரத்தில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் அவனைப்போன்றே இன்னொரு அசுரன் தோன்றுவான். ரத்தம் தான் ரக்தம் எனவும், பீஜன் என்றால்= இங்கே பீஜம்=விதை என்ற பொருளிலும் வரும். அசுரன் தன் ரத்தத்தில் இருந்து விதையை விதைத்து இன்னொரு அசுரனை உண்டாக்குகிறான். இது எப்படி எனில் நம்முடைய ஜீன் என்றும் கூறலாம். நாம் நம்முடைய மூதாதையரின் ஜீன்களைக்கொண்டிருப்பதால் ஏதோ ஒருவிதத்தில் அவர்களின் நிறம், சுபாவம், கோபம், தாபம், விருப்பு, வெறுப்பு நம்மையும் தொடர்ந்து வந்திருக்கும். ஒரு சமயம் போல் ஒரு சமயம் இருக்க மாட்டோம். நம்முடைய சுயக் கட்டுப்பாட்டை இதுவே நிர்ணயிக்கிறது என்றும் சொல்லலாம். ஆகவே தான் சிறு வயது முதலே நம் மனதைத் திசை திருப்பி பக்தி மார்க்கத்தில்கொண்டு சென்றால் நாளடைவில்நம்மிடம் மாபெரும் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மனம் அமைதி அடையும். ஆகவே மற்ற நாட்கள் வழிபடவில்லை எனினும் இந்தப்பத்து நாட்களாவது அம்பிகையின் நினைவோடு இருந்து நம் எண்ணங்களைப் புதுப்பித்துக்கொள்வதன் மூலம் அவள் கருணையைப் பெறுவோம்.

அம்பிகையை ஆராதித்து அவளின் கடைக்கண்களின் கருணா கடாக்ஷத்தால் நமக்கு வேண்டும், வேண்டாம் என்ற நிலையே இல்லாமல் ஆகி பற்றற்ற நிலையை அடைவது குறித்துச் சென்ற பதிவில் பார்த்தோம். இங்கே அம்பிகையை உபாசித்தவர்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அம்பிகையை ஆராதித்தவர்களில் முக்கிய இடம் பெறுகின்றவர்கள் பனிரண்டு பேர். அவர்கள் மகேசுவரர், மாதவர், பிரம்மா, மன்மதன், சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாஸர் ஆகியோர் ஆவார்கள். இவர்களில் மஹாவிஷ்ணுவும் ஹயக்ரீவ அவதாரத்தில் அம்பிகையை ஆராதித்ததாய்ச் சொல்லப் படுவது உண்டு. இங்கே சொல்லப்போவதும் விஷ்ணு எடுத்த மோகினி அவதாரம் குறித்தே. அம்பிகையை ஆராதித்த விஷ்ணு தானே மனதை மயக்கும் பெண் வடிவு கொண்டு ஈசனின் மனமும் சலிக்கும்படிச் செய்தார் எனவும் அப்போது சாஸ்தா பிறந்தார் எனவும் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதே போல் மன்மதனும் அம்பிகையை ஆராதித்ததால் சூக்ஷ்மமான உருவை அடைகின்றான்.

தாக்ஷாயணி அக்னிப்ரவேசம் செய்த பின்னர் யோகத்தில் ஆழ்ந்த ஈசனை எழுப்பவில்லை எனில் உலகில் சிருஷ்டித் தத்துவமே நிறைவேறாது எனக் கவலைப்பட்ட தேவாதிதேவர்கள் பிரம்மாவை நாட, அவரும், விஷ்ணுவும் மன்மதனை ஏவ, மன்மதனும் தன் மலர்க்கணைகளை ஈசன் மேல் தொடுக்கக் கண் திறந்த ஈசனின் கோபாக்னியில் மன்மதன் எரிந்து சாம்பலாகிறான். இதையே லலிதா சஹஸ்ரநாமத்தின் மந்த்ர ரூப நாமாவளியில் ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்சீவநெளஷதி: என்று கூறுகிறது. ஈசன் காமனை எரித்த பின்னர் ரதிதேவியின் துக்கத்தைப் பார்த்த அன்னை மனம் கசிந்து காமனை உயிர்ப்பிக்கிறாள். அதுவும் எப்படி எனில் மற்றவர் கண்களுக்குப்புலனாகாமல் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படி தோன்றுகிறான் மன்மதன். சூக்ஷ்மமான சரீரத்தைப் பெறுகிறான். உடலே இல்லாமல், தேவியின் கருணைக்குப் பாத்திரமாகி உயிர் பெற்று சூக்ஷ்மமாக சஞ்சரிக்கும் மன்மதன் எவ்வாறு இவ்வுலகத்து அனைத்து உயிரினங்களையும் வேற்றார் உதவியில்லாமல் தன்னந்தனியாக ஜயிக்கிறானோ அவ்வாறே தேவியின் அருள் பெற்றவர்கள் அனைவரையும் மனம் கவரும் சக்தி படைத்தவர்களாய் இருப்பதோடல்லாமல், உலகையே வென்றவர்களும் ஆவார்கள்.



ஐந்தாவது ஸ்லோகம் இதைத் தான் விளக்குகிறது.

हरिस्त्वामाराध्य प्राणात -जन -सौभाग्य -जननीं
पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभ -मन्यत
स्मरोsपी त्वां नत्वा रातिनयन-लेह्येन वपुषा
मुनीनामप्यन्त: प्रभवति हि मोहाय महतां

ஹரிஸ்த்₁வாமாராத்₄ய ப்₁ராணாத₁ -ஜ₁ன -ஸௌபா₄க்₃ய -ஜ₁னனீம்ʼ
பு₁ரா நாரீ பூ₄த்₁வா பு₁ரரிபு₁மபி₁ க்₁ஷோப₄ -மன்யத₁
ஸ்மரோsபீ₁ த்₁வாம்ʼ நத்₁வா ராதி₁னயன-லேஹ்யேன வபு₁ஷா
முனீனாமப்₁யந்த₁: ப்₁ரப₄வதி₁ ஹி மோஹாய மஹதா₁ம்ʼ

தொடு-கரச்-சிலை தொடப்-பொறா மலர்
கருப்பு நாண் இடுவது ஐந்து கோல்
அடுபடைஆத்தலைவனார் வந்தமலை
தென்றல் தேர் உருவ மருவமா
முடுகு கொற்ற மதன் ஒருவன் இப்புவனம்
முற்றும் வெற்றி கொள் முடிவிலா
நெடு-மலர்க்-கண் அருள் சிறிது அளித்தநனையோ
நணலியே கர-கபாலியே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

இங்கே ஒரு விசித்திரம் என்னவெனில் காமத்தை வெல்ல வேண்டும்; காமம் இருக்கக் கூடாது; என்பதே நாம் பக்தி வழியில் இருந்து ஆன்மீக முன்னேற்றம் காணும் படியாகும். இங்கே காமம் எனக் குறிப்பிடுவது சிற்றின்பமான பாலுறவை மட்டுமே. அதைத் தான் முக்கியமாகவெல்ல வேண்டும் என்போம். அதை வென்றால் மற்ற ஆசைகளும் தானாகவே அற்றுப் போம். காமம் என்பது பொதுவாக ஆசைகளை அனைத்துவித ஆசைகளையும் குறிப்பிடும் சொல்லாகும். அதற்கே அம்பிகையின் வழிபாடுகளின் மூலம், அவள் அங்க வர்ணனைகள் மூலம் அந்தக் காமனை வெல்லலாம் என்பதே குறிக்கோள். ஆனால் பாருங்கள்! விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து ஈசனையே மயக்குவதோடு அல்லாமல், ஒரு குழந்தை வேறு பிறக்கிறது. காமத்தை ஏற்படுத்தியதற்காக மன்மதனை எரிக்கிறார் ஈசன். அவரே பின்னர் காமவசப் படுகிறார். இது சரியா? எல்லாருக்கும் இந்தக்கேள்வி எழும் இல்லையா! அது போக ஈசனால் எரிக்கப்பட்ட மன்மதனோ எனில், அனைவரையும் எவர் உதவியுமின்றித் தன் மலர் பாணங்களால் ஜெயிக்கிறான். தேவாதி தேவர்களுமே காமவசப்படுகின்றனர்.

ப்ரபஞ்சம் வளர்வதற்குக் காமம் தேவை; ஆனால் அதுவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளாக இருத்தல் வேண்டும். அசுர சக்தியோடு போராடினால் தான் நல்ல சக்தி ஜெயிக்கும் என்பதைப் புரிந்து கொள்கிறோம் இல்லையா? ஆகவே காமம் என்பது இருந்தாலே அதை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சிருஷ்டி தத்துவம் தடைபெறாமல் நடைபெறவேண்டியே தேவைக்கே காமம் என்பதை உணர வேண்டும். எல்லாமும் சரியாக நடந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையின் ருசியும் குறைந்தே காணப்படும் அல்லவா? எப்படிக் குந்தியானவள் கண்ணனிடம் , "அப்பா, கண்ணா, எனக்குக் கஷ்டத்தை நிறையக் கொடு; கொடுத்துக்கொண்டே இரு. அப்போது தான் நான் உன்னை மறக்காமல் இருப்பேன்." என்று சொன்னாளோ அதே போல் நமக்கும் கஷ்டம், நஷ்டம், காமம், க்ரோதம் போன்றவற்றால் பிரச்னைகள் ஏற்பட்டாலே பகவான் நினைப்பே நமக்கு வருகிறது. ஆகவே தான் இவை எல்லாமும் அவரவர் கர்மவினைக்கு ஏற்பக் கூடவோ, குறைச்சலாகவோ ஒரு சிலருக்கு எதுவும் இல்லாமலோ கிடைக்கிறது. எதுவும் இல்லை எனில் அவருக்குக் கர்ம மூட்டை இல்லை; பிறவி இல்லை; நேரடியாக மோக்ஷம் தான். ஆனால் அதை அனுபவத்தாலேயே உணர முடியும். ஒருவருக்கு இந்தப்பிறவியில் பணக் கஷ்டம் இல்லை என்றாலோ, அல்லது பதவி, அதிகாரங்களில் உச்சத்தில் இருந்தாலோ அவர்களுக்குக் கர்ம மூட்டைகள் சுமக்க இல்லை என அர்த்தம் இல்லை. அவர்கள் முந்தைய பிறவியின் நல்ல கர்மாக்களின் பலன்களை அனுபவிக்கின்றனர். கெட்ட கர்மாக்களின் பலனும் கட்டாயம் ஏற்பட்டே தீரும்.

இனி பட்டர் சொல்வதைப் பார்ப்போமா!


அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

பட்டர் அன்னையின் இந்த அதிசயமான வடிவை வியந்து போற்றுகிறார். அதிசயமான அழகுடைய அன்னை; அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை; குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களெல்லாம் அவளைக் கண்டு அவள் முகம் சூரியனோ என எண்ணித் துதிக்கின்றது. அந்தத் தாமரைக்கொடி மெல்லியதா; அன்னையின் உடல் மெல்லியதா என்னும் வண்ணம் மெல்லிய கொடியைப் போன்ற சுந்தரமான அழகுடையவள், ரதி துணைக்கு வர, ஈசன் மேல் காமன் தொடுத்த அம்பைக்கண்டு கோபம் கொண்ட ஈசன் அந்தக் காமனின் முயற்சிகள் தோல்வியே அடையும் என எண்ணிக்கொண்டு தன் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்து அவனைச் சுட்டெரித்தார்; ஆனால் அம்மையே! உன் அழகோ அவரையும் வெற்றி கொண்டுவிட்டதே! அவ்வளவு தானா! நீ வெற்றி கொண்ட உன் அருமைத் துணைவன் உடலிலும் இடப்பாகம் இடம் கொண்டுவிட்டாயே! மன்மதனை வெற்றி கொண்டோம் என ஈசன் நினைத்த அதே வேளையில் அந்த வெற்றியையும் தோல்வியாகச் செய்த உன் அழகை எங்கனம் வர்ணிக்க முடியும்!

No comments:

Post a Comment