எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Saturday, August 8, 2009

ராம நாம உபதேசம் சாதாரணமானதா???

“ராம” என்ற இரண்டெழுத்து சாதாரணமாய்த் தோன்றலாம். ஆனால் இந்த ராம நாமம் உபதேசம் பெறவேண்டிக் காத்திருந்தவர்களில் கபீர்தாஸரும் ஒருவர். பிறப்பால் முஸ்லீம் என்று சொல்லப் பட்டாலும், (சிலர் பழக்கவழக்கங்களும், சுற்றுச் சூழலுமே காரணம் என்றும் சொல்லுவார்கள்) எப்படியானாலும் கபீரின் மனம் பூராவும் ராம நாமத்திலேயே லயித்தது. அதில் தான் இம்மைக்கும், மறுமைக்கும் வேண்டிய ஆநந்தம் இருக்கிறது என்பதைப் பூரணமாய் உணர்ந்தார் கபீர். ஆனால் இந்த மந்திரத்தைத் தாமாகச் சொல்லுவதை விட குரு மூலம் உபதேசம் பெற்றுச் சொன்னால்?? ஆஹா! அத்தகைய குரு நமக்குக் கிடைப்பாரா?? ஏன் கிடைக்க மாட்டார்? இதோ ராமாநந்தர் இருக்கிறாரே? தினம் தினம் ராமாநந்தரின் வழிபாட்டு சமயத்தில் ராம, லக்ஷ்மணர்கள் நேரிலேயே தோன்றி வழிபாட்டை ஏற்பது வழக்கம். அத்தகையதொரு குரு மட்டும் கிடைத்துவிட்டால்??? தன் நெசவுத் தொழிலைக் கூட மறந்து ராம நாமத்தில் லயித்துப் போயிருந்த கபீருக்கு, ராமாநந்தர் உபதேசம் என்பது சும்மா வெளிப்பார்வைக்கு மட்டுமே. என்றாலும் அந்த ராமன் கபீரின் இந்தச் சின்னஞ்சிறு ஆசை மூலம் வேறே எதையோ யாருக்கோ உணர்த்த விரும்பினானோ?

கபீரும் ராமாநந்தர் உபதேசிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகத்துடனேயே வேறு நபர்களையும் நாடினார். யாருமே கபீருக்கு ராம நாமத்தை உபதேசிக்கவில்லை. ராமாநந்தரிடமே நேரிடையாகச் சென்று வேண்டுகோள் விடுத்தார் கபீர்தாஸர். ராமாநந்தர் மறுத்துவிட்டார். அந்நிய மதத்தைச் சேர்ந்தவனுக்கு ராமநாம உபதேசமா? இகழ்ச்சியுடனேயே ராமாநந்தர் கபீரை அங்கிருந்து போகச் சொன்னார். கிட்டத் தட்ட விரட்டப் பட்டார் கபீர். ராமாநந்தரின் அன்றைய வழிபாடு தொடர்ந்தது . வழிபாடு முடிவதற்குள்ளாக ராம, லக்ஷ்மணர்கள் வந்துவிடுவார்கள். ஆனால்,, ஆனால் இன்று வரவில்லையே?? ஏன்?? என்ன குறை?? பூஜைக்கான பொருட்களில் எதுவும் குறைவில்லை. ஆசார, அனுஷ்டானங்களிலும் குறைவில்லை. என்றாலும் நேரில் வந்து இத்தனை நாட்கள் பூஜையை ஏற்ற ராமன் இன்று வரவில்லையே? ஏன்? என்ன காரணம்? துன்பம் அடைந்தார் ராமானந்தர்.

மெல்ல எழுந்து வெளியே வந்தார். மடத்தின் வாயிலில் நின்று கொண்டு யோசித்தவண்ணம் அங்குமிங்கும் பார்த்தார். சுற்றுமுற்றும் தேடினார். அப்போது அசரீரி போன்ற ஒரு குரல்,” அண்ணா, அண்ணா, என்ன இது?” என்று கேட்டது. யார் பேசுவது?? குரல் மட்டுமே வருகிறதே? ராமாநந்தர் உற்றுக் கவனித்தார். “லக்ஷ்மணா, என்ன விஷயம்?” என்று மறு குரலும் கேட்டது. ஆஹா, ராம, லக்ஷ்மணர்கள் கடைசியில் நம் பூஜைக்கு வந்தே விட்டார்களா??? ராமாநந்தர் உற்சாகத்தில் ஆழப் போகும் சமயம். லக்ஷ்மணன் என்று அழைத்த குரல்” அண்ணா என்ன இது? இன்று ராமாநந்தரின் வழிபாடலில் கலந்து கொள்ளாமல் திரும்பலாம் என்று சொல்லிவிட்டாயே?” ராமாநந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன நம் வழிபாட்டில் ராமன் கலந்து கொள்ளப் போவதில்லையா? ராமன் குரல் கேட்டது அப்போது,” ஆம், தம்பி லக்ஷ்மணா, உத்தம பாகவதன் கபீர், என்னைத் தவிர வேறு யாரையுமே எப்போது நினையாதவன். அவன் என்னுடைய நாமாவைச் சொல்லுவதைக் கேட்கும்போதே எனக்குப் பரவசமாய் இருக்கும். அத்தகையவன் ராமாநந்தரிடம் உபதேசம் பெற வந்தான். அவனை விரட்டி விட்டார்களே! என் பக்தன் விரட்டப் பட்ட இடத்தில் எனக்கு என்ன வேலை? வா, நாம் போகலாம்.” எங்கும் அமைதி. ராமாநந்தர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவர் கண்களால் ராமனும், லக்ஷ்மணனும் அங்கிருந்து திரும்புவதையும் உணரமுடிந்தது.

ஆஹா, ராமனே வந்து கபீருக்கு மந்திர உபதேசம் செய்யாதது என் தவறு எனச் சுட்டிக் காட்டிவிட்டானே? அப்படி எனில் அந்தக் கபீர் எத்தனை பெரிய பாகவதோத்தமனாய் இருக்கவேண்டும்? அவனுடைய தேடுதல், ராமனைப் பற்றிய பக்தி எத்தனை விசாலமாய், ஆழமாய் இருந்திருக்கவேண்டும். நாம் தான் ராமனைப் பற்றிப் பாடுகிறோம், பேசுகிறோம், ராமன் நேரில் வருகின்றான் என நினைத்தது எவ்வளவு பெரிய தவறு? நம்மிலும் பெரிய பரமபாகவதன் கபீரை அவமதித்துவிட்டேனே? ராமாநந்தர் கபீர் எங்கு இருப்பார் என விசாரித்தார். கங்கை நதிக்கரையில் இருப்பார் எனத் தெரிய வந்தது. உடனேயே அங்கே விரைகிறார். தூரத்தில் இருந்தே ராமாநந்தர் வருவதைப் பார்த்துவிடுகிறார் கபீர். குருவானவர் வருகிறார். எதற்கு, என்ன என நமக்குத் தெரியாது. பெரும் பதட்டத்தோடு வேறு வருகிறார். அதை அதிகப்படுத்தும் வண்ணம் நாம் இன்னும் நேரில் அவருக்கு முன்னால் போய் தொந்திரவு செய்யக் கூடாது.

ஒரு க்ஷணம் தான். கபீர் தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டு கங்கைக் கரையின் படித்துறைப் படிகளில் ஒன்றில் படியோடு படியாகப் படுத்துக் கொண்டார். அந்த வழியாக ராமாநந்தர் வருவார் என்ற நிச்சயத்துடன் காத்திருந்தார். ராமாநந்தரும் வந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கபீரைத் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. படிகளில் இறங்கிப் பார்ப்போம் என இறங்கினால், படியென நினைத்து அவர் மிதித்தது, யாரோ மனிதனை அன்றோ? ஆஹா, என்ன இது? “ராம், ராம்” என்று அலறிக் கொண்டே நகர்ந்தார். கீழே இருந்து பதில் வந்தது. “வந்தனம் குருதேவரே! என்னைக் காலாலும் தீண்டி, மந்திர உபதேசமும் செய்து வைத்தமைக்குப் பலகோடி வந்தனங்கள்” கபீரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது

7 comments:

  1. ராம ராம ராம ராம
    ராம நாம தாரகம்
    ராமகிருஷ்ண வாசுதேவ
    பக்தி முக்தி தாயகம் .

    ராம் ராம்.

    ReplyDelete
  2. அருமை!கீதா!
    அந்த நிறைவுப் பகுதி,குரு பக்திக்கு இலக்கணமாகிறது!
    மனதைத் தொடும் காட்சி!ராமநாம மகிமையே மகிமை!நன்றி!

    அன்புடன்,
    தங்கமணி.

    //படியென நினைத்து அவர் மிதித்தது, யாரோ மனிதனை அன்றோ? ஆஹா, என்ன இது? “ராம், ராம்” என்று அலறிக் கொண்டே நகர்ந்தார். கீழே இருந்து பதில் வந்தது. “வந்தனம் குருதேவரே! என்னைக் காலாலும் தீண்டி, மந்திர உபதேசமும் செய்து வைத்தமைக்குப் பலகோடி வந்தனங்கள்” கபீரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது//

    ReplyDelete
  3. வாங்க கபீரன்பன், பின்னூட்டத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. வாங்க தங்கமணி அம்மா, உங்கள் வரவிலும், பின்னூட்டத்திலும் சந்தோஷமா இருக்கு. வேலைத் தொந்திரவால் உடனே பதில் கொடுக்க முடியலை. மன்னிக்கவும்.

    ReplyDelete
  5. கீதாம்மா, நன்றாக நிறைவு செய்துள்ளீர்கள்!
    //படியென நினைத்து அவர் மிதித்தது, யாரோ மனிதனை அன்றோ? ஆஹா, என்ன இது? “ராம், ராம்” என்று அலறிக் கொண்டே நகர்ந்தார். கீழே இருந்து பதில் வந்தது. “வந்தனம் குருதேவரே! என்னைக் காலாலும் தீண்டி, மந்திர உபதேசமும் செய்து வைத்தமைக்குப் பலகோடி வந்தனங்கள்” கபீரின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகியது//

    திருவடி சம்பந்தம் என்னும் பாத தீட்சையைச் சொல்லிய விதம் அருமை!

    ReplyDelete
  6. பதிவில் ஒரே ஒரு தகவற் பிழை!

    இராமானந்தர் கபீரை விரட்டவில்லை! சொல்லப் போனால் இராமானந்தர் முதலில் இருந்தே சமரச சன்மார்க்கவாதி! தென்னிந்திய இராமானுச சம்பிரதாயத்தில் இருந்து தான் வடக்கே சென்றார்! அன்னிய மதத்தவருக்கு தாரக மந்திர உபதேசமா என்று கேட்கும் வழக்கம் அவருக்கு இல்லை!
    இதோ இதையும் பாருங்கள் - http://en.wikipedia.org/wiki/Ramananda
    பக்த விஜயம் - கபீர் தாசர் வாழ்க்கை வரலாற்றையும் வாசித்து விடுங்கள்!
    சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப்-இலும் கபீரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன!

    இராமானந்தர் அதிகம் வெளியில் வராதவர்! கங்கை குளியலுக்குக் கூட, அனைவரும் எழுந்து கொள்ளும் முன்பு, அதிகாலை இரண்டு-மூன்று மணிக்கே வந்து விடுபவர்! இதைக் கபீரும் அறிந்து வைத்திருந்தார்! அதனால் தான் அந்தச் சமயத்தில் தன்னைக் கங்கைத் துறைப் படிக்கட்டில் கிடத்திக் கொண்டார்!

    இராமானந்தரின் சில சீடர்கள், மற்றும் சில உயர் குடியாளர்கள் தான் கபீரை விரட்டியது!
    இராமனந்தரிடம் உபதேசம் வேண்டித் தன் விழைவைச் சீடர்களிடம் சொல்ல, அவர்கள் துலுக்கரான கபீரை விரட்டி விடுகின்றனர்! விஷயம் இராமானந்தருக்குத் தெரியாது!

    கனவில் இராமனும், இலக்குவனும் "இது பாகவதா அபசாரம் நிகழ்ந்த இடம்" என்று விலக, சீடர்களைக் கூட்டி என்ன நடந்தது என்று கேட்கிறார் இராமானந்தர்! பாகவதா அபசாரம் எல்லாம் ஒன்னும் நடக்கலை-துலுக்கரான கபீரைத் தான் ஒதுக்கினோம் என்று சீடர்கள் சொல்கின்றனர்!

    ஏன் கபீரை விரட்டினீர்கள் என்று வினவ, உயர் குடிகள் ஏதாச்சும் சொல்வார்களோ என்று பயந்து தான் அப்படிச் செய்தோம் என்று சீடர்கள் சொல்கின்றனர்! இராமானந்தர் அவர்களைக் கடிந்து கொண்டு, வழக்கம் போல் யாரும் அண்டா வேளையில் கங்கைக்கு வரும் போது தான், மேற்கண்ட சம்பவம்! திருவடி சம்பந்தம்! பாதுகா தீட்சை! யாரையோ மிதித்து விட்டோமே என்று இராமானந்தர் "ராம ராம" என்று பதைக்க, துள்ளி எழுந்தார் கபீர்!

    பின்னர் அந்த நாமத்தின் பொருளையும் விரித்துச் சொல்லி, தன் முக்கியமான சீடர்களில் ஒருவராய்க் கபீரைச் சேர்த்துக் கொண்டார் இராமானந்தர்! அவரின் இன்னொரு மிகப் பிரபலமான சீடரான பீபாவும் அன்னிய மதத்தவரே!

    சுவாமி இராமானந்தர் வட இந்திய பக்தி இயக்கத்தின் தோற்றுவாய்! அவர் ஒரு நாளும் கபீரை விரட்டினார் இல்லை!

    ReplyDelete
  7. //இதோ இதையும் பாருங்கள் - http://en.wikipedia.org/wiki/Ramananda
    பக்த விஜயம் - கபீர் தாசர் வாழ்க்கை வரலாற்றையும் வாசித்து விடுங்கள்!
    சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப்-இலும் கபீரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன!//

    ரொம்ப நாளாச்சு இந்தப் பின்னூட்டத்தைப் படிச்சு. பதில் போடமுடியலை கேஆரெஸ், புத்தகம் இன்னிக்குத் தான் சாவகாசமா எடுக்க முடிஞ்சது. நீங்க மேலே சொல்லி இருக்கிறதெல்லாம் நான் படிக்கலைதான். நீங்க அறிவுறுத்தி இருக்கிறாப்போல் அதையும் படிச்சுக்கறேன். ஆனால் நான் படிச்சது, படிக்கிறது, இனிமேல் படிக்கப் போறது எல்லாம் இந்த லிப்கோ பதிப்பகத்தாரின் பக்தவிஜயம் புத்தகம் தான். குகப்ரியை அவர்களால் தொகுக்கப் பட்டு, 1958-ம் ஆண்டிலே முதல் பதிப்பு கண்டு, என்னிடம் இருப்பது 71-ம் ஆண்டின் மூன்றாம் பதிப்பு. அதிலே கபீர்தாசர் பத்திய தொகுப்பு 45-ம் பக்கத்திலே ஆரம்பிக்குது. 4-வது அத்தியாயம், "கபீர் ராமாநந்தரிடம் உபதேசம் பெறல்" இதிலே நான் எழுதி இருப்பதைவிடவும் கொஞ்சம் கடுமையாவே இருக்கு. என்ன பண்ணலாம்?? நான் கிட்டத் தட்ட நாற்பது வருஷங்களாய் இப்படியே படிச்சுட்டு மாற்ற முடியலை! முயல்கிறேன். :)))))))))))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete