எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, July 27, 2011

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

கிஷ்கிந்தையை சுக்ரீவன் ஆண்ட சமயத்தில் தான் அநுமன் சூரியனின் வேண்டுகோளின்படியும் அவனுக்குத் தான் அளிக்கவிருந்த குருதக்ஷிணைக்காகவும் சுக்ரீவனிடம் மந்திரியாக வந்து சேர்ந்தான். அவனுக்கு உண்மையாக சேவை செய்தும் வந்தான். ஆகவே வாலி மீண்டும் திரும்ப வந்து சுக்ரீவனை நாட்டை விட்டு விரட்டியபோது அவனுடன் அநுமனும், ஜாம்பவான் என்னும் கரடித் தலைவனும், சுக்ரீவனின் பிள்ளை அங்கதனும் சேர்ந்தே வந்திருந்தார்கள். இங்கே ரிஸ்யமூக பர்வதத்தை வந்தடைந்து அங்கே ஒளிந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் ஸ்ரீராமரும், லக்ஷ்மணனும் சீதை சென்ற திக்கு நோக்கிப் பிரயாணித்து வந்து சேர்ந்தனர். பம்பை நதிக்கரைக்கு வந்த ஸ்ரீராம, லக்ஷ்மணர்கள் ஏற்கெனவே சுக்ரீவனைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததால் அவனைத் தேடி நடந்தார்கள். மலையின் உச்சியில் இருந்து அவர்கள் இருவரையும் கண்ட சுக்ரீவனோ வாலியால் அனுப்பப் பட்டவர்களோ என எண்ணி அஞ்சினான். சந்தேகத்தோடு அவன் தன் நண்பர்களைக்கலந்து ஆலோசிக்க அவர்களில் அனுமன், “வாலியையே நினைத்துக் கவலைப்படுவதை விட்டொழியுங்கள். இவர்கள் யாரோ, எவரோ, அறிய மாட்டோம். இந்த மலையில் வாலியைப் பற்றிய கவலையை விட்டொழியுங்கள். ஓர் அரசனான நீர் அதை மறந்து ஒரு சாதாரண வானரமாக சஞ்சலம் அடைதல் உமக்குத் தகுதியானதன்று. இப்போது அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதை ஆலோசிக்கலாம்.” என்று கூறினான். ஒரு மந்திரி மன்னனிடம் தக்க நேரத்தில் கூற வேண்டிய ஆலோசனையைக் கூறியதன் மூலம் தன்னுடைய தகுதியை நிரூபித்தான் ஆஞ்சநேயன்.

ஆனாலும்சுக்ரீவனோ, “மாறுவேடத்தில் ஒற்றர்களை அனுப்பி நம்மை வேவு பார்த்து வரச் சொல்லி இருப்பான் வாலி. எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே. அநுமனே, நீ சென்று அவர்கள் யார், எவர், எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் நோக்கம் என்ன என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு வா. இந்தக் காட்டை நோக்கி அவர்கள் ஏன் பயணப்பட்டார்கள் என்பதையும் கேட்டு அறிந்து வா.” என்று அநுமனை அனுப்பி வைத்தான். அநுமனும் தன் சுய உருவை மறைத்துக்கொண்டு ஒரு சந்நியாசியாக மாறினான். ராம, லக்ஷ்மணர்கள் இருக்குமிடம் சென்று அவர்களை வணங்கி, “இந்தக் காட்டில் அங்குமிங்கும் அலைந்து யாரை அல்லது எதைத் தேடுகிறீர்கள்? உங்களைப் பார்த்தால் அரசர்கள் போலவும், அரசகுமாரர்கள் போலவும் காண்கிறீர்கள். ஆனால் ரிஷிகளுக்குரிய மரவுரி தரித்துள்ளீர்கள். நீங்கள் யார்?? ராஜரிஷிகளா? அல்லது விண்ணிலிருந்து பூமிக்கு வந்த தேவர்களில் இருவரா? இங்கு என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்?” என்று விநயமாக வினவினான்.

மேலும், “ரிஷிகள்போன்ற உடைகளை அணிந்திருந்தாலும் கூடவே போர்க்கோலமும் பூண்டிருக்கின்றீர்களே? உங்கள் இருவரது உடைவாட்களும்நீண்டு இப்போதுதான் தீட்டப்பட்டது போல் மின்னுகின்றன. வில்லை ஏந்தி வந்திருக்கும் வில்லாளிகளான உங்கள் அம்புறாத்தூணிகளோ கூர்மையான அம்புகளால் நிறைந்துள்ளன. இங்கு எவருக்கேனும் பாதுகாப்புக் கொடுக்க வந்துள்ளீர்களா? ஏன் ஒன்றுமே பதில் கொடுக்காமல் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று வினவினான். சற்று யோசனை செய்த அனுமன் மேலும் பேசுவான்: வானரங்களின் நிகரற்ற தலைவனும், தர்மத்தைக் கடைப்பிடிப்பவனுமான சுக்ரீவன் என்னும் வானரத் தலைவனே என் அரசன். அவன் அண்ணனான வாலி என்பவனால் நாடு கடத்தப்பட்டு ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்கும் சுக்ரீவனின் முக்கிய மந்திரி நான். இந்த ரிஷ்யமூக பர்வதத்திற்குள் வாலி நுழைய முடியாது என்பதால் சுக்ரீவன் தற்சமயம் இங்கே தங்கி உள்ளார். நானும் ஒரு வானரனே. என் பெயர் அனுமன். சுக்ரீவன் உம்மோடு தனது நட்பை விரும்புகிறார். அந்த நட்பை உறுதி செய்ய வேண்டி என்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். நான் இப்போது வந்திருக்கும் இந்த சந்நியாசிக்கோலம் நான் வேண்டி எடுத்துக்கொண்டிருப்பது ஆகும். நினைத்த நேரம், நினைத்த உருவை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள் நாங்கள். ஆகவே என்னை சுக்ரீவனின் அமைச்சனாக அறிந்து கொண்டு என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டு என் தலைவரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.”

சொல்லின் செல்வனான அனுமனின் பேச்சைக் கேட்ட ஸ்ரீராமர் முகமலர்ச்சியுடன் லக்ஷ்மணனைப்பார்த்து, " நாம் தேடிவந்த சுக்ரீவனின் அமைச்சன் ஆன இவன் நம்பிக்கைக்கு உரியவனாய்த் தெரிகின்றான். மேலும் இவனுடைய இந்தப் பேச்சுக்களில் இருந்து இவன் அனைத்து சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவன் என்று புரிகிறது. இவன் நடத்தையிலோ, சொற்களிலோ காணப்படும் தெளிவில் இருந்து இவன் மிக உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன் என்பதும், அருமையான ஒரு தூதுவனாகப் பரிமளிக்கிறான் என்பதும் புலனாகிறது. இவனைப் போன்ற ஒருவனை மந்திரியாகப் பெற்ற அந்த சுக்ரீவனின் காரியம் எவ்வாறேனும் கைகூடும். ஆகவே நமக்கும் நாம் வந்த காரியம் வெற்றியடையும் என்று தோன்றுகிறது.” என்றார்.

No comments:

Post a Comment