எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Friday, April 3, 2009

ராம நாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

இனி மேலும் சில தகவல்களைப் பார்ப்போம். தென் மாநிலங்களை விடவும், வடமாநிலங்களில் ஸ்ரீராமரும், கிருஷ்ணரும் அன்றாட வாழ்க்கையிலேயே வந்து போய்க் கொண்டிருப்பார்கள். வட மாநிலங்களில் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போதும், பிரியும்போதும், “ஜெய் ஸ்ரீராம்” என்றோ, “ராம் ராம்” என்றோ, “ஜெய் ஸ்ரீகிருஷ்ணா” என்றோ தான் சொல்லிக்கொள்வார்கள். அதே ஒருவனின் குணாதிசயம் சரியில்லை என்றால் அவர்கள் சொல்லுவது அவன் நல்லவன் அல்ல என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். உஸ்மே ராம் நஹீம் ஹை! என்றே சொல்கின்றார்கள். அந்த அளவுக்கு ஸ்ரீராமன் ஒரு மரியாதைக்குகந்த புருஷோத்தமனாய் இன்றும் வாழ்ந்து வருகின்றான். ராமாயணம் நிகழ்ந்ததுக்கு அடையாளமாக பூகோளம், தொல்பொருள் ஆராய்ச்சி, சரித்திரச் சான்றுகள், கலாசாரச் சின்னங்கள், காவியத்தின் குறிப்புகள் என்று ஏராளமாய்க் கிடைக்கின்றன. டாக்டர் ராம் அவதார் என்பவர் செய்த ராமாயண ஆராய்ச்சியில் 195 இடங்களை ராமரும், சீதையும் சென்ற இடங்களாய்க் கண்டறிந்துள்ளார். அவற்றில் சிருங்கிவேரபுரி என்றழைக்கப் பட்ட சிருங்கேரி, பாரத்வாஜ ஆசிரமம் (அலஹாபாத்), சித்ரகூடம், பஞ்சவடி, சீதாசரோவர், சீதாமடி, ஜனக்பூர், தர்பங்கா, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம், ராமநதீஸ்வரம், புள்ளப் பூதங்குடி ஆகிய இடங்களும் இடம் பெறுகின்றன. ஸ்ரீலங்காவில் சீதை சிறை இருந்த அசோக வனம் தற்போது “அசோக் வாடிகா” என்ற பெயரில் அழைக்கப் பட்டு புண்ய ஸ்தலமாகவும், சுற்றுலா மையமாகவும் பாதுகாக்கப் படுகின்றது.

இந்தோனேஷியாவில் ஸ்ரீராமர் மற்றும் சீதையை கலாசார- ஆதர்ஸ தம்பதிகளாய்ப் பார்ப்பதோடு அல்லாமல், ராமாயணத் திருவிழா “உலக ராமாயணத் திருவிழா”வாக சில ஆண்டுகள் முன்பு கொண்டாடியது. ராமாயணம் இந்தோனேஷியாவின் தேசீய இதிஹாசமாய் அறிவிக்கப் பட்டிருக்கின்றது. ஸ்ரீராமன் பிறந்தபோது விண்மீன்களும், கோள்களும் இருந்த நிலை குறித்து ஆய்வாளர்கள் மென்பொருள் மூலம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் ஸ்ரீராமன் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் சுக்லபட்ச நவமிதிதியில் பிறந்தார் என்னும் வால்மீகியின் குறிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த ஜோதிட அடிப்படையில் ஆராயப் பட்ட இன்னொரு விஷயம் கைகேயி ஜோதிட சாத்திரத்தில் வல்லுநர் எனவும், புனர்பூச நட்சத்திரத்தை சூரியன், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய கிரஹங்கள் சூழ்ந்திருப்பதால் அரசனுக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்ந்தே ஸ்ரீராமன் பட்டாபிஷேஹம் நடைபெறுவதைத் தடுத்துத் தன் கணவனே அந்தச் சமயம் ஆட்சியில் இருக்குமாறு செய்தாள் எனவும் சொல்லுவார்கள். பரதனும் பதவி ஏற்க மறுக்கவே அப்போது ஆட்சியில் இருந்த தசரதன் மரணம் அடைந்தான் எனவும் சொல்கின்றனர். நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி ஸ்ரீராமநாமத்தை ஒரு முறை கூறினாலே ஆயிரம் முறை கூறியதற்குச் சமம் என்கின்றனர் ஆன்றோர்கள். துளசிதாசரும், தியாகராஜ ஸ்வாமிகளும் ஒன்பது கோடி முறை ஸ்ரீராம நாமாவைக் கூறி ஜபித்து வந்ததால் ஸ்ரீராமன் நேரிலேயே வந்து அவர்களுக்கு தரிசனம் அளித்திருக்கின்றார். கும்பகோணத்தை அடுத்த கோவிந்த புரத்தில் போதேந்திராள் அதிஷ்டானத்தில் அன்றும், இன்றும், என்றும் ஸ்ரீராமநாமம் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அயோத்தியிலும், குஜராத் ஜாம்நகரிலும் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அகண்ட ராமநாம பஜனை கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.

"வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே!
வேத: ப்ராசேதஸாதாஸீத ஸாக்ஷாத் ராமாயணாத்மனா!!"

வேதங்கள் சொல்லுகின்ற பரமபுருஷன் ஸ்ரீராமனே ஆவான் என்பது ஆன்றோர் வாக்கு. அந்தப் பரம புருஷனே தசரத புத்திரன் ஆன ஸ்ரீராமனாக ஆவிர்ப்பவித்தான், அவதாரம் செய்தான். வேதத்தின் சரீரமே ஸ்ரீராமன். அந்த சரீரம் ஸ்ரீராமனாய் அவதாரம் செய்தபின்னர் வேதங்கள் அனைத்தும், வால்மீகிக்கு வசப்பட்டு அவர் திருவாக்கால் ராமாயணமாக மாறிவிட்டன என்பது பெரியோர் வாக்கு. மேற்கண்ட ஸ்லோகத்தின் அர்த்தமும் அதுவே. அப்படி என்னதான் அந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கின்றது? தர்மத்தின் பாதையில் வாழச் சொல்லிக் கொடுக்கின்றது. அந்த தர்மமே மானுட உருவெடுத்து வந்த ஸ்ரீராமன் என்றும் சொல்லுகின்றது.

அதிலும் பகைவன் ஆன வாலி, மாரீசன், ராவணன் போன்றோர் பாராட்டும்படியாக ஸ்ரீராமன் தர்மத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலனாக வாழ்ந்து மரியாதைக்கு உரிய புருஷ உத்தமனாய் இருந்து காட்டினான். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ,அங்கெல்லாம் அவன் பக்தன் ஆன ஆஞ்சநேயன் இருப்பான். ஆஞ்சநேயன் இல்லாமல் ராமாயணம் இல்லை. வேதமாக இருக்கும்போது ஞானமார்க்கத்தை உபதேசித்த வேதங்கள், ராமாயணமாக மாறியதில் தர்மத்தைக் கடைப்பிடிக்கச் சொல்லுகின்றது. வேதமே தர்மம். தர்மமே வேதம். எத்தனை கஷ்டம் வந்தாலும் தர்மத்தின் வழிசென்றால் அஞ்சனாபுத்திரன் துணையுடன் வெல்லலாம்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்,
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்!

ஸ்ரீராம் ஜயராம், ஜயஜயராம்!

Wednesday, April 1, 2009

ராம நாமமே துதி செய், நாளும் ஒரு தரம்!

இப்போது ராமாயண காவியத்தின் சில நிகழ்ச்சிகளைப் பார்க்கலாமா? எந்த ஒரு காரியத்துக்கும், காரணம் இருக்கும் என்பது நாம் ராமாயண காவியம் படிக்கும்போதே பார்த்தோம் அல்லவா? அதிலும் பின்னால் நடக்கப் போகும் விஷயங்களை முன் கூட்டியே அறிந்து அதற்கேற்றார்போல் சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாமா? முதன் முதல் ஸ்ரீராமர் விஸ்வாமித்திரருடன் காட்டிற்குச் செல்கின்றார். அப்போது தாடகை வதம் நடை பெறுகின்றது. அதன் பின்னர் மாரீசன், சுபாஹூ போன்றவர்கள் தாடகை வதத்திற்குப் பழி வாங்க ஸ்ரீராமனுடன் வந்து போர் செய்கின்றனர். அப்போது ஸ்ரீராமனிடம் விஸ்வாமித்திரர், “மாரீசனைக் கொல்லாதே, அப்படியே அவனை உன் அம்பினால் தூக்கிக் கொண்டு போய் தண்டகாரண்யத்தில் விழும்படிச் செய்” என்று கூற அவ்வாறே தன் அம்பினால் மாரீசனை தண்டகாரண்யத்தில் விழும்படிச் செய்கின்றார் ஸ்ரீராமர். பின்னால் சீதை கடத்தப் படும் நேரம் இந்த மாரீசனே ராவணனுக்கு வந்து உதவி செய்கின்றான்.

ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேஹம் நிச்சயம் செய்தாயிற்று. ஊரில் அனைவரும் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர். மந்தரைக்குச் செய்தி தெரிகின்றது. உடனேயே கைகேயியிடம் சென்று சொல்கின்றாள் மந்தரை. கைகேயியோ பரிசளிக்க அதைத் தூக்கி எறிந்த மந்தரை ராமன் முடி சூடினால் கைகேயியின் நிலைமை மோசமடையும் எனச் சொல்ல, கைகேயி அதைக் கேட்க மறுத்தாள். ராமன் முடி சூடுவது தனக்குச் சம்மதமே என்கின்றாள். ஆனால் தேவாதிதேவர்களுக்கோ அவதார நோக்கம் நிறைவேற வேண்டுமே? கவலை வந்தது. சரஸ்வதியை வேண்ட அவள் கூனியின் நாவில் புகுந்தாள். கூனியான மந்தரை கைகேயியைப் பார்த்து, “உன் தந்தைக்கும், ஜனக மஹாராஜாவுக்கும் ஜன்மப் பகை என்பதை அறியாயா? தசரதச் சக்கரவர்த்திக்காகவே அந்தப் பகை முற்றாமல் இருக்கிறதையும் அறிவாய் அல்லவா? இப்போது ஸ்ரீராமன் முடி சூட்டிக் கொண்டு அரசன் ஆனால் சீதை பட்டமஹிஷி! அதை நினைவில் வைத்துக் கொள், சீதை நிர்பந்தித்தால் ஜனகன் உன் தந்தையோடு போருக்கு வந்தால்? உன் தந்தை கதி என்ன ஆகும்? யோசி!” எனப் பலவாறு தூண்டுகின்றாள். இத்தனைக்குப் பின்னரே கைகேயி தான் ஏற்கெனவே கேட்ட இரு வரங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்கின்றாள். அப்போது பதினான்கு வருட வனவாசம் செய்யவேண்டும் எனவும் கைகேயி கேட்டாள். அவள் என்னமோ அப்படிக் கேட்டாள் எனினும் அதற்கும் காரணம் இருப்பதாலேயே வாக் தேவி அந்தச் சமயம் கைகேயியின் வாயில் குடி இருந்து கேட்க வைத்தாள். காரணம் பின்னால் வரும்.
வனவாசம் துவங்கியது. ஸ்ரீராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர் காட்டிற்குள் வருகின்றனர். முதன் முதல் பாரத்வாஜ முனிவரின் ஆசிரமம் கண்ணில் படுகின்றது. முனிவரும் ஸ்ரீராமனை வரவேற்றுச் சில காலம் அங்கேயே பர்ணசாலை அமைத்துத் தங்கச் சொல்லுகின்றார். அப்போது சில நாட்களில் பரதன், மூன்று அன்னையருடனும், முனிவர்கள், மற்ற ஜனங்களோடு அங்கே வந்து ஸ்ரீராமனைக் கண்டு செல்கின்றான். இம்மாதிரி பரதன் வரப்போவதை முன்கூட்டி அறிந்தே பாரத்வாஜர் இவ்வாறு கூறினார்.

அதே போல் பதினான்கு வருடம் வனவாசம் செய்த ராமன் ராவணனோடு போரிட்டபோது இந்திரஜித்தை எவராலும் வெல்ல முடியவில்லை. பல்வேறு விதமான யுக்திகள் கடைப்பிடிக்கப் பட்டன. ஆனாலும் மந்திர, தந்திரத்தில் யாராலும் ஜெயிக்க முடியாத இந்திரஜித்தை வெல்லவே முடியாமல், கடைசியில் மிகக் கஷ்டப் பட்டு லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொன்றான். விபீஷணனுக்கு ஆச்சரியம். வியப்போடு லக்ஷ்மணனைப் பார்த்தான். பாராடினான். ராமன் என்ன காரணம் இப்படித் தனியாய்ப் பாராட்டுகின்றாய்? வியப்புடன் வேறே லக்ஷ்மணனைப் பார்க்கின்றாயே எனக் கேட்டான். அதற்கு இந்திரஜித் சொன்ன பதில் வியப்பூட்டியது.

பல்வேறு தவங்கள் செய்த இந்திரஜித் எவராலும் வெல்லமுடியாத வரத்தை மட்டும் பெறவில்லை. பதினான்கு வருஷங்கள் ஊண், உறக்கம் இன்றி இருப்பவனால் மட்டுமே தான் கொல்லப் படவேண்டும் எனவும் வரம் வாங்கி இருந்தான். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. பதினான்கு வருடங்கள் சாமானியமா? ராமன் ஆச்சரியத்தின் உச்சிக்கே போனான். லக்ஷ்மணனைப் பார்த்தான். லக்ஷ்மணன் கூறினான்” “அண்ணலே, தங்களையும் அண்ணியாரையும், காக்க வேண்டி பகல் பொழுதுகளில் மட்டுமின்றி இரவுகளிலும் நான் தூங்கவில்லை. மேலும் தங்களுடன் நான் காட்டிற்குக் கிளம்பும்போது என் தாய் சுமித்திரை எனக்குச் சொன்ன அறிவுரையாவது: உன் அண்ணனும், அண்ணியும் உணவு அருந்தி முடித்த பின்னர் மிச்சம் இருப்பதை மட்டுமே நீ சாப்பிட வேண்டும் என்பதே. ஆனால் எனக்குச் சிரமம் வைக்காமல் நீங்கள் சாப்பிட்டு விட்டு இலைகளையும் நீங்களே எறிந்து சுத்தம் செய்துவிடுவீர்கள். ஆகவே தாங்கள் உண்ட பிரசாதத்தை உண்ணும் பாக்கியமும் எனக்குக் கிட்டவில்லை.” என்று சொல்லிக் கொண்டே தன் அம்பறாத் தூணியைக் கவிழ்க்க சபரி கொடுத்த உலர்ந்த பழங்கள் அதிலிருந்து கீழே விழுந்தன. பாசுரப் படி ராமாயணம் எழுத நினைச்சு முடியலை, பார்க்கலாம். நாளை ஸ்ரீராமநவமி. ஆகையால் ராமரின் சிறப்புகளும், ராமாயணத்தின் சிறப்புகளுமே முக்கியத்துவம் பெறும். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரைக்கும் பரவி இருக்கும் ராமாயண மஹாகாவியம் ஒரு நிரந்தர சாட்சி. ராமனைப் போன்ற ஒரு புருஷோத்தமனை நேரில் கண்டு ஆச்சரியப் பட்ட வால்மீகி அதை ஒரு மஹா காவியமாக்கி ஸ்ரீராமரின் பிள்ளைகளாலேயே பாடவும் வைத்து, ஸ்ரீராமரையே அதைக் கேட்கவும் வைத்து,வழிவழியாக நமக்கும் வந்திருக்கின்றது என்றால் அதன் பெருமையை சொல்லவும் முடியுமா?


டிஸ்கி: நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் படங்கள் அல்ல.

ராமநாமமே துதி செய் நாளும் ஒரு தரம்!

வால்மீகி ராமாயணம் கிமு 2 அல்லது மூன்றாம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்கலாம் என்று சொல்கின்றார்கள். அதைத் தொடர்ந்து வந்தது யோக வாசிஷ்ட ராமாயணம், பிரம்மானந்த தத்துவ சங்கிரஹ ராமாயணம், உத்தர ராம சரிதம் போன்றவையாகும். தமிழில் ஒன்பதாம் நூற்றாண்டில் கம்பர் ராமாயணத்தை எழுதினார். சங்க காலத்திலேயே ராமாயணம் பாடப் பட்டிருக்கின்றது என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிலும் ராமர் பாதம் பதியாத இடங்களே இல்லை என்னும்படியாகப் பதினான்கு வருஷ வனவாசத்தின் போது ராமர் அனைத்து மாநிலங்களிலும் விஜயம் செய்திருக்கின்றார் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன.

வடமொழியில் துளசிதாசர் “ராம சரித மானஸ” என்னும் தன்னுடைய ராமாயண நூலை கி.பி. 1513-ம் ஆண்டில் இயற்றினார். மலையாள மொழியில் பதினான்காம் நூற்றாண்டில் ராமாயணம் எழுத்தச்சனால் எழுதப் பட்டது. தெலுங்கில் ரங்கநாதரின் தவிபாதி ராமாயணம், திக்கண்ணா என்பவரின் நிர்லகதா ராமாயணம், பாஸ்கர ராமாயணம் போன்றவை எழுதப் பட்டது. ஒரிய மொழியில் பதினாறாம் நூற்றாண்டில் பலராம்தாஸ் என்பவரால் ராமாயணம் எழுதப் பட்டது. அஸ்ஸாமிய மொழியில் மாதங்குளி என்பவரும், குஜராத்தியில் அஜாஷ்ட மல்லன் ஹரிதாஸ், துர்க்காதாஸ் ஆகியோரும் ராமாயணம் எழுதினார்கள். மராட்டி மொழியில் ஏகநாதரின் பாவிர்த்த ரமாயணம் கிருஷ்ண தாஸ் முத்கல் யுத்தகாண்டம், முத்தேவரின் ராமாயணம், சமர்த்த ராமதாஸரின் லகு ராமாயணம் போன்றவை பதினேழாம் நூற்றாண்டில் எழுதப் பட்டவை.

வங்க மொழியில் கிருதிலாஸ் ஓஜாஸ்ரீராம பாதாஞ்சலி என்ற பெயரிலும் உருது மொழியில் ராமாயண குஷ்டார் என்ற பெயரில் முன்ஷி ஜெகந்நாத குஷ்டார் என்பவரும் எழுதினார்கள். நேபாள மொழியில் பானுபட் என்பவர் அத்யாத்ம ராமாயணம் எழுதினார். ராமரின் புகழ் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும், முக்கியமாய்க்கீழை நாடுகளில் பரவி இருக்கின்றது. தாய்லாந்து நாட்டின் அரசர்கள் தங்களை “ராமா” என அழைத்துக் கொள்ளுகின்றனர். தற்சமயம் இருந்த அரசர் பெயர் “பூமிபால் அதுல்யதேஜ் 9-வது ராமா” ஆவார். மேலும் தாய் மொழியில் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட ராம காவியம் “ராம கீர்த்தி” என்ற பெயரில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப் படுகின்றது. தாய்லாந்து நாட்டு குத்துச் சண்டை விளையாட்டு, அனுமன், வாலி, சுக்ரீவன் முதலிய வான்ர வீரர்களின் சண்டை முறைகளை அடிப்படையாகக்கொண்டது என்று சொல்லுகின்றனர். மேலும் தாய்லாந்து நாட்டின் பெயர் அவர்களது அரசியல் சட்டத்தின் படியாக “ஷ்யாம் தேசம்” அதாவது “விஷ்ணு நாடு” என்ற பெயரில் அழைக்கப் படுகின்றது. அயோத்தி, லவபுரி, காஞ்சனபுரி என்ற பெயர்களில் ஊர்கள் அங்கே உண்டு.

பினாங்கில் உள்ள ஒரு மசூதியில் உள்ள பெயர்ப்பலகையில் “இந்த மசூதி 1974-ம் ஆண்டு ஸ்ரீ ராம பாதுகையின் ஆணைப்படி கட்டப்பட்டது” எனப் பொறித்திருப்பதாய்ச் சொல்லுகின்றார்கள். மலேசிய அதிபரோ தாம் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது, “ஸ்ரீராமதூளி மேல் ஆணையாக” என்று சொல்லித் தான் பதவி ஏற்பார் எனச் சொல்கின்றனர். மலேசியப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கி.பி. 13-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட “ஹிகாய்த் செரிராமா” என்ற மலாய் மொழி ராமாயணம் பாடமாகப் பயிற்றுவிக்கப் படுகின்றது. மலேசிய சுலதானை, “ ராஜ பரமேஸ்வர” என்றும் ராணியை “ராஜ பரமேஸ்வரி” என்றும் ராஜகுமாரனை “லக்ஷ்மண” என்றும் அழைக்கின்றனர்.

தொடர்ந்து எழுத முடியாமல் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்.