எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Thursday, January 19, 2012

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 7

இங்கே சண்டனையும் முண்டனையும் குறிப்பிட்டதன் காரணம் இருவரும் ஏறுக்கு மாறாகப் பேசுவார்கள்; நடந்து கொள்வார்கள். சண்டன் ஏறுக்கு மாறாகப்பேசுவதோடு நினைக்கவும் செய்வான். முண்டனோ தலையே இல்லாதவன் என்ற பொருளில் வருவதால் யோசிக்க எதுவுமே இல்லை என்றே இருப்பான். அவர்களிடம் நாம் என்ன சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். அவர்கள் இஷ்டத்திற்கே செய்வார்கள். இதைத் தான் மானுட வாழ்வில் பிடிவாதம் என்கிறோம். எத்தனை படித்து புத்திசாலிகளாய் இருந்தாலும் சில சமயங்களில் இந்த அசட்டுப் பிடிவாதம் நம்மை விடாது. தேவையே இல்லாமல் பிடிவாதம் பிடிப்போம். அப்போது நமக்கு யார் என்ன நன்மையாகச் சொன்னாலும் ஏற்க முடியாது. சொன்னதையே சொல்வோம். அல்லது அவர்கள் நம்மோடு பேசவே இல்லை என்னும்படி நடப்போம். இதைத் தான் தேவியின் கடைக்கண் கடாக்ஷத்தின் மூலம் மாற்றலாம். அவளுடைய நினைவால், அவள் கண்ணசைவால், நம்முடைய மூடத்தனமான பிடிவாதங்கள் விலகி நமக்கு வேண்டியவர்கள் வேண்டியபோது சொல்வதைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டு மன முதிர்ச்சியைப்பெறுவோம்.

அடுத்து வருபவன் தூம்ரலோசனன். தூம்ரம் என்பது புகை வருவதையும் லோசனம் என்பது கண்களையும் குறிக்கின்றன. தூம்ரலோசனன் என்றால் புகை படிந்த கண்களை உடையவன். அந்தகாசுரனுக்கு அண்ணனோ?? கண்கள் இருந்தாலே நல்லவற்றைப் பார்க்க யோசிக்கும்; அப்படி இருக்கையில் புகை படிந்த கண்களோடு தூம்ரலோசனன் நல்லவற்றை எங்கே பார்ப்பான்! பார்வை மறைக்கும். நல்லதே தெரியாது. இதன் காரணமும் சக்தி இல்லாமையே. சக்தியைப் பற்றாமையே. சக்தி வேண்டும் என முழுமனதோடு அவள் தாள்களைப் பணியாமல் இருப்பதே ஆகும். நம் உடலில் பரிபூரணமாய் சக்தி ஊடுருவி இருந்தால் மேற்சொன்ன ராக்ஷஸர்கள் எவரும் நம்மை ஆக்கிரமிக்க மாட்டார்கள். நமக்கு சக்தி தேவை எனில் அதற்கு நாம் அம்பிகையைச் சரண் அடைவதே நன்மை தரும்.

தேவி மஹாத்மியத்தின் மேற்சொன்ன அசுரர்களை நம் உடலோடு சம்பந்தப் படுத்தி விளக்கங்கள் கொடுத்துச் சொற்பொழிவு ஆற்றியவர் பண்டிட் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆவார். தூம்ரலோசனன், சண்டன், முண்டன் ஆகியோர் முன்னால் உள்ள அத்தியாயங்களிலேயே வந்துவிடுவார்கள். இங்கே என்னுடைய நினைவாற்றலைப் பொறுத்து முன்பின்னாகச் சொல்லி இருப்பதற்கு மன்னிக்கவும். இப்படி சர்வ வல்லமையுள்ள சக்தியை வழிபடுபவன் சகல செளபாக்கியங்களையும் பெறுவான்.

சிவசக்தி என இரண்டு பேரைச் சொன்னாலும் அம்பாளே ஈசனுக்கு சக்தியை அளிப்பதால் அவனுக்கெனத் தனியாக எந்தத் தொழிலும் இல்லை என்றே ஏற்படும். ஆனால் அவளோ சாக்ஷாத் காமேஸ்வரனுடைய ஜீவநாடியாகவே விளங்கி வருகிறாள். அவள் இந்நிலையில் இருப்பது மணிபூரக சக்கரத்தில். இங்கு தான் அஹம் என்னும் தன்னுணர்வு தோன்றுகிறது. இதுவே அம்பிகையின் ஸ்வரூபம் என்கிறார் ஆசாரியார். அவனுக்கும் உள்ள முக்கியத்துவத்தை நினைந்தே முதலில் ஈசனைச் சொல்லி வந்த ஆசாரியர் பின்னர் அம்பிகையின் தனித்துவத்தை மட்டும் சொல்ல ஆரம்பிக்கிறார். இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் ஸ்வரூபம் வர்ணிக்கப் படுகிறது. அம்பிகை எப்படி விளங்குகிறாள் எனில்,

क्वणतकाञ्ची-दामा करिकलभ-कुंभ-स्तन -नता
परिक्षीणा मध्ये परिणत शरचचन्द्र -वदना
धनु -र्बाणान पाशं सृणिमपि दधाना करतलै:
पुरस्ता दासतां न: पुरमथितु राहो -पुरुषिका

க்₁வணத₁கா₁ஞ்சீ₁-தா₃மா க₁ரிக₁லப₄-கு₁ம்ப₄-ஸ்த₁ன -நதா₁
ப₁ரிக்₁ஷீணா மத்₄யே ப₁ரிணத₁ ஶரச₁ச₁ந்த்₃ர -வத₃னா
த₄னு -ர்பா₃ணான பா₁ஶம்ʼ ஸ்ருʼணிமபி₁ த₃தா₄னா க₁ரத₁லை:
பு₁ரஸ்தா₁ தா₃ஸதா₁ம்ʼ ந: பு₁ரமதி₂து₁ ராஹோ -பு₁ருஷிகா₁

மேகலை பொங்க மதாசல கும்பம் எனா
முலை கண்டு இடை சோரா நீர்
மாக வளங்கெழு நாள் இறை அம்புலி
வாண்முகம் அம்பு வில் ஏடார் போது
ஏகநெடுங்கழை பாசம் ஓடு அங்குசம்
மேர்பற வந்தருள் காபாலி
நீ கமலம் திகழ் தாள் வருடு என்று அரன்
நீணர்மையின் விஞ்சிய கோ மாதே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

இங்கே அம்பிகையின் ஆபரணங்கள் மட்டுமில்லாமல் ஆயுதங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன. காஞ்சீ என்றால் ஒட்டியாணம். அந்த ஒட்டியாணத்தின் கீழே தங்கத்தால் சலங்கைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. அந்தச் சலங்கைகள் அம்பிகை அசையும்போதெல்லாம், “கிணுகிணு” எனச் சப்திக்கின்றனவாம். அத்தகைய ஒட்டியாணம் பூண்ட அம்பிகையின் மார்பகமானது யானையின் மத்தகம் போன்று காணப்படுகின்றனவாம். அதான் அம்பிகை சற்றே உடல் வளைந்து கொள்வதை வணங்கிய உடல் என்கிறார் இங்கே ஆசாரியர். சரத் காலத்துச் சந்திரனைப் போன்ற ஒளி பொருந்திய முகத்தை உடைய அம்பிகையின் இடையானது மிகவும் மெலிந்து காணப்படுகிறதாம். ஆனால் இவள் கைகளோ கரும்பால் ஆன வில்லையும், புஷ்ப பாணங்களையும் ஏந்திக்கொண்டிருப்பதோடு கூடவே பாசம், அங்குசம் போன்றவற்றையும் ஏந்திக்கொண்டிருக்கிறாள். திரிபுரங்களையும் தன் அட்டஹாசச் சிரிப்பால் எரித்த அந்த ஈசனின் “அஹம்” எனப்படும் ஸ்வரூபவடிவான இந்த அம்பிகை இங்கே நமக்காக எழுந்தருளட்டும்.

மன்மதனின் புஷ்பபாணங்களால் காமவசப்பட்டு அதிலேயே மூழ்கிக் கிடக்கும் சாமானிய மனிதர்களைக் கரையேற்ற வேண்டியே அம்பிகை அந்தப் புஷ்ப பாணங்களைத் தன் கைகளில் வைத்துக்கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம் அவர்கள் மனதையும் கட்டுப்படுத்துகிறாள். ஆனால் ஈசனிடமோ மோஹத்தை உண்டு பண்ணுகிறாள். அம்பாளின் வடிவங்கள் பல இடங்களிலும் பல்வேறு மாறுபட்ட மாதிரிகளில் இருந்தாலும் அனைத்துமே லலிதா திரிபுரசுந்தரியாகவே ஸ்ரீ வித்யா தந்திரத்தில் சொல்கின்றனர். அத்தகைய அங்க லக்ஷணங்களோடு காணப்படுபவள் காஞ்சி காமாக்ஷி தான் என்கிறார் பரமாசாரியார்.

காஞ்சி மாநகரே அம்பிகையின் நாபிஸ்தானமாகச் சொல்லுவதுண்டு. அந்த நாபிஸ்தானத்தில் கட்டப்படும் ஒட்டியாணத்தின் சிறப்பைத் தான் மேலே பார்த்தோம். இங்கே அம்பிகை வைத்திருக்கும் ஆயுதங்கள் லலிதா திரிபுரசுந்தரியின் அடையாளங்கள் ஆகும். நாலு ஹஸ்தங்களுடைய அவளுக்கு மேலிரண்டு கைகளில் பாசமும், அங்குசமும், கீழிரண்டு கைகளில் கரும்பால் ஆன வில்லும், புஷ்பபாணங்களும் காணப்படும்.

நமக்கு விருப்பும் உண்டு, வெறுப்பும் உண்டு. நம்முடைய விருப்பையும், வெறுப்பையுமே காமக்ரோதம் என்று சொல்கிறோம். காமமும் அடங்கிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். க்ரோதமும் அடங்கிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இங்கே அம்பிகையின் கையில் உள்ள பாசத்தை காமத்துக்கு உவமையாகச் சொல்லப் படுகிறது. பொதுவாகப் பாசம் என்று பற்றுக்குச் சொல்கிறோம் அல்லவா? அந்த ஆசை, பற்று தான் காமம். இது நம்மைக் கட்டுப்படுத்துகிறது. அங்குசம் யானையைக் குத்தி உசுப்பி விடப்பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இங்கே க்ரோதம் என்னும் அங்குசம் நம்மையே குத்துகிறது. பிறரைக் குத்துவதை விட நம்மைத் தான் அதிகமாய்க் குத்துகிறது. இரு விதத்திலும் நம் சக்தி வீணாகச் செலவாகிறது.

இங்கே நம் மனமாகிய யானையைப் பாசம் என்னும் சங்கிலியில் போட்டுக் கட்டி வைக்கவேண்டும். அதோடு போதாது. அங்குசத்தாலும் அந்த யானையை அடக்கியாக வேண்டும். மனதை அடக்குவதற்காகவே பாசமும், அங்குசமும் இங்கே அம்பிகையின் ஆயுதங்களாகக் காட்டப்பட்டுள்ளது.


துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

அம்பிகையைத் திரிபுரசுந்தரி என உணர்ந்து கொண்டதாய் பட்டர் தெரிவிக்கிறார். திருக்கடையூரில் அபிராமி அம்மன் வரத ஹஸ்தம், அக்ஷ மாலையோடு காணப்பட்டாலும் பட்டர் கண்களுக்கோ அம்பிகை திரிபுரையாகக் காட்சி அளித்திருக்கிறாள். நாங்கள் அனைவரும் இவளே துணை என நம்பித் தொழும் தெய்வம் ஆன இவள் எங்களைப் பெற்ற தாய். வேதமென்னும் விருக்ஷமும் இவளே. அதன் கிளைகளும் இவளே, அடியிலுள்ள வேரும் இவளே, கொழுந்துகளும் இவளே. அப்படிப் பட்ட இவள் கைகளில் ஏந்தி இருக்கும் பூங்கணைகளாலும் கரும்பு வில்லாலும், பாசாங்குச ஆயுதங்களின் மூலமும் இவளே சாக்ஷாத் திரிபுரசுந்தரி என அறிந்தோம். ஆயிற்று, அம்பிகையை எழுந்தருளப் பண்ணியாயிற்று.


சிவம் வெறுமனே சிவமாகவே உட்கார்ந்திருந்தால் இவ்வுலகம் நடப்பது எப்படி? ஆகையால் அவனின் லீலைகள் நடக்கவேண்டி அம்பிகை காமன் தோற்றுப் போனாலும் விடாமல் தன் வசீக்ரத்தால் தானே அந்தக் கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் எடுத்துக்கொண்டு அவனிடம் சேர்ந்தாள். சிவனைக் காமேஸ்வரனாக்கித் தானும் காமேஸ்வரியானாள். அதன் பின்னர் தன் கருணைப் பார்வையால் கருணா கடாக்ஷத்தால் காமன் எனப்படும் அநங்கனையும் உயிர்ப்பித்து சிருஷ்டி தத்துவம் நிறைவேற வேண்டி சாமானியமக்களிடம் காமத்தை உண்டாகும் அதிகாரத்தைத் திரும்ப அவனிடமே கொடுக்கிறாள். ஆனாலும் மீண்டும் சிவன் யோகத்தில் ஆழ்ந்துவிடாமல் இருக்க வேண்டி, தானே அந்தக் கரும்பு வில்லையும், பஞ்ச பாணங்களையும் விடாமல் வைத்துக்கொண்டாள். இந்த சிவசக்தி ஐக்கியமே இதன் முக்கிய தத்துவம்.

செளந்தர்ய லஹரி விளக்கங்கள்: தெய்வத்தின் குரல், செளந்தர்ய லஹரி பாஷ்யம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம்.

தேவி மஹாத்மியம் விளக்கம்: தேவி மஹாத்மியம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம், மற்றும் பண்டிட் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் நவராத்திரிச் சொற்பொழிவுகள்.

அபிராமி அந்தாதி: உதவி தினமலர், சொந்தமாய்க் கொஞ்சம். போன வருஷம் கி.வா.ஜ. உரையைப் போட்டாச்சு. அதான் எல்லாரையும் கொஞ்சம் சோதனை பண்ணச் சொந்த முயற்சி.

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம் 6

ஆசைகள் அதிகம் ஆனால் அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகம். புத்தி மந்தமாக மாறும். ஒருவரை ஒருவர் சந்தேகம் கொள்வார்கள். சிலருக்குத் தன் மேலேயே சந்தேகம் வரும். தன்னம்பிக்கை இருக்காது. மந்தமான புத்தி இருப்பதைத் தான் மஹிஷத்திற்கு உதாரணமாகக் காட்டுவார்கள். அந்த மந்தமான மஹிஷத்தை அன்னை அழிப்பதே மந்த புத்தியை அடியோடு ஒழித்து சுறுசுறுப்பும், ஆற்றலும் மிகுந்த சக்தியை வரவழைத்துக்கொள்வதாகும். உண்மையில் இந்தப்போராட்டங்கள் நமக்குத் தினம் தினம் நம்முள்ளே நடந்து கொண்டே இருக்கிறது. இந்த அசுரர்கள் எல்லாம் நமக்குள்ளேயே இருக்கின்றனர். சந்தேக புத்தியை சும்பனுக்கும், நிசும்பனுக்கும் உதாரணம் காட்டலாம். இரண்டு பேரும் எல்லாவற்றிற்கும், எல்லாரையும், எப்போதும் சந்தேகம் கொள்வார்கள். அதனால் புத்தி மஹிஷத்தைப் போல் மந்தமாகிவிடுகிறது. ஆற்றல் குறைகிறது. அதுவும் பரபரப்பான வாழ்க்கை நடத்தும் இன்றைய சூழலில் இது மிகவும் சகஜமான ஒன்று. நம்முள்ளே போராடித் தான் நாம் மீண்டு வரவேண்டும். அதைத் தான் இழந்த சக்தியை மீட்டெடுப்பது என்கிறோம். அந்த சக்திதான் அன்னை வடிவில் நாம் வணங்கும் தாயாக உருவகம் செய்யப் படுகிறது.

அந்த சக்தி தான் அநங்கன் எனப்படும் மன்மதனையும் வீறு கொண்டெழுந்து ரிஷி, முனிவர்களைக் கூட விடாமல் ஜயிக்க வைக்கிறது. சென்ற பதிவிலேயே பார்த்தோம். அநங்கன் உயிர் பிழைத்ததும் உயிரினங்கள் எல்லாம் காம வயப்படுவதும் சிருஷ்டிக்குத் தேவை எனப்பார்த்தோம். இங்கே அடுத்து வரும் ஸ்லோகமும் அதையே சொல்லும்.

धनु: पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखा:
वसन्त: सामन्तो मल्यमरु -दायोधन -रथ:
तथाप्येक: सर्वं हिमगिरिसुते कामपि कृपां
अपान्गात्ते लब्ध्वा जगदिद -मनङ्गो विजयते

த₄னு: பௌ₁ஷ்ப₁ம்ʼ மௌர்வீ மது₄க₁ரமயீ ப₁ஞ்ச₁ விஶிகா₂:
வஸந்த₁: ஸாமந்தோ₁ மலயமரு -தா₃யோத₄ன -ரத₂:
த₁தா₂ப்₁யேக₁: ஸர்வம்ʼ ஹிமகி₃ரிஸுதே₁ கா₁மபி₁ க்₁ருʼபா₁ம்ʼ
அபா₁ங்கா₃த்₁தே₁ லப்₃த்₄வா ஜ₁க₃தி₃த₃ -மனங்கோ₃ விஜ₁யதே₁


மாயன் வணங்கி உன் மால் வடிவங்கொள
வாடும் அரன் துயர் போதாதோ
தூய மதன் தொழ ஆண்வடிவம் புணர்
தோகை கண் வண்டயில் தேனே போல்
மேய வழங்கும் உரூபமது என்சொல
மேலிது கண்டவர் வாழ்வாரோ
நீ அத-ரஞ்சகி மோகன வஞ்சகி
நீ செய்வது ஒன்றல மாதாவே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

மன்மதனும் போர் தொடுக்கிறான். அனைவர் மேலும் இந்தப் போர் தொடுக்கிறான். ஆனால் அவன் ஆயுதங்களோ, கத்தி, வில், அம்பு, சூலம், வாள் போன்ற எதுவும் இல்லை. தநு: பெளஷ்பம்= புஷ்பத்தால் ஆன வில். சாதாரணமாகக் கரும்பு வில்லைத் தான் மன்மதன் வைத்திருப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கோம். அந்தக்கரும்பு வில்லைத் தான் காமாட்சியும் வைத்துக்கொண்டு காமங்களை ஆட்சி செய்து வருகிறாள். இங்கே ஆசாரியர் மலர்களால் ஆன வில்லை மன்மதனின் ஆயுதமாய்க் குறிப்பிட்டிருக்கிறார். பாணங்களொ எனில் தாமரை, அசோகமலர், மாம்பூக்கள், நவமல்லிகை, நீலோத்பலம். எல்லாமே வாசனைப்பூக்கள். மனதை மயக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு புலனைக் கட்டி இழுக்கும் திறமை கொண்டவை. அப்போது தானே காமவசப்படுத்த முடியும். இப்படி அனைவரையும் கட்டி இழுக்கும் ஆசையைத் தூண்டுமாறு மன்மதனுக்கு இத்தகையதொரு அதிகாரத்தைக் கொடுத்ததே அம்பிகை தான். அவளாலேயே அவன் உயிர் பெற்று எழுந்ததோடு அல்லாமல் அவள் ஆணைப்படியே சிருஷ்டிக்குத் துணையும் செய்து வருகிறான். கண்களுக்குத் தெரியாமலேயே வலிமையற்ற ஆயுதங்கள் துணையுடன் அவன் செய்யும் போரில் அவனே ஜெயிக்கவும் செய்கிறான். இது அவனுக்கு அம்பிகையின் கடாக்ஷத்தாலேயே ஏற்பட்டதாகும். இப்படி ஸ்ருஷ்டிக்கு அனுகிரஹம் பண்ணி அனைவரையும் ஜெயிக்கும் மன்மதனை நாம் ஜெயிக்க வேண்டும். ஈசனால் எரிக்கப்பட்டவன் அம்பிகையின் அருளினால் அநங்கனாய்த் தன் காரியத்தை அம்பாளிடமும், ஈசனிடமும் நிறைவேற்றிக்கொண்டான். அப்படி மன்மதன் அநங்கனாக மாறி அம்பிகையும் ஈசனும் திருக்கல்யாணம் செய்து கொண்டதைத் தான் காமாக்ஷி புராணம் என்றும் கூறுகின்றனர். இத்தனை பெரியதொரு நிகழ்வை நிகழ்த்திய அநங்கன் முன்போலிருந்தான் எனில் நான் என்ற ஆணவம் ஏற்பட்டிருக்கும். அன்னையை வணங்கி அவள் அருள் பெற்ற காரணத்தால் மன்மதனுக்கு இப்போது தான், தன்னால் தான் எல்லாரையும் வீழ்த்த முடியும் என்ற அஹங்காரம், தான் என்ற உணர்வு அற்றுப் போய் விட்டது. இது அம்பிகையின் அருளே என்பதைப் புரிந்து கொண்டான். தன்னால் எதுவும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

மேற்கண்ட பொருளுக்கேற்ற பாடல் கிடைக்கவில்லை என்றாலும் இதிலே அம்பிகையின் பஞ்ச பாணங்கள் குறித்துப் பாடியுள்ளார் பட்டர். பஞ்சபாணி என அம்பிகையைக் கூப்பிடுகிறார். மன்மதனுக்கு அடுத்து அம்பிகையிடமே பஞ்ச பாணங்களும், கரும்பு வில்லும் உள்ளது. அத்தகைய பஞ்சபாணியான அம்பிகை ஈசனை ஜெயித்து அவன் உடலில் இடப்பாகத்தையும் பெற்றுக் கொண்டாள் எனில் அவள் சக்தியை என்னவென்று சொல்ல முடியும். இவ்விதம் ஈசனை வென்றாலும் தேவி அவனுள் ஐக்கியமாகி சிவசக்தியாக ஆனதன் மூலம் கணவன், மனைவி இருவரின் ஒற்றுமையையும் வலியுறுத்துகிறாள். இங்கே சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற கேள்வியே இல்லை. இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்தது. அசையாமல் இருந்த சிவத்தைத் தன் சக்தியின் மூலம் அசைத்து சிருஷ்டி தத்துவத்தையும், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தையும் ஏற்படுத்துகிறாள் தேவி. இது ஒரு சக்கரம். சுழன்று கொண்டே இருக்கும். அதனாலேயே நமக்குப் பிறப்பும், இறப்பும் அதன் விளைவான கர்ம பலன்களும் ஏற்படுகின்றன.


இங்கே அனைவரும் தேவியின் பார்வைகளுக்கு முன்னர் சமம் என்றாலும் பெளதிக உலகில் ஒவ்வொருவரின் கர்ம பலனுக்கேற்றவாறே நற்பலன்கள் கிட்டும். அதனாலேயே ஏற்றத் தாழ்வுகள். சுற்றுச் சூழலின் சமநிலைக்கு எவ்வாறு காடுகள், மலைகள், நதிகள், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் இருப்பு முக்கியமானதாக இருக்கிறதோ அவ்வாறே பிரபஞ்சத்தின் சமநிலைக்கு இந்த ஏற்றத் தாழ்வுகள் காரணமாக உள்ளது. அனைவரையும் சமமாக வைக்காத கடவுள் எனக்குத் தேவையே இல்லை எனச் சிலர் நினைக்கலாம். இந்த ஏற்றத் தாழ்வுகள் நாம் கொண்டு வந்ததே எனப் புரிந்து கொண்டோமானால் கடவுளிடம் கோபம் வராது. அதற்குத் தான் பக்தி செய்யுமாறு கூறுகின்றனர். முதலில் சாதாரணமான பக்தியில் ஆரம்பித்தால் நாளடைவில் ஆன்ம முன்னேற்றத்தை நாடிச் செல்ல வழி வகுக்கும். தேவியின் வழிபாடும், அவள் பாதார விந்தங்களே சரணம் எனவும் இறுகப் பற்றிக்கொண்டவர்களுக்கு வேறு உபாயமே தேவை இல்லை.

தேவியின் கருணாபாத்திரமானவன் எந்தவிதமான வலிவான சாதனங்களின் உதவியின்றியும் இவ்வுலகை வென்றவன் ஆவான். இதற்கு உதாரணமாக நெஞ்சில் தீமையைத் தவிர வேறொன்றை நினையாமல் தேவாதி தேவர்களுக்குக் கொடுமைகள் புரிந்த அசுரர்களைக் கொன்று அழிக்கும் வல்லமையுடைய ஈசனையே வென்று அவன் உடலின் இடப்பாகத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டாயே அம்மா! அத்தகைய சக்தி படைத்த நீ எனக்கும் கருணை காட்டு என்கிறார் பட்டர்.


செளந்தர்ய லஹரி விளக்கங்கள்: தெய்வத்தின் குரல், செளந்தர்ய லஹரி பாஷ்யம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம்.

தேவி மஹாத்மியம் விளக்கம்: தேவி மஹாத்மியம், உரையாசிரியர் அண்ணா, ராமகிருஷ்ணா மடம், மற்றும் பண்டிட் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் நவராத்திரிச் சொற்பொழிவுகள்.

அபிராமி அந்தாதி: உதவி தினமலர், சொந்தமாய்க் கொஞ்சம். போன வருஷம் கி.வா.ஜ. உரையைப் போட்டாச்சு. அதான் எல்லாரையும் கொஞ்சம் சோதனை பண்ணச் சொந்த முயற்சி.

நாளைக்கு வரும். இதைப் போடாமலேயே தினம் எழுதறேன். அதான் இன்னிக்குப் போட்டேன்.

செளந்தர்ய லஹரி எளிய விளக்கம் 5

தேவி மஹாத்மியத்தில் "ரக்தபிந்துர்-யதா பூமெள பதத்யஸ்ய சரீரத:" என்று வரும். ரக்தபீஜன் என்னும் அரக்கனைக் குறித்தது இது. அவனுடைய சரீரத்தில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் அவனைப்போன்றே இன்னொரு அசுரன் தோன்றுவான். ரத்தம் தான் ரக்தம் எனவும், பீஜன் என்றால்= இங்கே பீஜம்=விதை என்ற பொருளிலும் வரும். அசுரன் தன் ரத்தத்தில் இருந்து விதையை விதைத்து இன்னொரு அசுரனை உண்டாக்குகிறான். இது எப்படி எனில் நம்முடைய ஜீன் என்றும் கூறலாம். நாம் நம்முடைய மூதாதையரின் ஜீன்களைக்கொண்டிருப்பதால் ஏதோ ஒருவிதத்தில் அவர்களின் நிறம், சுபாவம், கோபம், தாபம், விருப்பு, வெறுப்பு நம்மையும் தொடர்ந்து வந்திருக்கும். ஒரு சமயம் போல் ஒரு சமயம் இருக்க மாட்டோம். நம்முடைய சுயக் கட்டுப்பாட்டை இதுவே நிர்ணயிக்கிறது என்றும் சொல்லலாம். ஆகவே தான் சிறு வயது முதலே நம் மனதைத் திசை திருப்பி பக்தி மார்க்கத்தில்கொண்டு சென்றால் நாளடைவில்நம்மிடம் மாபெரும் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். மனம் அமைதி அடையும். ஆகவே மற்ற நாட்கள் வழிபடவில்லை எனினும் இந்தப்பத்து நாட்களாவது அம்பிகையின் நினைவோடு இருந்து நம் எண்ணங்களைப் புதுப்பித்துக்கொள்வதன் மூலம் அவள் கருணையைப் பெறுவோம்.

அம்பிகையை ஆராதித்து அவளின் கடைக்கண்களின் கருணா கடாக்ஷத்தால் நமக்கு வேண்டும், வேண்டாம் என்ற நிலையே இல்லாமல் ஆகி பற்றற்ற நிலையை அடைவது குறித்துச் சென்ற பதிவில் பார்த்தோம். இங்கே அம்பிகையை உபாசித்தவர்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அம்பிகையை ஆராதித்தவர்களில் முக்கிய இடம் பெறுகின்றவர்கள் பனிரண்டு பேர். அவர்கள் மகேசுவரர், மாதவர், பிரம்மா, மன்மதன், சந்திரன், குபேரன், அகஸ்தியர், துர்வாஸர் ஆகியோர் ஆவார்கள். இவர்களில் மஹாவிஷ்ணுவும் ஹயக்ரீவ அவதாரத்தில் அம்பிகையை ஆராதித்ததாய்ச் சொல்லப் படுவது உண்டு. இங்கே சொல்லப்போவதும் விஷ்ணு எடுத்த மோகினி அவதாரம் குறித்தே. அம்பிகையை ஆராதித்த விஷ்ணு தானே மனதை மயக்கும் பெண் வடிவு கொண்டு ஈசனின் மனமும் சலிக்கும்படிச் செய்தார் எனவும் அப்போது சாஸ்தா பிறந்தார் எனவும் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதே போல் மன்மதனும் அம்பிகையை ஆராதித்ததால் சூக்ஷ்மமான உருவை அடைகின்றான்.

தாக்ஷாயணி அக்னிப்ரவேசம் செய்த பின்னர் யோகத்தில் ஆழ்ந்த ஈசனை எழுப்பவில்லை எனில் உலகில் சிருஷ்டித் தத்துவமே நிறைவேறாது எனக் கவலைப்பட்ட தேவாதிதேவர்கள் பிரம்மாவை நாட, அவரும், விஷ்ணுவும் மன்மதனை ஏவ, மன்மதனும் தன் மலர்க்கணைகளை ஈசன் மேல் தொடுக்கக் கண் திறந்த ஈசனின் கோபாக்னியில் மன்மதன் எரிந்து சாம்பலாகிறான். இதையே லலிதா சஹஸ்ரநாமத்தின் மந்த்ர ரூப நாமாவளியில் ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்சீவநெளஷதி: என்று கூறுகிறது. ஈசன் காமனை எரித்த பின்னர் ரதிதேவியின் துக்கத்தைப் பார்த்த அன்னை மனம் கசிந்து காமனை உயிர்ப்பிக்கிறாள். அதுவும் எப்படி எனில் மற்றவர் கண்களுக்குப்புலனாகாமல் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படி தோன்றுகிறான் மன்மதன். சூக்ஷ்மமான சரீரத்தைப் பெறுகிறான். உடலே இல்லாமல், தேவியின் கருணைக்குப் பாத்திரமாகி உயிர் பெற்று சூக்ஷ்மமாக சஞ்சரிக்கும் மன்மதன் எவ்வாறு இவ்வுலகத்து அனைத்து உயிரினங்களையும் வேற்றார் உதவியில்லாமல் தன்னந்தனியாக ஜயிக்கிறானோ அவ்வாறே தேவியின் அருள் பெற்றவர்கள் அனைவரையும் மனம் கவரும் சக்தி படைத்தவர்களாய் இருப்பதோடல்லாமல், உலகையே வென்றவர்களும் ஆவார்கள்.



ஐந்தாவது ஸ்லோகம் இதைத் தான் விளக்குகிறது.

हरिस्त्वामाराध्य प्राणात -जन -सौभाग्य -जननीं
पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभ -मन्यत
स्मरोsपी त्वां नत्वा रातिनयन-लेह्येन वपुषा
मुनीनामप्यन्त: प्रभवति हि मोहाय महतां

ஹரிஸ்த்₁வாமாராத்₄ய ப்₁ராணாத₁ -ஜ₁ன -ஸௌபா₄க்₃ய -ஜ₁னனீம்ʼ
பு₁ரா நாரீ பூ₄த்₁வா பு₁ரரிபு₁மபி₁ க்₁ஷோப₄ -மன்யத₁
ஸ்மரோsபீ₁ த்₁வாம்ʼ நத்₁வா ராதி₁னயன-லேஹ்யேன வபு₁ஷா
முனீனாமப்₁யந்த₁: ப்₁ரப₄வதி₁ ஹி மோஹாய மஹதா₁ம்ʼ

தொடு-கரச்-சிலை தொடப்-பொறா மலர்
கருப்பு நாண் இடுவது ஐந்து கோல்
அடுபடைஆத்தலைவனார் வந்தமலை
தென்றல் தேர் உருவ மருவமா
முடுகு கொற்ற மதன் ஒருவன் இப்புவனம்
முற்றும் வெற்றி கொள் முடிவிலா
நெடு-மலர்க்-கண் அருள் சிறிது அளித்தநனையோ
நணலியே கர-கபாலியே.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

இங்கே ஒரு விசித்திரம் என்னவெனில் காமத்தை வெல்ல வேண்டும்; காமம் இருக்கக் கூடாது; என்பதே நாம் பக்தி வழியில் இருந்து ஆன்மீக முன்னேற்றம் காணும் படியாகும். இங்கே காமம் எனக் குறிப்பிடுவது சிற்றின்பமான பாலுறவை மட்டுமே. அதைத் தான் முக்கியமாகவெல்ல வேண்டும் என்போம். அதை வென்றால் மற்ற ஆசைகளும் தானாகவே அற்றுப் போம். காமம் என்பது பொதுவாக ஆசைகளை அனைத்துவித ஆசைகளையும் குறிப்பிடும் சொல்லாகும். அதற்கே அம்பிகையின் வழிபாடுகளின் மூலம், அவள் அங்க வர்ணனைகள் மூலம் அந்தக் காமனை வெல்லலாம் என்பதே குறிக்கோள். ஆனால் பாருங்கள்! விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து ஈசனையே மயக்குவதோடு அல்லாமல், ஒரு குழந்தை வேறு பிறக்கிறது. காமத்தை ஏற்படுத்தியதற்காக மன்மதனை எரிக்கிறார் ஈசன். அவரே பின்னர் காமவசப் படுகிறார். இது சரியா? எல்லாருக்கும் இந்தக்கேள்வி எழும் இல்லையா! அது போக ஈசனால் எரிக்கப்பட்ட மன்மதனோ எனில், அனைவரையும் எவர் உதவியுமின்றித் தன் மலர் பாணங்களால் ஜெயிக்கிறான். தேவாதி தேவர்களுமே காமவசப்படுகின்றனர்.

ப்ரபஞ்சம் வளர்வதற்குக் காமம் தேவை; ஆனால் அதுவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளாக இருத்தல் வேண்டும். அசுர சக்தியோடு போராடினால் தான் நல்ல சக்தி ஜெயிக்கும் என்பதைப் புரிந்து கொள்கிறோம் இல்லையா? ஆகவே காமம் என்பது இருந்தாலே அதை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். சிருஷ்டி தத்துவம் தடைபெறாமல் நடைபெறவேண்டியே தேவைக்கே காமம் என்பதை உணர வேண்டும். எல்லாமும் சரியாக நடந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையின் ருசியும் குறைந்தே காணப்படும் அல்லவா? எப்படிக் குந்தியானவள் கண்ணனிடம் , "அப்பா, கண்ணா, எனக்குக் கஷ்டத்தை நிறையக் கொடு; கொடுத்துக்கொண்டே இரு. அப்போது தான் நான் உன்னை மறக்காமல் இருப்பேன்." என்று சொன்னாளோ அதே போல் நமக்கும் கஷ்டம், நஷ்டம், காமம், க்ரோதம் போன்றவற்றால் பிரச்னைகள் ஏற்பட்டாலே பகவான் நினைப்பே நமக்கு வருகிறது. ஆகவே தான் இவை எல்லாமும் அவரவர் கர்மவினைக்கு ஏற்பக் கூடவோ, குறைச்சலாகவோ ஒரு சிலருக்கு எதுவும் இல்லாமலோ கிடைக்கிறது. எதுவும் இல்லை எனில் அவருக்குக் கர்ம மூட்டை இல்லை; பிறவி இல்லை; நேரடியாக மோக்ஷம் தான். ஆனால் அதை அனுபவத்தாலேயே உணர முடியும். ஒருவருக்கு இந்தப்பிறவியில் பணக் கஷ்டம் இல்லை என்றாலோ, அல்லது பதவி, அதிகாரங்களில் உச்சத்தில் இருந்தாலோ அவர்களுக்குக் கர்ம மூட்டைகள் சுமக்க இல்லை என அர்த்தம் இல்லை. அவர்கள் முந்தைய பிறவியின் நல்ல கர்மாக்களின் பலன்களை அனுபவிக்கின்றனர். கெட்ட கர்மாக்களின் பலனும் கட்டாயம் ஏற்பட்டே தீரும்.

இனி பட்டர் சொல்வதைப் பார்ப்போமா!


அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

பட்டர் அன்னையின் இந்த அதிசயமான வடிவை வியந்து போற்றுகிறார். அதிசயமான அழகுடைய அன்னை; அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை; குளத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களெல்லாம் அவளைக் கண்டு அவள் முகம் சூரியனோ என எண்ணித் துதிக்கின்றது. அந்தத் தாமரைக்கொடி மெல்லியதா; அன்னையின் உடல் மெல்லியதா என்னும் வண்ணம் மெல்லிய கொடியைப் போன்ற சுந்தரமான அழகுடையவள், ரதி துணைக்கு வர, ஈசன் மேல் காமன் தொடுத்த அம்பைக்கண்டு கோபம் கொண்ட ஈசன் அந்தக் காமனின் முயற்சிகள் தோல்வியே அடையும் என எண்ணிக்கொண்டு தன் நெற்றிக்கண்ணைத் திறந்து பார்த்து அவனைச் சுட்டெரித்தார்; ஆனால் அம்மையே! உன் அழகோ அவரையும் வெற்றி கொண்டுவிட்டதே! அவ்வளவு தானா! நீ வெற்றி கொண்ட உன் அருமைத் துணைவன் உடலிலும் இடப்பாகம் இடம் கொண்டுவிட்டாயே! மன்மதனை வெற்றி கொண்டோம் என ஈசன் நினைத்த அதே வேளையில் அந்த வெற்றியையும் தோல்வியாகச் செய்த உன் அழகை எங்கனம் வர்ணிக்க முடியும்!

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம்! 4

அம்பிகையின் பாத கமலங்களின் சக்தி எப்படிப்பட்டதெனில், மற்ற தெய்வங்கள் எல்லாம் தங்கள் திருவடிகளைச் சுட்டிக்காட்டி அபய வரத முத்திரை காட்டுகையில் அம்பிகையோ அதெல்லாம் இல்லாமலேயே தன்னிரு பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டவர்களை ஒரு நாளும் கைவிடுவதே இல்லை. நேரே தன்னில் அவர்களை ஐக்கியப்படுத்தி மோக்ஷத்தை அளிக்கிறாள். இந்த உலகம், ஈரேழு பதினாலு லோகங்கள் மற்றும் மற்ற தெய்வங்களின் சக்திகள் போன்ற எல்லா சக்தியும் அம்பிகையிடமிருந்தே வந்திருக்கையில் அவளுக்கெனத் தனியாக அபய வர ஹஸ்தங்கள் எதுக்கு என்கிறார் ஆசாரியார். அம்பிகையின் வெவ்வேறு வடிவங்களே மற்ற தெய்வங்கள் எல்லாம் என்றாலும், இங்கே அனைத்தும் அடங்கிய லலிதா திரிபுர சுந்தரியாக அம்பிகையைக் காண்கிறார் ஆசாரியார். அத்தகைய லலிதா திரிபுர சுந்தரி இவ்வுலகத்து மாந்தரெல்லாம் அடைக்கலம் புகும் புகலிடமாகவும் இருக்கிறாள். அவள் என்னைச் சரணடையுங்கள்; நான் உங்களை ரக்ஷிப்பேன்; என்றெல்லாம் அபயவர ஹஸ்தம் காட்டவேண்டும் என்பதே இல்லை. அவளை மனதில் தியானித்தாலே போதும். தன்னோடு சேர்த்துக் கொண்டு கேட்டதை வாரி வாரி வழங்குகிறாள்.

த₁வத₃ன்ய: பா₁ணிப்₄யா -மப₄யவரதோ₃ தை₃வத₃க₃ணா:
த்₁வமேகா₁ நைவாஸி ப்₁ரக₁டி₁த₁ -வராபி₄த்₁யபி₄னயா
ப₄யாத₁ த்₁ராது₁ம்ʼ தா₃து₁ம்ʼ ப₂லமபி₁ ச₁ வாஞ்சா₂ஸமதி₄க₁ம்ʼ
ஶரண்யே லோகா₁னாம்ʼ த₁வ ஹி சா₁ரணாவேவ நிபு₁ணௌ


तवदन्य: पाणिभ्या -मभयवरदो दैवदगणा:
त्वमेका नैवासि प्रकटित -वराभित्यभिनया
भयात त्रातुं दातुं फलमपि च वांछासमधिकं
शरण्ये लोकानां तव हि चारणावेव निपुणौ

தேவெனப் புகழ அதில் நிமிர்ந்து நிகர்
செப்புவார் அபய வரதமாம்
பாவகத்து அபினயத்தோடு உற்ற கை
பரப்பி என் பயம் ஒறுக்குமே
யாவருக்கும் அஃதரிது நின் பதம்
இரப்ப யாவையும் அளிக்கு மான்
மூவருக்கும் ஒரு தாவரப் பொருள் என்
மூலமே தழையு ஞாலமே.

கவிராஜப் பண்டிதரின் தமிழாக்கம்

ஸம்சார பயத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அபய முத்திரையைக் காட்டும் பிற தெய்வங்களைப் போலன்றித் தன் காலடியில் வந்து வணங்கினாலே மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவள் அம்பிகை. நாம் கேட்பதற்கும் அதிகமாகப் பலனைத் தருவாள். லலிதா திரிபுரசுந்தரிக்குக் கரங்களில் பாசாங்குசங்கள், புஷ்பபாணங்கள், கரும்பு வில் போன்றவற்றோடு காட்சி அளிப்பதால் அம்பாளுடைய கைகளால் தன்னைச் சரணடை என இடக்கை பாதங்களைச் சுட்டாமலும், வலக்கை மேல்நோக்கிக்காட்டாமலும் அவளுடைய பாதங்களே சரணம் செய்யத் தக்கவை என்பது இங்கே சூசகமாய்ச் சொல்லப் படுகிறது. பொதுவாகவே பெரியவர்களை நமஸ்கரிப்பது வழக்கம். யார் வீட்டிற்கானும் போனாலும் அங்கே வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் நமஸ்கரித்து ஆசிகளை வாங்கிக்கொள்வோம். இப்போதெல்லாம் இந்த வழக்கம் இல்லை எனினும் இன்னமும் சிலர் கடைப்பிடித்து வருகின்றனர். வீட்டுப் பெரியவர்களை வணங்கினாலே ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கிறது. கீழே விழுந்து வணங்குவதன் மூலம், நாம் அனைத்திலும் சிறியோன் என்ற எண்ணம் தோன்றி விநயம் பிறக்கும். வீட்டின் பெரியவர்களை விழுந்து வணங்கிப் பழகினோமானால் நாளாவட்டத்தில் அம்பிகையின் பாதங்களைப் பூரணமாய்ப் பற்றிக்கொள்ளலாம். நாம், நம்முடைய, என்ற நமது ஆணவம் விலகவேண்டுமானால் பரிபூரண சரணாகதி தான் சிறந்தது.

ஆனால் அம்பிகையோ மூத்தோர்களுக்கெல்லாம் மூத்தவள்! அபிராமி பட்டரும் கூட அம்பிகையை "மூத்தவளே" என ஒரு பாடலில் அழைக்கிறார். ஆதிமூலமான பராசக்தியை அனைத்தையும் இயக்கும் சக்தியை வணங்கினால் கிடைக்கும் பெறர்கரிய பேற்றைப் பற்றி எண்ணுகையிலேயே, அவள் நாமத்தைச் சொல்கையிலேயே மனம் ஆனந்த சாகரத்தில் மூழ்குகிறது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையையே லலிதா திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம். அப்போதாவது நம் ஆணவத்தை எல்லாம் விட்டு விட்டு அம்மா, தாயே, நீயே சரணம், உன் பாதாரவிந்தங்களில் நமஸ்கரிக்கிறேன்; என்னை ஏற்றுக்கொண்டு நான் நல்வழிக்குத் திரும்பச்செய்வாய்! உன்னை என்றும் மறவாமல் இருக்கும்படி பண்ணுவாய்! என்று நம்மை மறந்து தேவியின் பாதங்களையே நினைத்துக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும்.

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

இதையே அபிராமி பட்டர் கூறுகையில் சிந்தூரத்தை ஒத்த செந்நிறப்பெண்ணே! அம்பிகையை உதிக்கின்ற செங்கதிருக்கும் ஒப்பிட்டிருக்கிறார் பட்டர். இங்கேயோ சிந்தூரத்தைக் கூறுகிறார். அவ்வளவு செக்கச் சிவந்த மேனியை உடைய பெண்ணரசியே, நான் என்றும் வணங்கி தாள் பணிவது உன் பொன்னிறத் திருவடித் தாமரையில் தானே! தாமரை மலர்களை ஒத்த அந்தத் திருவடியில் விழுந்து வணங்குவதோடு அந்தத் திருவடியைத் தம் சிரசின் மேலும் தாங்குகிறார் பட்டர். அம்பிகையின் திருவடியைத் தம் சிரசின் மேல் தாங்கிக்கொண்டு, தன் மனதினுள்ளே அம்பிகையின் திருமந்திரமான சக்திப் பிரணவத்தை நினைத்த வண்ணம் துதிக்கிறார். அம்பிகையும் தானும் ஒன்றாகி தானே அம்பிகை என்னும் வண்ணம் இரண்டறக் கலந்து விடுகிறார் பட்டர். இவ்வளவும் போதாது என்று, அம்பிகையைத் துதிப்பதே தங்கள் வாழ்நாளின் பெரிய கடமை, பெரும்பேறு என எண்ணும் அடியார் கூட்டத்தோடும் சேர்ந்து அவர்கள் அம்பிகை குறித்த நூல்களைப் பாராயணம் செய்து வாழ்த்திப் பாடுகையில் தாமும் சேர்ந்து கொண்டு அம்பிகையை வாழ்த்திப் பாடுகிறார். இப்படிச் சொல், செயல், நினைவு என எல்லாமும் அம்பிகையாகவே இருக்கத் தான் செய்த புண்ணியம் தான் என்ன என வியந்து மகிழ்கிறார் பட்டர். அவரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அமாவாசை அன்று தாம் பெளர்ணமி என அம்பிகையின் முகதரிசனத்தைக் குறித்துச் சொன்னதை மன்னன் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தும், மன்னன் கட்டளை இட்டுவிட்டான். பெளர்ணமி பூரணச் சந்திரனைக் காட்டு என! என்ன செய்ய முடியும் அவரால்! அம்பிகையைச் சரணடைந்தார். உன் பக்தன் ஆன நான் சொல்வதும் பொய்யாகுமா அம்மா! என நம்பிக்கையோடு பாடுகிறார். அம்பிகையைப் பூரண நிலவை வரச் செய்தாகவேண்டிய கட்டாயமான சூழ்நிலை; அந்தக் கடுமையான நிலையிலும் கூட அவருக்கு அம்பிகையின் மேன்மையையும், அவள் கருணையையும், அவள் பாதார விந்தங்களின் பெருமையையும் மறக்க முடியாமல் அவற்றைக் குறித்துப்புகழ்ந்தே சொல்லுகிறார் எனில் என்றோ ஓர் நாள், ஒரு நிமிடம் நின்றுகொண்டு நாம் சொல்லுவதற்கே இவ்வளவு செய்கிறாளே அம்பிகை அதை என்னவென்று சொல்வது!

Wednesday, January 18, 2012

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம்! 3

அம்பிகையின் பாதாரவிந்தங்களைச் சரணடைவது குறித்துப்பார்த்தோம். அவள் பாத தூளியால் சிருஷ்டிகளும், வையத்தைக் காப்பதும் , அழிப்பதும் என அனைத்துத் தொழில்களும் சிறப்பாக நடைபெற்று வருவதையும் பார்த்தோம். அந்தப் பாததூளி எத்தகைய மஹிமை வாய்ந்தது எனில் அனைவருக்கும் முக்தியைக் கொடுக்க வல்லது. நம் மனத்தின் இருளைப் போக்கி நம்பிக்கையாகிய சூரியனைப் பிரகாசிக்கச் செய்யும் வல்லமை கொண்டது.

அவித்⁴யானா-மந்த ஸ்திமிர -மிஹிர த்³வீபனக³ரி
ஜடா³னாம்ʼ சைதன்ய -ஸ்தப³க -மகரந்த³ ஸ்ருதிஜ²ரி
த³ரித்³ராணாம்ʼ சிந்தாமணிகு³ணனிகா ஜன்மஜலதௌ⁴
நிமக்³னானாம்ʼ த³ம்ʼஷ்ட்ரா முரரிபு -வராஹஸ்ய ப⁴வதி



अविध्याना-मन्त स्तिमिर -मिहिर द्वीपनगरि
जडानां चैतन्य -स्तबक -मकरन्द स्रुतिझरि
दरिद्राणां चिन्तामणिगुणनिका जन्मजलधौ
निमग्नानां दंष्ट्रा मुररिपु -वराहस्य भवति


அறிவிலர்க்ககு இதய திமிரம் மீரும்
அளவற்ற ஆதவர் அளப்பிலா
எறி-கதி-ப்ரபை குழைத்து இழைத்தனைய
தீ இயாமளை நினைப்பிலார்
செறி மதிக்-கிணரின் ஒழுகு தேன் அருவி
தெறுகலிக்கு அருள் மணிக்குழாம்
பிறவி மைக்கடல் விழாது எடுப்பது ஒரு
பெருவராக-வெண் மருப்பு அரோ.

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

அவித்யா என்பது அக்ஞானம் எனப்படும் மூடத்தனம், மடமை என்றும் சொல்லலாம். நம்முள்ளே நாம் தான் அனைத்தும் செய்கிறோம் என்றதொரு எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது. இந்த “நான்” என்பது நம்முள்ளே உறைந்து எப்போதும் கோயில் கொண்டிருக்கும் ஜோதிரூபமான ஆன்மாவை நம்மால் உணரமுடியாதபடிக்குச் செய்துவிடுகிறது. மனமென்னும் காட்டிலே நினைவுகளென்னும் விருக்ஷங்கள், எண்ணற்றவை முளைத்துப் படர்ந்து மனம் முழுதையும் இருட்டாக்கி ஞான சூரியனின் கிரணங்கள் சிறிதளவு கூட உள்ளே வராமல் செய்து இருட்டாக்கி விடுகிறது. அந்தக் காட்டின் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, ஒரு சின்ன அகலை ஏற்றுவது போல் அம்பாளின் பாத கமலங்களை இறுகப் பற்ற வேண்டும் என்றொரு எண்ணமாகிய அகலை ஏற்றிக்கொண்டு இருந்தால், நாளடைவில் அந்த அகலின் வெளிச்சம் கோடி சூரியப் பிரகாசமாகி நமக்கு ஜோதிமயமான ஆன்மாவுடன் ஒன்றிப் போகச் செய்யும். இந்த அக்ஞானம் சாமானிய மனிதருக்கு மட்டுமல்லாமல், புத்திமான்கள், வித்தை தெரிந்த அதிமேதாவிகள், கெட்டிக்காரர்கள் என அனைவரையுமே பீடித்திருக்கும். இவர்களைப் பீடித்திருக்கும் அக்ஞானம் அகந்தையாகும். இன்னும் சிலருக்கு என்ன சொன்னாலும் தெரியாது; தானாயும் தெரிந்து கொள்ள மாட்டார்கள்; சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்களை ஜடம் என்றே சொல்லலாம்.

அப்படிப்பட்டவர்களுக்கு புத்தியின் தேஜஸ் அதிகரிக்கவும் அம்பாளின் பாத தூளி பயன்படும். அடுத்தது தரித்திரம் பிடிப்பது; யாருக்குத் தான் செல்வம் சேர்க்க ஆசையில்லை. செல்வம் சேர்ப்பதில் அடங்கா ஆசையும் உண்டு; அதே சமயம் செல்வந்தர்களைக் கண்டாலே வெறுப்பவர்களும் உண்டு. ஆனாலும் நினைத்ததை நடத்தித் தரும் சிந்தாமணி என்னும் மணியானது தெய்வாம்சமுள்ள மணியானது கிடைத்தால் எப்படி இருக்கும்?? நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் தந்துவிடுமே சிந்தாமணி. அப்படிப் பட்ட சிந்தாமணி தரும் செல்வத்தை எல்லாம் அம்பிகையின் பாததூளி தந்துவிடும்.

கவனிக்க; இங்கே அனைத்துச் செல்வங்களும் கிடைத்துவிடும் என்று வருவதால் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் எனப் பொருள் கொள்வதை விட, இம்மாதிரி அம்பாளின் நாமத்தைப் பாடி அவள் பாததூளியைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டால், நமக்குச் சிந்தாமணியின் மூலம் கிடைக்கும் பெளதிக சம்பந்தமான சொத்துக்களை விட மேன்மையான பெரும் செல்வம் கிட்டும் என்பதே உள்ளார்ந்த பொருளாகும். இதைக் கடைசி வரி விளக்குகிறது. ஹிரண்யாக்ஷன் அபகரித்துக்கொண்ட பூமிதேவியை மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் செய்து தன் கோரைப்பற்களில் தூக்கிக்கொண்டு வருவார். பாதாளத்துள்ளே இருந்த பூமிதேவியை எவ்வாறு விஷ்ணு அவ்விதம் மேலே தூக்கி வந்து கொண்டுசேர்த்தாரோ அவ்வாறே அம்பிகையின் பாததூளியானது இந்த சம்சார சாகரத்தில அழுந்தி மூழ்கி, மூச்சுத் திணறும் நம்மையும் தன் கருணா சாகரத்தில் கொண்டு சேர்த்து நம்மை ஆனந்தக் கடலில் வாசம் செய்யும்படி செய்யும்.

தேவி மஹாத்மியத்தில் மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களை மஹாவிஷ்ணு வதம் செய்வார். இந்த இரு அரக்கர்களும் அடங்கா ஆசைக்கும், அடங்கா வெறுப்புக்கும் உதாரணமாவார்கள். இவற்றை வெல்வதையே மது, கைடபர்களின் அழிவு சுட்டுகிறது. நம் மனதில் உள்ள ஆசையையும், வெறுப்பையும் மற்ற எதிர்மறைச் சிந்தனைகளையும் அழித்து ஒழிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. நம்மை நாமே பூரணமாக அறிந்து கொண்டு, நம்மிடம் உள்ள “நான்” என்னும் சுயப் பெருமையை ஒழித்து நம்மை முழுதும் கடவுளின் பாதத்தில் ஐக்கியமடைய வைப்பதே நவராத்திரியின் முக்கியத் தத்துவம் ஆகும். நம்மில் பலரும் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம்; இன்று சந்தோஷமாக இருந்தால் நாளை எழுந்திருக்கும்போதே வருத்தம் தாங்காது. இன்னொரு நாள் கோபம், எரிச்சல் வரும். ஒரு நாளைப் போல் இன்னொரு நாள் இருக்கட்டும். ஏனென்றே சொல்லமுடியாத கோபமும் வரும். இதற்குக் காரணம் நம் முன்னோர்கள் ஒருபக்கம் எனில் இன்னொரு பக்கம் நம் முன் ஜென்மவினையும் ஆகும். இது குறித்து நாளை பார்ப்போமா!

மேற்கண்ட ஸ்லோகத்தின் பொருளிலேயே அபிராமி பட்டர் கூறி இருப்பது என்னவென்றால்,

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

ரிஷி, முனிவர்களால் உணர்ந்து அறியப்பட்டு ஓதப்படுவதான வேதத்தின் பொருளாக இருப்பவளே அம்பிகைதான் என்கிறார் பட்டர். அவள் வேதப் பொருள் மட்டுமல்லாமல் அதன் பொருள் உணர்ந்து ஓதுவோர்க்கு அருளுபவளும் ஆவாள். எல்லாம் வல்ல அந்த ஈசனையே இயக்கும் மாபெரும் சக்தியான அம்பிகையானவள் இமவானுக்கு நன்மை செய்யும்பொருட்டு அவன் மகளாகப்பிறந்தாள். அழியாத முத்தியைத் தன்னை வணங்குபவர்களுக்கு அளித்து வருகிறாள்; அத்தகைய அம்பிகையை நான் நின்று கொண்டிருந்தாலும், நடந்து கொண்டிருந்தாலும், அமர்ந்து கொண்டிருந்தாலும், கீழே கிடந்தாலும் எந்நேரமும் அவளையன்றி வேறொருவரை நினைப்பது என்னால் கூடுமோ! அவள் மலர்ச்சேவடியைத் தவிர வேறொன்றையும் நான் வணங்குவேனோ! அம்பிகையின் திருவடித்தாமரைக்கும், அவள் பாத தூளிகளுக்கும் மோக்ஷம் தரும் வல்லமை உள்ளது என்பதே இதன் உட்கருத்தாகும்.

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம்! 2

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என அனைத்துத் தொழில்களையும் புரிபவள் ஆதிபராசக்தியே என்றே கூறுவார்கள். சக்தியிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது. அவ்வளவு ஏன்! பரப்ரம்மம் ஆன சிவனும் அவள் செயலாலேயே தனது அசலத்தில் இருந்து அசைந்து கொடுத்து பிரபஞ்சத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பரிபூரணமாக இருக்கும் ப்ரம்மத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி அவளே. அத்தனை சக்தி வாய்ந்த பராசக்திக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்படும் விழாவாகிய இந்த நவராத்திரியில் அனைத்துப் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான பண்டிகைகளிலேயே மிகவும் விமரிசையாகப் பத்து நாட்கள் கொண்டாடப் படுவது இந்த சாரதா நவராத்திரியே. நவராத்திரி என்றால் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய இரவுகளை ஒரு பக்கம் சுட்டினாலும், மற்றொரு பக்கம் ஒன்பது இரவுகள் என்றும் பொருளைக் கொடுக்கும். எப்போதுமே உயிருள்ள ஜீவன்கள் அனைத்துக்குமே இரவில் அமைதி கிட்டுகிறது. நம் அன்றாட வேலைகளைப் பகலில் செய்தாலும் இரவிலேயே தூங்கி ஓய்வெடுத்து அமைதியைப் பெறுகிறோம். இதற்கு இன்றைய அவசர நாட்களில் பொருளில்லை என்றாலும் பொதுவானதொரு நியதி இரவிலே உடல் ஓய்வெடுக்கும் வேளையில் மனமும், மூளையும் சேர்ந்து ஓய்வெடுக்கும் என்பதே.

பிறந்த குழந்தையானது எவ்வாறு தாயின் கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் தங்கிப் பின்னர் வெளிவருகிறதோ அதைப் போல் இந்த ஒன்பது நாட்களும் அம்பாளிடம் பக்தி செலுத்தி அந்தக் கர்ப்பவாசத்தில் மூழ்கி இருக்கிறோம். நம் மனதிலுள்ள துர் எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணங்கள் தலை தூக்கும். புதியதோர் ஜீவசக்தி உடலில் பாய்ந்தாற்போல் இருக்கும். ஆகவே இந்த நவராத்திரியை நாம் கொண்டாடுவது என்பது நம் எண்ணங்களையும், உடலையும் சேர்த்துப் புதுப்பித்துக்கொள்ளவே ஆகும். இது நவராத்திரியில் அம்பிகையைத் தியானிப்பதற்கு ஒரு காரணம் ஆகும். முந்தின ஸ்லோகத்தில் பூர்வபுண்ணியம் இருந்தாலே அம்பிகை வழிபாட்டில் நம்மால் ஈடுபடமுடியும் என சங்கரர் மட்டுமின்றி பட்டரும் கூறுவதைப் பார்த்தோம். அடுத்த ஸ்லோகம் அவளுடைய பாததூளி மஹிமையாலேயே அனைத்துத் தொழில்களும் நடைபெறுவது குறித்து ஆதிசங்கரர் சொல்கிறார்.

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி:ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்
வஹத்யேனம் செளரி:கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர:ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்


த₁னீயாம்ஸம் பா₁ம்ʼஸும்ʼ த₁வ ச₁ரண -ப₁ன்கே₃ருஹ-ப₄வம்ʼ
விரிஞ்சி₁: ஸஞ்சி₁ன்வன் விரச₁யதி₁ லோகா₁ -நவிக₁லம்ʼ
வஹத்₁யேனம்ʼ ஶௌரி: க₁த₂மபி₁ ஸஹஸ்ரேண ஶிரஸாம்ʼ
ஹர: ஸங்க்₁ஷுத்₃யைனம்ʼ ப₃ஜ₁தி₁ ப₄ஸிதோ₁த்₃து₄லன - விதி₄ம்

तऩीयाम्सम् पांसुं तव चरण -पऩ्गेरुह-भवं
विरिञ्चि: सञ्चिऩ्वऩ् विरचयति लोका -नविकलं
वहत्येऩं शौरि: कथमपि सहस्रेण शिरसां
हर: सङ्क्षुद्यैऩं बजति भसितोद्धुलऩ - विधिम्


பாத தாமரையி னுள் உண்டு கட்பரம
வணுவினில் பலவியற்றினால்
வேத நான்முகன் விதிக்க வேறுபடு
விரிதலைப் புவனம் அடைய மான்
மூதரா அடி எடுத்த அனந்த முது
கண-பணா அடவி பரிப்ப மேல்
நாதனார் பொடி படுத்து நீறணியின்
நாம் உரைத்தென் அவள் பான்மையே

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்


அசையாத பிரம்மமாக இருந்த சிவனை ஞானஸ்வரூபமாகத் தெரிந்து கொள்ள வைத்தவள் அம்பிகை. அவனை வெளியே இருந்து எல்லாம் அவள் அசைக்கவில்லை. அவனுள்ளே சக்தியாக ஐக்கியமடைந்திருப்பவள் இங்கே எண்ணமே இல்லாமல் இருந்த ஞான ஸ்வரூபத்திற்கு “நான்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அசைத்தாள். இது இவ்வுலகின் முதல் அசைவு எனலாம். ஆட்டமான ஆட்டம்! இதுவே ஸ்ருஷ்டி மூலமாகவும் ஆனது. உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்த ஒரு அசைவு தானே அதிர்வு தானே முதல் முதல் வெளிப்பட்டது! இது தான் big bang எனப்படும் பெருவெடிப்பு என்று அறிவியல் கூறுவதாய்ப் பரமாசாரியார்(காஞ்சி) கருதுகிறார். பரப்ரஹ்மத்தின் அதிர்வே சப்த ரூபமான வேதமந்திரங்களாகி அதிலிருந்தே ஸ்தூல வஸ்துக்கள் அனைத்தும் உண்டானதாய்ச் சொல்கிறார். இதைத் தான் ஸ்பந்தனம் எனப்படும் அசைவு. இத்தகைய அசைவை உண்டாக்கின அம்பிகை இதன் மூலம் ஐந்தொழில்களையும் நடத்துகிறாள். பிரம்மா, விஷ்ணு , ருத்ரன் ஆகியோரின் உதவியோடு. அவர்கள் மூவரும் முறையே படைத்து, காத்து அழித்தல் தொழிலைச் செய்து வருகின்றனர்.

பிரம்மா அன்னையின் திருவடித்தாமரைகளிலுள்ள மிக மிக நுட்பமான துகள்களே அந்த அதிர்வின் மூலம் வந்ததோ என்னும்படி அவற்றைச் சேகரித்தே இவ்வுலகை சிருஷ்டிக்கின்றாராம். ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷன் உருவில் விஷ்ணுவும் இவ்வுலகை மட்டும் தன் தலையில் தாங்காமல் அம்பிகையின் அந்தப் பாததூளியையும் சேர்த்தே தாங்குகிறான். ருத்ரனோ அவற்றை விபூதியாகத் தன் உடலில் பூசிக்கொள்கிறார். இவ்விதம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவருமே அம்பிகையைத் தியானிக்கின்றனர் என்கிறார் ஆசாரியர். இதையே அபிராமி பட்டர்,

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே என விளிக்கிறார். தெய்வீக மணம் கமழும் கடம்பமலரைத் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் அணங்காகிய அம்பிகையை ஏத்தும் பல அடியவர்களோடு இந்த ஈரேழு உலகினையும் படைத்து, காத்து, அழித்து என முத்தொழில்களையும் செய்து வரும் மும்மூர்த்திகள் கூட தெய்வ மணம் பொருந்திய உன் திருவடிகளை வணங்கி, உன்னையும் வணங்கித் துதிக்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளைப் போற்றிப் புகழும் அளவுக்கு என்னால் என்ன பாடல் புனைய முடியும்! இருந்தும் என் பாடலையும் நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாயே! அம்மா, அபிராமி, எளியோனாகிய என் நாவில் இருந்து வெளிவரும் அர்த்தமற்ற சொற்களால் பாடப்படும் பாமாலையையும் நகைப்புக்குரியதாய்க் கருதாமல் ஏற்றுக்கொள்கிறாய் அல்லவா!

செளந்தரிய லஹரியின் எளிய விளக்கம்!

வழக்கம் போலப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு இதை ஆரம்பிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் புரிந்து கொண்டதை மட்டும் இங்கே சொல்கிறேன். குற்றம், குறைகளைப் பொறுத்தருள வேண்டும். நம் அனைவருக்கும் குருவாக இருந்து இந்த ஜகத்துக்கே குருவாக விளங்கிய ஆசாரியருக்கு நம்முடைய நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம்.

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி:ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யாஹூதி-விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம்

நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பணம் செய்கிறோம். இதுவே அதி உந்நதமானதொரு நிலை. ஆனால் எல்லாராலும் இது இயலுமா? என்றாலும் அத்தகையதொரு முயற்சியை அம்பிகை வழிபாட்டின் மூலம் தொடங்க வேண்டும். இந்த நிலையால் இந்த சமர்ப்பணத்தால் நம்முடைய ஒவ்வொரு பேச்சுமே அம்பிகைக்குரிய ஜபமாகவும், நாம் செய்யும் அனைத்துத் தொழில்களும் அவளுக்குச் சமர்ப்பணம் செய்யும் முத்திரைகளின் விளக்கமாயும், நம் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு நடையும் அம்பாளுக்குச் செய்யப் படும் பிரதக்ஷிணமாகவும், நாம் உட்கொள்ளும் உணவு, போன்றவை ஹோமத்தின் ஆஹுதியாகவும், நாம் ஓய்வெடுக்கப் படுப்பது அவளுக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், இன்னும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செய்கையும் அம்பிகைக்குச் சமர்ப்பிக்கிறோம். எப்போதும் இந்த நினைப்போடு இருந்தோமானால் நம்மைத் துன்பங்கள் அண்டாது. அவமானங்கள் தகிக்காது; துயரங்கள் சூழாது. அனைத்தும் அவள் செயலே என நினைப்போம்.

இது சமர்ப்பண ஸ்லோகத்தின் பொருள்.

அடுத்து ஆநந்த லஹரி முதல் ஸ்லோகம் ஆரம்பம்:

சிவ:சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி

ஶிவ: ஶக்₁த்₁யா யுக்₁தோ₂ யதி₃ ப₄வதி₁ ஶக்₁த₁: ப்₁ரப₄விது₁ம்ʼ
ந சே₁தே₁வம்ʼ தே₃வோ ந க₂லு கு₁ஶல:ஸ்ப₁ந்தி₃து₂-மபி₁
அத₁ஸ்த்₁வா -மாராத்₄யாம்ʼ ஹரி -ஹர - விரின்சா₁தி₃பி₄ -ரபி₁
ப்₁ரணந்து₁ம்ʼ ஸ்தோ₁து₁ம்ʼ வா க₁த₂-மக்₁ருத₁பு₁ண்ய: ப்₁ரப₄வதி₁


शिव: शक्त्या युक्थो यदि भवति शक्त: प्रभवितुं
न चेतेवं देवो न खलु कुशल:स्पन्दिथु-मपि
अतस्त्वा -माराध्यां हरि -हर - विरिऩ्चादिभि -रपि
प्रणन्तुं स्तोतुं वा कथ-मक्रुतपुण्य: प्रभवति


சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது
அரிதெனா மறை இரைக்குமாம்
நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில்
நடத்தி யாவரும் வழுத்து தாள்
அவனியின்கண் ஒரு தவம் இலார் பணியல்
ஆவதோ பரவல் ஆவதோ

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

சிவ சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. சிவனோடு சக்தி சேர்ந்தாலே சிவன் சீவன் ஆகிறான். சக்தி இல்லை எனில் சிவன் பயனற்று சவம் ஆவான். சிவனுக்கும் மங்களத்தைச் செய்து அவனை விட்டுப் பிரியாத சக்தி நமக்கும் மங்களத்தை உண்டாக்கட்டும். தக்ஷிணாமூர்த்தியாக யோகநிலையில் இருக்கையில் ஈசன் தன் சக்தியை உள்ளூர அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்த சித்சக்தி தான் அம்பாள். அவள் உள்ளே அடங்கிக்கிடக்காமல் வெளியே வந்தால் தான் உலகம் இயங்கும். எந்தக் காரியமுமே பண்ணாமல் ப்ரம்மமாய் சிவன் அமர்ந்திருந்தால் சிருஷ்டிகள் நடைபெறுவது எங்கனம்! சித்சக்தி சேர்ந்தாலேயே பிரபஞ்சம் நடைபெறும்.

ஆகையால் சகலத்தையும் நடத்தும் சக்தியே அம்பாள் ஸ்வரூபம். அவளே அனைத்தையும் படைத்துக்காத்து ரக்ஷிக்கிறாள். மும்மூர்த்திகள் மூலமாக அவள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக ஐதீகம். இதையே அபிராமி பட்டரும்,

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

அபிராமி அந்தாதி 7

இப்படி விஷ்ணு, பிரம்மா, ருத்ரன் மூவராலும் அம்பிகை வழிபடப் படுகிறாள். இவ்வளவு பெருமை வாய்ந்த அம்பிகையை நாமும் வழிபடுவதெனில் இது முன் ஜென்மப் புண்ணியம் அன்றி வேறென்ன இருக்க முடியும். பிறவிப் பெருங்கடலாகிய மாபெரும் சுழலில் சிக்கித் தயிர் கடையும் மத்தைப் போல் நாம் அலையாமல் நம்மைத் தடுத்தாட்கொள்ள அந்தச் சுழலில் இருந்து நம்மை விடுவிக்க அம்பிகையின் சேவடிகளைப் பற்றினாலே இயலும். நம்மால் அதாவது நம் போன்ற சாமானியர்களால் நிர்குணமான பிரம்மத்தை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதில் முடியாத ஒன்று. புரிந்து கொள்ளவும் இயலாது. அதனால் ரூபஸ்வரூபமாக அம்பாளை ஸ்தாபித்து வழிபட்டு வந்தோமானால் நம் மனதை அந்த அம்பாளின் ரூபத்தில், பக்தி மார்க்கத்தில் திருப்பினால் அது தானாகவே நம்மை ஞான மார்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். நம்முடைய தேவதை ஆராதனைகளின் தாத்பரியமும் இதுவே.

சிவனை விட்டு ஒரு கணமும் பிரியாத இந்தச் சக்தியை நாம் வழிபட்டு வந்தால் ஸர்வ விக்னங்களும் நாசம் அடைந்து, நாம் எடுக்கும் அனைத்துக் காரியங்களும் ஸித்தி அடையும் என்பது ஆன்றோர் வாக்கு.

இதை அபிராமி பட்டர்,

கண்ணியதுன் புகழ் கற்பதுன் நாமங்கசிந்து பத்தி
பண்ணியதுன்னிரு பாதாம்புயத்திற் பகலிரவா
நண்ணியதுன்னை நயந்தோர் வையத்து நான் முன்செய்த
புண்ணியமேது என்னம்மே புவியேழையும் பூத்தவளே.

அபிராமி அந்தாதி 12.

என்று கூறுகிறார். ஊனும், உடலும் உருக உருக, அபிராமி அன்னையின் திருவருள் வேண்டிப் பாடிய இந்த அந்தாதித் தொகுப்பில் மேற்கண்ட பாடலுக்குப் பொருள் காண்கையில்,

புவி ஏழையும் பெற்றெடுத்த அம்மா, என் தாயே, அபிராமி அன்னையே, உன் புகழையே நான் நினைந்து நினைந்து பாடி வருகிறேன், உன் திருநாமம் தவிர மற்ற நாமங்களைக் கற்றேன் அல்ல; எப்போதும், எந்த நேரமும் உன்னையே நினைந்து பக்தி செய்தும் வருகிறேன். அம்மா, உன்னை நினைத்துக்கொண்டே இருந்ததால் அன்றோ, உன் பூரண நிலவு போன்ற முகத்தை நினைத்த காரணத்தால் அன்றோ அமாவாசையைப் பெளர்ணமி எனக் கூறினேன். இப்படி நான் என்னையே மறக்கும் அளவுக்கு பக்தி செய்து வந்திருக்கிறேன் என்கிறார் பட்டர். பகலும், இரவும் உன்னை நெருங்கி எந்நேரமும் உன் புகழ் பாடும் அடியார் கூட்டத்தை அல்லவோ நான் எப்போதும் நாடுகிறேன். இவை எல்லாம் உன் திருவருளால் அன்றோ நடைபெறுகிறது! என் தாயே, நான் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பிறவியில் எனக்கு இவை எல்லாம் கிடைக்கப் பண்ணி இருக்கிறாய்.

எண்ணங்கள் பதிவில் இருந்து இங்கே மாற்றி உள்ளேன். அதில் பல விஷயங்களைக் குறித்தும் பதிவு போட வேண்டி ஆகிறது. ஆகையால் செளந்தரிய லஹரி போன்ற கனமான விஷயங்களைப் போடும் பதிவுப் பக்கங்களில் இம்மாதிரியான பதிவுகளையும் போடுவது சரியாகத் தோன்றவில்லை. ஆகையால் மாற்றிவிட்டேன். பழைய பதிவுகளை இங்கே மாற்றியதும் தொடர்ந்து எழுத வேண்டும். அதுவரை பொறுத்திருக்கவும்.