எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, December 7, 2011

சேஷாத்ரி ஸ்வாமிகள் 4

சேஷாத்ரியின் அத்தை பெண்ணான காகினிக்கும் வேறொரு பையனோடு திருமணம் முடிந்துவிட்டது. இவ்வுலக வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் துச்சமாய்க் கருதிய சேஷாத்ரிக்கோ இவை எல்லாம் பெரிய விஷயமாய்த் தோன்றவில்லை. எந்நேரமும் பேரருளின் துணையை நாடினார். பூஜையறையில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்த அருணாசல மலையின் சித்திரம் மனதில் பதிந்தது. அவர் அருணாசலத்தை நேரில் கண்டதில்லை. அன்ன ஆகாரமில்லாமல் உறக்கமும் இல்லாமல் நெடுநேரம் துர்கா ஸூக்தம் ஜபித்துக்கொண்டே தன்னை மறந்து இருப்பார். சித்தப்பாவும், சித்தியும் அவரைக் கோபித்தும் பலனில்லை. தொந்திரவு அதிகமாவதாக எண்ணிக் கோயிலுக்குச் சென்றுவிடுவார். வரதராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நிதியிலேயோ அல்லது காமாட்சி கோயிலிலோ அமர்ந்து கொண்டிருப்பார். அம்பாளுக்கு நமஸ்காரம் செய்தவண்ணம் இருப்பார். வீட்டுக்குச் செல்லும் எண்ணமே வராது. சித்தப்பா ராமசாமி அங்குமிங்கும் அலைந்து திரிந்து அவரைக் கண்டுபிடித்து வீட்டில் கொண்டு சேர்ப்பார். சித்தப்பாவின் கட்டளைக்காக ஒரு நாள் இரண்டு நாள் இருந்துவிட்டு மீண்டும் கிளம்பி விடுவார் சேஷாத்ரி ஸ்வாமிகள். அவரைக் கண்டாலே சித்தபிரமை பிடித்தவர் போல் காணப்படுவார். இவர் நிலையைக் கண்டு, பொறுக்க முடியாமல் சித்திக்கும், சித்தப்பாவுக்கும் வயிறு எரிந்தது.

அதோடு சேஷாத்ரியின் கண்களுக்கு இறையின் உயர்தன்மை தவிர வேறெதுவும் தெரியவில்லை; புரியவில்லை. தானே மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் சொல்லுவதும், ஆன்ம தரிசனம் கிட்டியதற்கு ஆனந்திப்பதுமாக இருந்தார். பார்க்கிறவர்களுக்கு இது புரியவில்லை. சேஷாத்ரிக்கு மனநலம் கெட்டுவிட்டதாய் நினைத்துக்கொண்டனர். அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். ஆனால் அவரோ அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சரியாகக் கொடுத்ததோடு தெளிவான ஞான விளக்கமும் கொடுப்பார். அனைவரும் திகைத்துப் போவார்கள். “காமோ கார்ஷீத்” மந்திரத்தை மட்டுமே ஒன்றரை லக்ஷம் முறை ஜபித்ததாய்ச் சொல்லுவார்கள். சில நாட்களில் கோயிலுக்குச் செல்வதையும் நிறுத்திய சேஷாத்ரி காலையிலும் மாலையும் வீட்டில் இருந்துவிட்டு இரவில் மட்டும் மயானம் சென்று ஜபித்து வந்தார். வீட்டிலுள்ளவர்களுக்குப் பலநாட்கள் கழித்தே இது தெரிய வந்தது. ஆகவே அவர்கள் தடுத்தனர். ஆனால் சேஷாத்ரியோ தாம் ருத்ர ஜபம் செய்வதாகவும், ருத்ரபூமியிலேயே அதைச் செய்யவேண்டும் என்பதாகவும் கூறவே சித்தப்பா அவரை ஒரு அறையில் அடைத்துப் பூட்டிவிட்டார். தன்னை அறையில் அடைத்துப் பூட்டியதும் நன்மையே எனக் கருதிய சேஷாத்ரி உள்ளுக்குள்ளே தானும் தாழைப் போட்டுவிட்டு அன்ன, ஆகாரமின்றி ஜபம், தியானம் போன்றவற்றில் ஆழ்ந்துவிட்டார். வெளியே வரவே இல்லை. நான்கு தினங்கள் சென்றுவிட்டன.

பயந்து போன ராமசாமி ஜோசியர் கதவைத் திறந்து சேஷாத்ரியை வெளியே விட்டார். அவரோ மீண்டும் ருத்ர ஜபத்தை ருத்ர பூமியிலேயே செய்ய ஆரம்பித்தார். கடுமையாக உபவாசம் இருந்து உடலை வருத்தி ஜபம் செய்து வந்தார். ஜபம் செய்யச் செய்ய அவர் உள்ளத்தில் பிறந்த ஒளியானது முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் ராமசாமி ஜோசியரோ கவலை அதிகமாகி சேஷாத்ரியைக் கோவிக்க ஆரம்பித்தார். மயானத்துக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் சேஷாத்ரியோ வீட்டில் ஏதேனும் வேலை கொடுத்தால் கூட அதைச் செய்கையில் திடீரென வீட்டிற்கு வெளியே சென்று ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவார். என்னவென்று காரணம் கேட்டால் தேவதைகள் பாடிக்கொண்டு போவதாயும், கந்தர்வர்களும் காணப்படுவதாயும் கந்தர்வ கானம் காதுகளில் கேட்பதாயும் கூறுவார். சேஷாத்ரிக்குப் பைத்தியம் என்றே சித்தப்பா நினைத்து வந்தார். ஆனால் சேஷாத்ரியோ இதைக் கண்டு சிறிதும் கலங்காமல் உலகப்பந்தத்தில் சிக்கித் தவிக்கும் கர்மாக்களைச் செய்து வரும் கர்மிகளுக்கு இவை கஅதில் விழாது என்று கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

சித்தப்பாவோ சேஷாத்ரியின் ஜாதகம் பற்றித் தெரிந்திருந்தும் அவருக்குத் திருமணம் செய்து வைக்க நினைத்தார். உள்ளூரில் இருந்த உறவினரும், நண்பர்களும் இதையே கூறி வலியுறுத்தினார்கள். ஆனால் அவருடைய சுபாவமும், ஜபம், தவம், ருத்ரபூமியில் வாசம் போன்றவை தெரிந்த பெண் வீட்டுக்காரர்கள் கண்டிப்பாகப் பெண் தர மறுத்துவிட்டனர். சித்தப்பா மனம் உடைந்து போய் சேஷாத்ரியிடம் புலம்ப ஆரம்பித்தார். சேஷாத்ரியோ சித்தப்பாவைத் தேற்றி சமாதானம் செய்தார். கல்யாணம் என்ற பேச்சை ஆரம்பித்தால் தான் வீட்டை விட்டுப் போய்விடுவதாகவும் கூறினார். அதோடு கல்யாணப்பேச்சு நின்று போக உறவினரான பரசுராம சாஸ்திரிகள் என்பவர் சுடுகாட்டிற்குச் சென்று ஜபம் செய்துவிட்டுப் பின்னர் வீட்டிற்குள் நுழைவதை ஏற்கவே இயலாது என்று அடித்துச் சொன்னார். அன்று முதல் சேஷாத்ரி வீட்டினுள் நுழைவதையும் நிறுத்திவிட்டுக்கோயில்கள், குளக்கரைகள், மரத்தடி எனப் பொழுதைக் கழித்தார். அப்போது காஞ்சீபுரத்திற்கு ஹரித்வாரில் இருந்து பாலாஜி சுவாமிகள் என்பவர் தம் நான்கு சீடர்களோடு வந்திருந்தார். அவர் சர்வதீர்த்தக்கரையில் இருந்த விஸ்வநாத ஸ்வாமி ஆலயத்தில் தங்கி இருந்தார். அவரைக் கண்டதும் சேஷாத்ரி உணர்ச்சி வசப்பட்டுக்கால்களில் விழுந்து வணங்கினார். அவரை சாக்ஷாத் தக்ஷிணாமூர்த்தியாகவே கருதி தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தைக் கூறி அவர் கால்களில் விழுந்து வணங்கினார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் மாலையென வழிந்து கொண்டிருந்தது. பாலாஜி சுவாமிகள் சேஷாத்ரியைச் சாந்தம் செய்து அமைதியுடன் இருக்கும்படி கூறித் தம் அருகே அமர வைத்துக்கொண்டார். சேஷாத்ரியும் அவரும் சாஸ்திர சம்பந்தமாகப் பேசி தங்களுக்குள் மகிழ்ச்சி அடைந்தனர். தம் பார்வையாலேயே சேஷாத்ரிக்கு நயன தீக்ஷை கொடுத்துவிட்டார் பாலாஜி சுவாமிகள். சேஷாத்ரி அவருக்கு ஐந்தாவது சீடராக மாறி அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார்.

சுவாமிகள் சேஷாத்ரியின் மனம் இவ்வுலக பந்தங்களைப் பொருட்டாகக் கருதவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். மனதளவில் அவர் ஒரு சந்நியாசியாகவே இருப்பதையும் தெரிந்து கொண்டார். ஆகவே சேஷாத்ரி ஞான சந்நியாசத்துக்கு ஏற்றவர் என்பதைப் புரிந்து கொண்டு அவருக்குச் சந்நியாசிரமம் வழங்கி மஹா வாக்கியங்களையும் உபதேசம் செய்தருளினார். முறைப்படி சந்நியாசம் வாங்கிக் கொண்ட சேஷாத்ரி அந்த பிரம்மானந்தத்தில் தன்னை மறந்து திளைத்தார். அப்போது சேஷாத்ரியின் தகப்பனார் வரதராஜ ஜோசியரின் சிராத்தம் வரவே சித்தப்பா ராமசாமி ஜோசியர் இரண்டு வலிமையான நபர்களின் உதவியோடு தெருவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த சேஷாத்ரியைக் கட்டிப் பிடித்து வீட்டுக்கு இழுத்து வந்து சேர்த்து ஓர் அறையிலும் போட்டுப் பூட்டினார். சேஷாத்ரியோ தாம் சந்நியாசி எனவும் கர்மங்களுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை எனவும் வாதாடினார். ஆனால் சித்தப்பா விடாமல் அறையைப் பூட்டிச் சாவியைத் தம்மிடமே வைத்திருந்தார். சிராத்தம் முடிந்ததும் புரோகிதர்களை வணங்கி ஆசிகள் பெற வேண்டிய நேரம் வந்தபோது அறையைத் திறந்து சேஷாத்ரியை அழைத்தால் அறை காலி. சேஷாத்ரி அறையில் இல்லை.

No comments:

Post a Comment