எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, October 6, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

என்ன முயன்றும் கூனியால் கைகேயியின் மனதை மாற்ற முடியவில்லை. அனுமனோ ஸ்ரீராமனோடு நெருங்கிப் பழகி ராமனுக்குச் சேவை செய்வதற்காகவே தான் பிறப்பெடுத்திருப்பதாயும் நம்புகிறான். அப்படியே கூறவும் செய்கிறான். ஸ்ரீராமனுக்கும் தன் மனதில் பொங்கும் சக்தியாக அநுமன் வியாபித்திருப்பதாய்த் தோன்றுகிறது.

அதற்குள் அங்கே பாற்கடலில் மஹாவிஷ்ணுவோ இதெல்லாம் தேவையற்றவை என மனம் வருந்துகிறார். அதற்கு ஈசனோ அநுமன் ராமனுக்குச் சேவை செய்யவென்றே பிறந்துள்ளான் எனவும், அங்கே பூமியில் அவனை அனுமனாகாவே ஒரு வாநரனாகவே பார்க்கவேண்டும் எனவும், சிவனின் அம்சம் தானே தவிர சிவனின் அவதாரமோ, அல்லது சிவனேயோ பிறக்கவில்லை என்றும் தெளிவு செய்கிறார். எனினும் மஹாவிஷ்ணு தாம் பூஜிக்கவேண்டிய ஈசனை இந்த ராமாவதாரத்தில் முறைப்படி பூஜிக்கப் போவதாய்ச் சொல்ல, ஈசனும், அதற்கு ஒரு சந்தர்ப்பம் ராவண வதத்தின் பின்னே அமையும் எனவும் வாக்குக் கொடுக்கிறார்.

வசிஷ்டரின் வேத பாடங்களை ஸ்ரீராமனும், அவன் சகோதரர்களும் கற்றுக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் அநுமனும் விண்ணில் பறந்து சென்று சூரியனிடம் பாடம் கற்கின்றான். சூரியனின் பிரயாணத்தோடு கூடவே அந்த வேகத்துக்குத் தானும் ஈடு கொடுத்து சூரியனுக்கு முன்னால் வணக்கத்தோடு நின்றுகொண்டு, தான் பின்னாலேயே பிரயாணம் செய்து கொண்டு பாடங்களைக் கற்றானாம் அநுமன். அநுமன் கற்றுக்கொள்ளும் வேதகோஷங்கள் விண்ணில் மட்டுமின்றி மண்ணிலும், வசிஷ்டரின் ஆசிரமத்தில் எதிரொலிக்க, வசிஷ்டர் அநுமன் சூரியனிடம் பாடம் கேட்பதாயும் அவன் சாதாரணச் சிறுவன் என நினைக்கவேண்டாம் எனவும், கூறுகிறார். அநுமன் தன் வழக்கமான சேஷ்டைகளோடு ரிஷி, முனிவர்களிடம் விளையாட, கோபம் கொண்ட ரிஷிகள், அநுமனுக்குத் தன் பலம் தெரியாமல் போகக் கடவது என சபிக்கின்றனர். அடடா, இப்படி இருந்தால் அப்புறம் ராம காரியம் எப்படி நடக்கும் என சிந்தித்த நாரதர் ரிஷிகளிடம் வேண்ட, அவர்களும் வேறொருவரால் நினைவு செய்யப் படும் வேளையில் அவனுடைய பலமும், வீரமும் அவனுக்கு நினைவில் வரும் என சாப விமோசனத்திற்கு ஒரு வழியையும் கூறுகின்றனர். இப்போது கொஞ்சம் அப்படியே இலங்கையில் என்ன நடக்கிறதுனு ஒரு எட்டுப் போய்ப் பார்த்துடலாம்.

அநுமன் விஸ்வரூபம் எடுத்து சூரியனுக்கு நேரே நின்று பாடம் கேட்பதைப் பார்த்த ராவணனின் வீரர்களில் ஒருவன், ராவணனின் அரண்மனைக்கு ஓடோடிச் சென்று அவனிடம் அநுமன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு நின்று பாடம் கேட்பதையும், அவன் ஒரு வாநரன் எனவும் கூறுகின்றான். ஒரு வாநரன் வேதம் கேட்கிறானா? அதுவும் சூரியனிடமா? எனில் இதில் ஏதோ சூது உள்ளது! இந்தச் சூரியனுக்கு எவ்வளவு தைரியம்?? எனக்கெதிரே வரவே அஞ்சுவான்! இப்போது எனக்கொரு எதிரியை உருவாக்குகிறானா? ம்ம்ம்ம்ம்??? ஒரு கால், ஒரு கால், அன்றொரு நாள், இமயமலையில் கைலையைத் தாண்டும் போது கைலை தடுக்குகிறது என அதைத் தூக்கி அப்பால் போட எண்ணிய என்னை நந்தி சபித்தானே! அது உண்மையாகிவிடுமோ? இருக்கட்டும், இருக்கட்டும், இதற்கெல்லாம் அஞ்சுபவன் இந்த இலங்கேஸ்வரன் இல்லை. சரிதான் இந்த அநுமனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதுதான். அவன் எங்கே இருந்தாலும் சரி! தன் வீரனிடம் அந்த வாநரன் எங்கே இருந்தாலும் அவனைக் கொன்று மண்ணில் புதைக்கச் சொல்கிறான் ராவணன்.
பாடம் கற்றுவிட்டு வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஓய்வாக அமர்ந்து ராமநாமத்தை எழுதிக்கொண்டிருக்கும் அநுமன் மேல் ஒரு பாறாங்கல் விண்ணிலிருந்து விழுகிறது. சத்தம் கேட்டு அனைவரும் ஓடோடி வந்து பார்க்க, அநுமன் உருண்டு ஒரு பக்கமாய்க் கிடக்கப் பாறாங்கல் தரையில் மோதிக்கிடக்கிறது. அநுமனுக்கு எதிரி தோன்றி இருப்பதையும், அவன் யார் என்பதையும் தன் திருஷ்டியின் மூலம் உணர்ந்த வசிஷ்டர் அநுமனை அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுமாறு கூறுகிறார். அநுமன் மறுக்கிறான். ராமன் இருக்குமிடமே தான் இருக்குமிடம் எனவும், ராமனின் காலடியே தனக்குச் சொர்க்கம் எனவும் கூறுகிறான். அதற்கு உதவுமாறும் வேண்ட, ஸ்ரீராமனோ, தற்சமயம் அநுமன் அங்கிருந்து செல்வதே சரி எனவும், பின்னர் ஒரு சமயம் நிச்சயம் சந்திப்போம் எனவும் அநுமனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைக்கிறான்.

டிஸ்கி: ப்ளாகர் இன்னிக்குப் படம்லாம் காட்டாதேனு எச்சரிக்கை கொடுத்துடுச்சு! :)))))

2 comments:

  1. ராமன் இருக்குமிடமே தான் இருக்குமிடம் எனவும், ராமனின் காலடியே தனக்குச் சொர்க்கம் எனவும் கூறுகிறான்:)
    Jai Sri Ram -

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete