எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Monday, December 21, 2009

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேய பிரபாவம்!

"புத்திர் பலம் யசோதைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநுமத் ஸ்மரணாத் பவேத்"

இந்த ஸ்லோகத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. அநுமனை எந்நாளும் துதிப்பவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைச் சொல்லுகிறது இது. புத்தி என்பது ஞானத்தை அடைய வேண்டிய புத்தியையும் குறிக்கும். பலம், இங்கே மனோபலம், தேகபலம் இரண்டையும் சொல்கிறது. யசஸ்=நல்ல புகழைத் தரும், தைரியம்= தைரியமாய் இருத்தலையும், நிர்பயத்வம், எதற்கும், எப்போதும் அஞ்சாமையையும் குறிக்கும். தைரியம் என்பது மனோதிடத்தையும் குறிக்கும். அரோகதா என்பது நல்ல ஆரோக்கியத்தைக் குறிக்கும். அஜாட்யம்= ஜாட்யம் என்பது ஜடத் தன்மை. அஜாட்யம் என்றால் ஜடமற்ற தன்மை. முக்கியமாய்த் தேவையான விஷயங்களில் ஈடுபாடைக் காட்டுவதையும், தேவையற்றவற்றை விலக்குவதையும் குறிக்கும். வாக் படுத்வம்= அநுமனைத் தியானிப்பவர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். சொல்லின் செல்வன் ஆன அநுமன் நம்மையும் சொல்லின் செல்வர்களாக மாற்றுவான். அத்தகைய ஆஞ்சநேயனின் சரித்திரத்தைச் சொல்லவும் முடியுமா? அநுமத் பிரபாவம் என்பது எளிதன்று. என்றாலும் இது ஒரு சிறு முயற்சி. ரொம்பச் சுருக்கமாய்ச் சொல்ல முயல்கிறேன். அப்புறம் மான், மழுவோடு இருக்கும் ஆஞ்சநேயர் பத்தின தகவல் தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன். படம் மேலே பார்க்கலாம். இனி ஆஞ்சநேயரின் சரித்திரம்.


ஆஞ்சநேயர் சரித்திரம் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னால் கொஞ்சம் பூர்வ கதையையும் தெரிஞ்சுக்கணும். வருணனின் பெண்ணான புஞ்சிதஸ்கலை என்பவளைக் கண்ட ராவணன் அவள் அழகில் மயங்கி வலுக்கட்டாயமாய் அவளைத் தன் விருப்பத்திற்கு இணங்கச் செய்கிறான். ராவணனால் வஞ்சிக்கப் பட்ட புஞ்சிதஸ்கலை ராவணனைப் பழி வாங்க வேண்டும் என எண்ணுகிறாள். ஆனால் ராவணனால் கெடுக்கப் பட்ட இந்த உடலோடு அவனைப் பழிவாங்க அவள் மனம் ஒப்பவில்லை. இப்படிப் பட்டதொரு காமத்தை உடைய ராவணனைத் தண்டிக்க காமனை எரித்த அந்த மஹாதேவனால் தான் முடியும் எனவும் தோன்றியது அவளுக்கு. ஆகையால் ஈசனை நினைத்து எப்போவும் பஞ்சாட்சரத்தை ஜபித்தவண்ணம் காமதகனரின் அருளுக்காகத் தவம் இருக்க அரம்பித்தாள். வரம்பு மீறிய ராவணனின் காமத்தையும் சுட்டுப் பொசுக்க ஈசனாலேயே முடியும் என மனதார நம்பினாள். அவள் இந்தப் பிறவியை விட்டொழிக்க எண்ணியதால் ஈசனும் அவளுக்கு அவ்விதமே இந்த வருணனின்மகள் என்ற பிறவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணின் வயிற்றில் பிறக்க வைப்பதாகவும், ஆனால் அந்தப் பிறவியில் தாமே அவளுக்கு மகனாய்ப் பிறந்து ராவணனின் காமத்தை மட்டுமல்லாமல் அவன் அழிவுக்கும் காரணகர்த்தாவாய் அமையப் போவதாயும் உறுதி அளித்தார்.

புஞ்சிதஸ்கலைக்கும் மறுபிறவி கிடைக்கிறது. அந்தப் பிறவியிலும் பெண்ணாகவே பிறந்தாலும் அழகற்ற வானரப் பெண்ணாய்ப்பிறக்கிறாள். இவ்விதம் அவள் பிறப்பதற்கு இரு காரணங்கள். அவள் தாய் அகலிகை. அகலிகையோ இந்திரனால் வஞ்சிக்கப் பட்டு அதன் காரணமாய் ஒரு தூசி மாத்திரம் ஒதுங்கி இருந்தவள். பின்னர் ஸ்ரீராமனால் மறு வாழ்வு கிடைக்கப் பெற்றவள். அந்த அகலிகை தன் அழகில் தானே மயங்கி இருந்ததால் தனக்கு நேர்ந்த இழிவை நினைத்து எண்ணி வருந்தி, தனக்குப் பெண் பிறந்தால் அழகே இல்லாத பெண்ணாகப் பிறக்கவேண்டும், என்றும், அந்தப் பெண்ணுக்கு உடல்ரீதியான காமம் என்பது ஒரு பொருட்டாய் இருக்கக் கூடாது எனவும் பிரார்த்தித்துக் கொண்டாள். ஆகவே புஞ்சிதஸ்கலையின் தவத்தின் வேண்டுகோளும், இப்படியே அமையவே அகலிகைக்குப் பெண்ணாய்ப் பிறந்தாள் அஞ்சனை.

அஞ்சனை வளர்ந்து வாநர வீரன் கேசரியை மணந்தாள். இந்தக் கேசரி வனத்தில் வசிக்கும் முனிவர்கள் தவத்திற்கு இடையூறு செய்து வந்த மதயானைகளைக்கொன்றதால் கேசரி என்னும் பெயர் கிடைத்தது. இருவருக்கும் மணவாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். என்றாலும் இடை இடையே தங்கள் பெயர் சொல்ல ஒரு புத்திரன் பிறக்கவில்லை என்ற எண்ணமும் தோன்றியது. உடல்ரீதியான சம்பந்தமே இல்லாமல் புத்திரனாவது, பிறப்பதாவது?? என்றாலும் கேசரியும் சுபாவமாகவே சிவ பக்தன். இப்பிறவியிலும் அஞ்சனை தன் சிவபக்தியைக் கைவிடாமல் பின்பற்றி வந்தாள். ஆகவே இருவருமே தவமியற்ற ஆரம்பித்தனர். அப்போது ஈசனுக்குத் தான் அவதாரம் செய்யவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது எனத் தோன்றியது. வாயுவின் உதவியோடு தான் செய்யவேண்டிய காரியத்தைச் செய்ய நினைத்தார்.

சுவாசத்துக்கு ஆதாரமான காற்றுக்கு வாயு என்றே பெயரல்லவா? சிவசக்தி சொரூபமான உணர்வு நிலை ஒன்று திரண்டு பேராற்றல் மிக்கதொரு சக்தியாக மாறி வாயுவிடம் கலந்தது. தவம் புரியும் அஞ்சனையை அந்த வாயு நெருங்கவே, அந்தச் சக்தியானது அவள் மூச்சுக் காற்றின் மூலம் உள் புகுந்தும் விட்டது. சிலர் வேறு ஒன்றும் கூறுவர். பிள்ளைப் பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்த தசரதனுக்குக் கொடுக்கவென யாக தேவர்கள் கொண்டு சென்ற பாயாசக் கிண்ணத்தில் இருந்து ஒரு சொட்டுப் பாயாசம் கீழே தவம் செய்த அஞ்சனையின் வாய் உதட்டின் மேல் விழுந்ததாகவும் அவள் அதை நக்கிச் சாப்பிட்டதாகவும் அதன் பயனாக அநுமன் பிறந்ததாகவும் சொல்வார்கள். இன்னும் சிலர் தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனையின் எதிரே வாயுதேவன் தோன்றித் தன் கையிலிருந்த கனியை உண்ணச் செய்ததாகவும் அதன் பலன் ஆஞ்சநேயனாகப்பிறந்தார் என்றும் சொல்வார்கள். எது எப்படியோ சிவ ஸ்வரூபம் விஷ்ணு ஸ்வரூபத்திற்கு உதவவேண்டும் எனத் தானும் அவதாரம் செய்து விட்டது. அடிப்படைக் காரணமே ராவணன்.

ஈசன் வரம் கொடுத்துவிட்டு ராவணனை அவரால் அந்த வரங்களுக்கு மாறாய் அழிக்க முடியாது. ஆனால் வரங்களைத் தவறாய்ப் பயன்படுத்திய ராவணனோ திருந்தவே இல்லை. மேலும் விஷ்ணுவிற்கு பிருகு முனிவரின் சாபமும் இருக்கிறது. பூமியில் மானிடனாய்ப் பிறந்து மனைவியைப் பிரிந்து துக்கம் அநுபவிக்கவேண்டுமென. அதையும் நிறைவேற்ற வேண்டும். கைலை மலையைப் பெயர்க்கச் சென்ற ராவணன் நந்தியைப் பார்த்துக் குரங்கு எனப் பழிக்க, அவரும் குரங்காலேயே உன் வம்சம் அழியும் எனவும் கூறி உள்ளார். அதுவும் நடந்தாகவேண்டும். இத்தனை காரண, காரியங்களை உள்ளடக்கியே அநுமன் விஜயம் ஆரம்பம் ஆனது.

ஜெய் ஆஞ்சநேயா!

No comments:

Post a Comment