எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Friday, November 25, 2011

ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்-- பகுதி ஒன்று

சேஷாத்ரி ஸ்வாமிகள்:
காஞ்சி நகரின் காமாட்சி அன்னையை ஆராதிப்பதற்காக ஆதி சங்கரர் சில உபாசனா முறைகளைத் தோற்றுவித்ததோடு அல்லாமல் அவற்றைச் சரிவர நடத்துவதற்காக, நர்மதா நதிக்கரையில் இருந்து தேவி உபாசகர்களான முப்பது பக்தர்களை அவர்களின் குடும்பத்தோடு காஞ்சிக்கு அழைத்து வந்தார். அவர்கள் ஶ்ரீ காமாட்சி தேவியைத் தங்கள் குலதெய்வமாகக் கொண்டு ஶ்ரீவித்யையைப் பரப்பி வந்தனர். அவர்கள் காலத்திலிருந்து தேவி பக்தியும், ஶ்ரீவித்யை உபாசனையும் செழித்து வளரத் தொடங்கியது. மக்கள் அவர்களைக் காமகோடியார் என அழைக்க ஆரம்பித்தனர். ஏனெனில் காஞ்சியின் காமாட்சி அம்மன் மட்டுமின்றி காஞ்சி நகரமே ஶ்ரீபராசக்தியின் ஶ்ரீசக்ரபீடத்தின் உருவாகவும் அம்மன் குடி கொண்டிருக்கும் காமகோடி பீடம் ஶ்ரீசக்கரத்தின் பிந்துவாகவும் கருதப்படுகிறது. அதை வழிபட்டு வந்த குலத்தவர்களைக் காமகோடியார் என்பது சரிதானே! இவர்கள் வேத அத்யயனம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், இதிகாசப் புராணங்களையும் நன்கறிந்தவர்கள். ஒரு சிலர் ஜோசிய சாத்திரத்திலும் வல்லவர்களாய் இருந்தனர். காமாட்சி கோயிலில் மட்டுமில்லாமல் ஶ்ரீவரதராஜர் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும், மான்யங்களும் பெற்றிருந்தனர்.

இந்தக் காமகோடியார் மரபில் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காமகோடி சாஸ்திரிகள் என்ற பெயரில் ஒரு மகான் அவதரித்தார். ஆசாரசீலரான அவர் அம்பிகையின் வழிபாடு மட்டுமின்றி, ஈசனையும் துதித்துப் பல பாடல்கள வடமொழியிலும், தெலுங்கிலும் இயற்றி இருக்கிறார் அபாரமான சங்கீத ஞானம் உடைய இவர் கல்லும் கரையும் வண்ணம் பாடல்களைப் பாடிவருவார். இவர் வீடே ஒரு பர்ணசாலை போல் அமைதியும், எழிலும் நிறைந்து காணப்படும். அவர் சிலரின் வேண்டுகோளின்படி அருகிலுள்ள வழூர் என்னும் சிற்றூருக்குச் சென்று தங்கினார். ஆனால் அவருக்கு ஆண் குழந்தைப்பேறில்லாமல் மனம் வருந்தினார். ஒரே ஒரு மகளைப் பெற்றிருந்த அவர் தம் அண்ணனான சிதம்பர சாஸ்திரிகளின் இரு பெண் குழந்தைகளையும் தம் சொந்தப் பெண்களாகவே வளர்த்து வந்தார். அவர்கள் இருவரில் கடைக்குட்டியான மரகதம் சிறு வயதிலேயே அபார புலமையோடும், அழகும், நற்குணங்களும் வாய்க்கப் பெற்றிருந்தாள். சாஸ்திரிகளும் அவளுக்குப் புராணக்கதைகள், தர்ம சாத்திரங்களைக் கற்பித்ததோடு இசையோடு பாடவும் கற்றுத் தந்தார். நாளடைவில் தனது பனிரண்டாம் வயதிலேயே மரகதம், “சாகித்ய சங்கீத கலாநிதி” என்ற பட்டத்தப் பெற்றாள்.

அவளுக்குத் திருமணப்பருவம் வந்துவிட்டதை அறிந்த காமகோடி சாஸ்திரிகள் தக்கமணாளன் தனது மாணவனும், சீடனும் ஆன வரதராஜனே என முடிவு செய்து அவர் தந்தையோடு கலந்து பேசித் திருமணம் நிச்சயித்தார். ஒரு நல்ல முகூர்த்தத்தில் இருவருக்கும் திருமணம் செய்வித்தார். மரகதமும், வரதராஜனும் அருமையாகவும், பெருமையாகவும், சீரோடும், சிறப்போடும் தாம்பத்தியம் நடத்தி வந்தனர். இன்முகத்தோடு அனைவரையும் உபசரித்த தம்பதிகள் இருவரும் தர்ம நூல்களையும், புராணக்கதைகளையும் படித்து மகிழ்ந்ததோடு, மாலை வேளைகளில் வரதராஜப் பெருமாளையும், ஶ்ரீகாமாட்சி அன்னையையும் தரிசனம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தனர். எல்லாம் இருந்தும் இருவருக்கும் குழந்தைப்பேறே இல்லை. பல விரதங்கள் இருந்தனர். தானங்கள் செய்தனர். திருத்தல யாத்திரைகள் சென்றனர். காமகோடி சாஸ்திரிகளின் மனமும் வருந்தியது. காமாட்சி அன்னையிடம் சென்று அவள் சந்நிதியில் மனமுருகப் பிரார்த்தித்தார். தான் ஏதோ தவறு செய்திருந்தாலும் அதற்காகத் தன் அருமை மகளைத் தண்டிக்க வேண்டாம் என்றும் அம்பிகையின் கடைக்கண் கடாட்சத்தைக் காட்டி ஒரு குழந்தையைக் கொடுத்தருளும்படியும் வேண்டினார். அன்றிரவே காமகோடி சாஸ்திரியாரின் கனவில் அன்னை தோன்றி சாஸ்திரியாரைத் தம்பதிகளுக்கு வெண்ணெய் கொடுக்கும்படி கூறிவிட்டு அந்த வெண்ணெயை உண்ட தம்பதிகளுக்குச் சிறப்பான ஞானக்குழந்தை பிறக்கும் எனவும் கூறி மறைந்தாள்.

மறுநாள் காலை நீராடி அநுஷ்டானங்களை முடித்த காமகோடி சாஸ்திரியார் தம்பதிகளிடம் தாம் கண்ட கனவைக் கூறிவிட்டுப் பராசக்தியை வேண்டிக்கொண்டு, அவளுக்குப் படைத்த பிரசாதமாக வெண்ணெயை இருவருக்கும் கொடுத்தார். மந்திரங்கள், துதிகள், ஜபங்கள் செய்யப்பட்டுப் புனிதமடைந்திருந்த வெண்ணெயை இருவரும் உண்டனர். சில நாட்களில் மரகதம் கருத்தரித்தாள்.

2 comments:

  1. Hello,
    Its been nice to read this post, I have been looking quite sometime to read about Seshadri swamigal...sp glad to come across it...
    Aani

    ReplyDelete
  2. நல் வரவு ஆணி பிடுங்கணும். என்ன பேருங்க இது? அவ்வளவு ஆணியா? :)))))

    ReplyDelete