எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Tuesday, November 30, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

ஸ்ரீராமன் விருப்பப்படி தன்னிருப்பிடம் திரும்பிய அநுமன் தன் கல்வியைத் தொடருகிறான். அனைவரும் எதிர்கொள்ளப் பயப்படும் சூரியனையே தனக்குக் குருவாய்க்கொண்டு ஹநுமான் தன் பாடங்களைக் கற்று முடிக்கிறான். சூரியனின் வேகத்துக்கு ஈடு கொடுத்துக்கொண்டு அவன் முகத்தையே பார்த்த வண்ணம் பின்னாலேயே நகர்ந்துகொண்டு கற்று முடித்த ஹநுமான் குரு தக்ஷிணை தர விரும்பினான். ஆனால் சூரியனோ அநுமனின் அர்ப்பணிப்பு உணர்வும், பாடம் கேட்டுக்கொள்வதில் இருந்த ஆர்வமும், புரிதலில் காட்டிய அதீதத் திறமையும், இத்தகையதொரு சீடனைத் தனக்குக் கொடுத்ததன் மூலம் அதுவே சிறந்த தக்ஷிணையாக அமைந்தது எனக் கூறுகிறான். ஆனால் அநுமனோ குரு தக்ஷிணை என்று கொடுக்கவேண்டும் என்று பிரியப்பட சூரியன் தன் மானசீக புத்திரன் ஆன சுக்ரீவனுக்கு உதவி செய்யும்படியும், முக்கியமான நேரங்களில் தக்க ஆலோசனைகள் அளிக்குமாறும் கூறுகிறான்.

இதன் பிறகே அநுமன் சுக்ரீவனிடம் கிஷ்கிந்தைக்கு வந்து சேருகிறான். அநுமன் சுக்ரீவனின் உதவிக்கு வரும் சமயம் சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக இருந்தாலும், அவன் அதை அண்ணனைக் கொன்றுவிட்டுப் பெற்றான் என்ற அவப் பெயருக்கு ஆளாகி இருந்தான். வாலியோ திடீரெனக் கிளம்பி வந்து சுக்ரீவனை விரட்டிவிட்டு அவன் மனைவியான ருமையைத் தன்னிடம் இருத்திக்கொண்டு சுக்ரீவனை கிஷ்கிந்தையை விட்டே விரட்டி விடுகிறான். தன்னிடம் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ள சிலரை மட்டும் அழைத்துக்கொண்டு சுக்ரீவன் வாலியால் வரமுடியாத இடத்தில் ஒளிந்து கொள்ள நினைக்கிறான். வாலியால் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் வர முடியாது.

அதற்கு ஒரு முனிவரின் சாபம் தான் காரணம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வாலி, சுக்ரீவன் பற்றிய பூர்வ கதையைத் தெரிந்து கொள்வோமா??? அப்போத் தான் பின்னாடி தொடர செளகரியமா இருக்கும். அண்ணன், தம்பிகளான இவர்கள் ஏன் ஒருவரை ஒருவர் கொல்லும் அளவுக்குப் போனார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். ராமாயணக் கதையே அண்ணன், தம்பி உறவும், அரசபதவியை யார் அநுபவிப்பது, யார் விட்டுக் கொடுப்பது என்பதில் உள்ள பேதங்களையும் குறித்தே. ஸ்ரீராமன் தம்பிக்காகத் தனக்கு உரிமையுள்ள அரசை விட்டுக் கொடுத்துக் காட்டுக்கு வந்தான் எனில் அவன் நண்பராக்கிக்கொள்ளும் சுக்ரீவனோ அண்ணனின் ராஜ்யத்தை அபகரித்துக்கொண்ட பழியுடன் இருக்கிறான். ராவணனோ தன் அண்ணனான குபேரனை விரட்டிவிட்டு லங்காபுரியை அபகரித்துக்கொள்கிறான். தன் சொந்த சகோதரர்களில் அனைவரிலும் இளையவன் ஆன விபீஷணனுக்கும் ராவணனுக்கும் ஒத்தே போகாது. அவன் அண்ணனுக்கு எதிராக ஸ்ரீராமனுடன்சேர்ந்து சண்டையிட்டான். எல்லாவற்றிற்கு ஒரு காரணம் உள்ளது. அது தான் மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம். தர்மத்தை மீறி நடந்தான் என்பதற்காகவே தன் அண்ணன் என்றும் பார்க்காமல் விபீஷணன் ஸ்ரீராமனிடம் சரணடைகிறான். அதே தர்மத்திற்காகவே ஸ்ரீராமன் தன் தந்தையின் வாக்கைக் காக்க வேண்டி தனக்கு உரிய ராஜ்யத்தை துறக்கிறான்.

ஒரே தர்மம், ஆனால் அதன் பாதைகளில் எத்தனை வித்தியாசம்???

No comments:

Post a Comment