எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, December 23, 2009

ஜெய ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

மநோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வாநரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

அஞ்சனாதேவிக்கு வாயுவின் உதவியால் சிவாம்சமாய் ஆஞ்சநேயர் பிறந்தார். அவர் பிறக்கும் முன்னரே தேவர்களின் ஆசிகளால் கர்ப்பத்திலேயே பூணூல், கோவணம் மற்றும் குண்டலங்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டதாய்ச் சொல்லுவார்கள். அஞ்சனை பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது உள்ளே இருந்த ஆஞ்சநேயர் உருவம் பெரியதாக இருந்ததால் பிரசம் நடக்கக் கஷ்டப் பட்டது. அஞ்சனையோ வலியால் துடித்தாள். கேசரிக்கோ என்ன செய்வது எனப் புரியவில்லை. அஞ்சனைக்கு வரமளித்த ஈசனையும், அந்த வரத்தை நிறைவேற்றிய வாயுவையும் இருவருமே துதித்தனர். வாயு பகவான் மும்மூர்த்திகளையும் அண்டிப் பிரார்த்திக்க அவர்கள் விஸ்வகர்மாவை அனுப்பினார்களாம். விஸ்வகர்மா பிரசவவலியோடு துடித்துக் கொண்டிருந்த அஞ்சனையின் வயிற்றில் இருந்த குழந்தையிடம் தாய்க்குச் சிரமம் கொடுக்காமல் வெளியே வரும்படியும், பராக்கிரமசாலியாக விளங்கப் போகும் அந்தக் குழந்தை பிறக்கச் சரியான தருணம் வந்துவிட்டதாகவும், தானே வெளியே வரும்படியும் சொன்னாராம். அந்தக் குழந்தையோ விஸ்வகர்மாவைப் பார்த்து, தன் பருமனான உடல்காரணமாய் வெளியே வரமுடியவில்லை என்றும், உடல் சிறிதாக ஆக அருளவேண்டும் எனவும், மேலும் தனக்குத் தேவையான பொற்கோவணம், பொன் பூணூல், பொற்குண்டலங்களைக் கொடுத்து அருளவேண்டும் எனவும் கேட்க அவ்விதமே விஸ்வகர்மா கொடுத்ததாக ஒரு புராணக் கதை சொல்கிறது. இந்த அஞ்சனா தேவி தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காட்சியை ஹரித்வாரில் சண்டி கோயிலுக்கு எதிரே இருக்கும் அஞ்சனை மலையில் காணமுடியும்.



அழகான சுதைச் சிற்பங்கள். அஞ்சனை மடியில் பால ஆஞ்சநேயன். அவரை அணைத்த வண்ணம் தன் இன்னமுதை ஊட்டும் அஞ்சனை. காணக் கிடைக்காத காட்சி இது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ஹநுமத் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நக்ஷத்திரத்தில் அனுசரிக்கப் படுகிறது. வடக்கே உள்ள ஆந்திர மாநிலத்தில் இருந்து மற்ற வட மாநிலங்களில் எல்லாம் சித்திரை மாதம் பெளர்ணமி அன்றே ஹநுமத் ஜெயந்தி அநுசரிக்கப் படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் வைசாக பெளர்ணமிக்கு மறுநாள் அநுமத் ஜெயந்தி அனுசரிக்கப் படுகிறது. ஆஞ்சநேயர் சிறு குழந்தையாக இருக்கும் போது சூரியனைக் கண்டு பழம் எனப் பறந்து சென்று உண்டதாகவும், உலகு இருண்டதாகவும், பின்னர் இந்திரனின் வஜ்ராயுதத்தால் அடி பட்டு மயங்கி விழுந்ததாகவும் சில புராணக்கதைகள் கூறுகின்றன. ஆனால் எனக்குத் தெரிந்த தர்க்க நியாயப் படி ஆஞ்சநேயர் சூரியனின் சீடர். சூரியனைச் சுற்றி வந்து அவரின் வேகத்துக்கு ஏற்ப அவருடன் சென்று பாடங்களைக் கற்று நவவியாகரணபண்டிதன் என்னும் பட்டத்தைப் பெற்றவர். சூரியனையே மிஞ்சும் அளவுக்கு ஞானம் அடைந்தவர். இப்படிச் சூரியனையே விழுங்கும் அளவுக்கு ஞானம் பெற்றதாலே இம்மாதிரியான ஒரு கதை வந்திருக்கலாமோ??? பொதுவாய் குருவை சீடன் மிஞ்சி விட்டால் அவனையே விழுங்கிச் சாப்பிட்டுடுவான், அவ்வளவு புத்தி என வழக்குச் சொல்லாகச் சொல்லுவதுண்டு அல்லவா? அப்படி இருக்கலாமோ?? இது என்னோட கருத்து மட்டுமே. மேல் அதிகத் தகவல்கள் சொல்லுபவர்களுக்குக் காத்திருக்கேன்.

No comments:

Post a Comment