எச்சரிக்கை

என் அனுமதியின்றி இந்த வலைப்பக்கங்களில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்தக் கூடாது.

Wednesday, July 27, 2011

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

கிஷ்கிந்தையை சுக்ரீவன் ஆண்ட சமயத்தில் தான் அநுமன் சூரியனின் வேண்டுகோளின்படியும் அவனுக்குத் தான் அளிக்கவிருந்த குருதக்ஷிணைக்காகவும் சுக்ரீவனிடம் மந்திரியாக வந்து சேர்ந்தான். அவனுக்கு உண்மையாக சேவை செய்தும் வந்தான். ஆகவே வாலி மீண்டும் திரும்ப வந்து சுக்ரீவனை நாட்டை விட்டு விரட்டியபோது அவனுடன் அநுமனும், ஜாம்பவான் என்னும் கரடித் தலைவனும், சுக்ரீவனின் பிள்ளை அங்கதனும் சேர்ந்தே வந்திருந்தார்கள். இங்கே ரிஸ்யமூக பர்வதத்தை வந்தடைந்து அங்கே ஒளிந்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் ஸ்ரீராமரும், லக்ஷ்மணனும் சீதை சென்ற திக்கு நோக்கிப் பிரயாணித்து வந்து சேர்ந்தனர். பம்பை நதிக்கரைக்கு வந்த ஸ்ரீராம, லக்ஷ்மணர்கள் ஏற்கெனவே சுக்ரீவனைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்ததால் அவனைத் தேடி நடந்தார்கள். மலையின் உச்சியில் இருந்து அவர்கள் இருவரையும் கண்ட சுக்ரீவனோ வாலியால் அனுப்பப் பட்டவர்களோ என எண்ணி அஞ்சினான். சந்தேகத்தோடு அவன் தன் நண்பர்களைக்கலந்து ஆலோசிக்க அவர்களில் அனுமன், “வாலியையே நினைத்துக் கவலைப்படுவதை விட்டொழியுங்கள். இவர்கள் யாரோ, எவரோ, அறிய மாட்டோம். இந்த மலையில் வாலியைப் பற்றிய கவலையை விட்டொழியுங்கள். ஓர் அரசனான நீர் அதை மறந்து ஒரு சாதாரண வானரமாக சஞ்சலம் அடைதல் உமக்குத் தகுதியானதன்று. இப்போது அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என்பதை ஆலோசிக்கலாம்.” என்று கூறினான். ஒரு மந்திரி மன்னனிடம் தக்க நேரத்தில் கூற வேண்டிய ஆலோசனையைக் கூறியதன் மூலம் தன்னுடைய தகுதியை நிரூபித்தான் ஆஞ்சநேயன்.

ஆனாலும்சுக்ரீவனோ, “மாறுவேடத்தில் ஒற்றர்களை அனுப்பி நம்மை வேவு பார்த்து வரச் சொல்லி இருப்பான் வாலி. எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே. அநுமனே, நீ சென்று அவர்கள் யார், எவர், எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் நோக்கம் என்ன என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு வா. இந்தக் காட்டை நோக்கி அவர்கள் ஏன் பயணப்பட்டார்கள் என்பதையும் கேட்டு அறிந்து வா.” என்று அநுமனை அனுப்பி வைத்தான். அநுமனும் தன் சுய உருவை மறைத்துக்கொண்டு ஒரு சந்நியாசியாக மாறினான். ராம, லக்ஷ்மணர்கள் இருக்குமிடம் சென்று அவர்களை வணங்கி, “இந்தக் காட்டில் அங்குமிங்கும் அலைந்து யாரை அல்லது எதைத் தேடுகிறீர்கள்? உங்களைப் பார்த்தால் அரசர்கள் போலவும், அரசகுமாரர்கள் போலவும் காண்கிறீர்கள். ஆனால் ரிஷிகளுக்குரிய மரவுரி தரித்துள்ளீர்கள். நீங்கள் யார்?? ராஜரிஷிகளா? அல்லது விண்ணிலிருந்து பூமிக்கு வந்த தேவர்களில் இருவரா? இங்கு என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்?” என்று விநயமாக வினவினான்.

மேலும், “ரிஷிகள்போன்ற உடைகளை அணிந்திருந்தாலும் கூடவே போர்க்கோலமும் பூண்டிருக்கின்றீர்களே? உங்கள் இருவரது உடைவாட்களும்நீண்டு இப்போதுதான் தீட்டப்பட்டது போல் மின்னுகின்றன. வில்லை ஏந்தி வந்திருக்கும் வில்லாளிகளான உங்கள் அம்புறாத்தூணிகளோ கூர்மையான அம்புகளால் நிறைந்துள்ளன. இங்கு எவருக்கேனும் பாதுகாப்புக் கொடுக்க வந்துள்ளீர்களா? ஏன் ஒன்றுமே பதில் கொடுக்காமல் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று வினவினான். சற்று யோசனை செய்த அனுமன் மேலும் பேசுவான்: வானரங்களின் நிகரற்ற தலைவனும், தர்மத்தைக் கடைப்பிடிப்பவனுமான சுக்ரீவன் என்னும் வானரத் தலைவனே என் அரசன். அவன் அண்ணனான வாலி என்பவனால் நாடு கடத்தப்பட்டு ஒவ்வொரு இடமாக அலைந்து கொண்டிருக்கும் சுக்ரீவனின் முக்கிய மந்திரி நான். இந்த ரிஷ்யமூக பர்வதத்திற்குள் வாலி நுழைய முடியாது என்பதால் சுக்ரீவன் தற்சமயம் இங்கே தங்கி உள்ளார். நானும் ஒரு வானரனே. என் பெயர் அனுமன். சுக்ரீவன் உம்மோடு தனது நட்பை விரும்புகிறார். அந்த நட்பை உறுதி செய்ய வேண்டி என்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். நான் இப்போது வந்திருக்கும் இந்த சந்நியாசிக்கோலம் நான் வேண்டி எடுத்துக்கொண்டிருப்பது ஆகும். நினைத்த நேரம், நினைத்த உருவை எடுக்கும் வல்லமை பெற்றவர்கள் நாங்கள். ஆகவே என்னை சுக்ரீவனின் அமைச்சனாக அறிந்து கொண்டு என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டு என் தலைவரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.”

சொல்லின் செல்வனான அனுமனின் பேச்சைக் கேட்ட ஸ்ரீராமர் முகமலர்ச்சியுடன் லக்ஷ்மணனைப்பார்த்து, " நாம் தேடிவந்த சுக்ரீவனின் அமைச்சன் ஆன இவன் நம்பிக்கைக்கு உரியவனாய்த் தெரிகின்றான். மேலும் இவனுடைய இந்தப் பேச்சுக்களில் இருந்து இவன் அனைத்து சாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவன் என்று புரிகிறது. இவன் நடத்தையிலோ, சொற்களிலோ காணப்படும் தெளிவில் இருந்து இவன் மிக உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவன் என்பதும், அருமையான ஒரு தூதுவனாகப் பரிமளிக்கிறான் என்பதும் புலனாகிறது. இவனைப் போன்ற ஒருவனை மந்திரியாகப் பெற்ற அந்த சுக்ரீவனின் காரியம் எவ்வாறேனும் கைகூடும். ஆகவே நமக்கும் நாம் வந்த காரியம் வெற்றியடையும் என்று தோன்றுகிறது.” என்றார்.

Sunday, May 1, 2011

ஜெய் ஆஞ்சநேயா! வாலி, சுக்ரீவன்!

 
Posted by Picasa
திருப்பனந்தாள் மடத்துத் தூணில் காணப்பட்ட வாலி, சுக்ரீவன் சிற்பம்.


சற்று நேரத்தில் வாலியின் குரலைப் போல் ஓர் குரலும் கேட்டதும், அதைத் தொடர்ந்து அந்த அசுரனின் அசுர கர்ஜனையும் கேட்டதும். உடனே வெளியே நின்ற சுக்ரீவன் வாலி இறந்துவிட்டான்; அசுரன் அவனைக் கொன்றுவிட்டான் என்ற ஓர் முடிவுக்கு வந்தான். ஆகையால் அசுரன் வெளியே வராதபடிக்குப் பாறையைத் தள்ளிக் குகையின் வாயிலை அடைத்தான். பின்னர் வாலிக்கு நீத்தார் கடன்களை முறைப்படி செய்தான்; அங்கிருந்து கிளம்பி கிஷ்கிந்தை வந்து நாடு மக்களிடமும், மந்திரி, பிரதானிகளிடமும் நடந்ததை சொன்னான். அவனுடைய முயற்சிகளையும் என்ன நடந்தது என்பதை சுக்ரீவனை வற்புறுத்தியும் கேட்டுத் தெரிந்து கொண்ட மந்திரிகள் ஆலோசனைகள் பலவும் செய்து சுக்ரீவனுக்கு முடி சூட்டினார்கள். சுக்ரீவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் வாலி திடீரெனத் திரும்பி வந்தான். தன்னுடைய சிம்மாதனத்தில் தம்பி ஏறி அமர்ந்து ஆட்சி நடத்துவதையும், தன்னுடைய மந்திரி, பிரதானிகள் அதற்கு ஒத்திசைத்ததையும் பார்த்துக் கோபம் கொண்டான். அமைச்சர்களைச் சிறையில் தள்ளினான். சுக்ரீவன் அண்ணனைக் கண்டதும் உண்மையிலேயே மகிழ்ந்து தன் அரச கிரீடத்தைக் கழற்றி அண்ணன் காலடியில் சமர்ப்பித்து, “அண்ணா, உங்களால் மாயாவியான துந்துபி கொல்லப் பட்டது கண்டு மகிழ்ந்தேன். நாட்டுமக்களுக்கு நன்மை செய்தீர்கள். நீங்கள் வராத காலத்தில் உங்களுக்குப் பதிலாக நாட்டை நான் ஆண்டேன். இனி நீரே எமக்குத் தலைவர். ஒருவருட காலம் அந்தக் குகையின் வாயிலில் பள்ளத்தில் காத்திருந்த நான் பெருகி வந்த ரத்த வெள்ளத்தைக் கண்டு நீங்களே இறந்துவிட்டதாய்த் தவறான முடிவுக்கு வந்துவிட்டேன். ஆகையால் பள்ளத்தை மூடிவிட்டுக் கிஷ்கிந்தை வந்தேன்; இங்கே நான் மந்திரி, பிரதானிகளிடம் நடந்த எதையும் கூறவில்லை. பட்டம் சூட்டிக்கொண்டு அரசாள விருப்பமும் தெரிவிக்க வில்லை. மக்களும், மந்திரிகளுமே ராஜ்யம் அரசனில்லாமல் இருத்தல் கூடாது என்பதால் எனக்கு முடி சூட்டினார்கள்.”

“ஆனால் இப்போது நீங்கள் வந்துவிட்டீர்கள். நான் செய்தது தவறெனில் மன்னிக்கவும். நீங்கள் இல்லாத நேரத்தில் முறையாகவே ஆண்டு உங்கள் நாட்டைக் காத்து வந்திருக்கிறேன். அதை இப்போது உம்மிடம் ஒப்படைக்கிறேன். கோபம் கொள்ளாதீர்கள்.” என்று தயவாகக் கூறித் தன் நாட்டையும், கிரீடத்தையும் வாலியிடம் ஒப்படைத்தான். ஆனால் வாலிக்கோ கோபம் அடங்கவே இல்லை. மிகவும் கொடுமையான வார்த்தைகளால் சுக்ரீவனைத் திட்டினான். மற்றவர்களைப் பார்த்து, “கொடியவனான மாயாவி துந்துபி என்னை சண்டைக்கு அழைத்தபோது வேறு வழியில்லாமல் நான் போனேன். இதோ, இந்த என் தம்பி சுக்ரீவனும் உடன் வந்தான். அந்த மாயாவி ஒரு பள்ளத்தினுள் மறைந்தான். அவனைக் கொல்லாமல் திரும்பக் கூடாது என்பதால் நானும் அந்தப் பள்ளத்தினுள் புகுந்தேன். இவனை வெளியே காவல்தான் இருக்கச் சொல்லி இருந்தேன். அங்கே அவனைத் தேடிக் கொல்ல எனக்கு ஒரு வருடமாயிற்று. என்னால் கொல்லப் பட்ட அவன் கக்கிய ரத்தத்தால் அந்தப் பள்ளம் நிரம்பி ரத்தம் வெளியே ஓடி வரலாயிற்று. நான் பள்ளத்திலிருந்து வெளியே வர முயற்சித்த போது இந்த என் தம்பி பள்ளத்தை மூடிவிட்டிருந்தான். என்னால் வர இயலவில்லை. சுக்ரீவா, சுக்ரீவா, எனப் பல முறை கூவிக் கூவி அழைத்துப் பார்த்தேன். பதிலே இல்லை.”

“அதன் பின்னர் மிகச் சிரமப் பட்டுக் காலினாலும், வாலினாலும் பள்ளத்தை மூடியிருந்த பாறையை நகர்த்தியும், மெள்ள மெள்ள நொறுக்கியும் பள்ளத்திலிருந்து வெளியே வந்தேன். வந்தால், இந்தக் கொடியவன் என் நாட்டை என்னிடமிருந்து அபகரித்திருக்கிறான். அண்ணன் என்ற அன்பைக் காட்டாமல் என் நாட்டை அபகரிக்க வேண்டி வஞ்சகமாய்ச் சூழ்ச்சிகள் செய்திருக்கிறான். இவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.” இவ்வாறு கூறிய வாலி அணிய மாற்றுத் துணி கூட இல்லாமல் சுக்ரீவனை அந்தக் கணமே நாட்டை விட்டுத் துரத்தினான். தன் மனைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல எண்ணிய சுக்ரீவனிடமிருந்து அவன் மனைவியையும் பறித்துக் கொண்டான். வாலியிடமிருந்த பயத்தால் எங்கேயுமே தங்க இயலாமல் தவித்த சுக்ரீவன் கடைசியில் ரிஷ்யமுக பர்வதத்தினுள் வாலி நுழையத் தடை என்பதை அறிந்து அங்கே வந்து தங்கினான். ஆனால் வாலியின் தொல்லைகள் அவனுக்குக் குறையவே இல்லை.

Wednesday, April 13, 2011

ஜெய் ஆஞ்சநேயா, ஆஞ்சநேயப் பிரபாவம், வாலி, சுக்ரீவர்கள்!

வால்மீகியின் ராமாயணத்திலே இந்த வாநரர்கள் பற்றிய வர்ணனையைப்பார்த்தால் அவர்கள் சாதாரணக் குரங்கினம் அல்ல என்பது நன்கு புலனாகும். அப்படி ஒரு வாநரன் ஆன அநுமனின் வீரதீரம் பற்றியே பார்க்கிறோம். அந்த அநுமன் எப்படிக் கிஷ்கிந்தை வந்து சேர்ந்தான் என்பதையும் பார்த்தோம். தன்னுடைய அம்சத்தின் மூலம் பிறந்த தன் மகன் ஆன சுக்ரீவனுக்குத் தக்க துணையாக அநுமன் இருப்பான் என நம்பியே அவனை சுக்ரீவன் இருக்குமிடம் அனுப்புகிறான் சூரியன். இதுவே அநுமன் தனக்குத் தரும் குரு தக்ஷிணை எனவும் கூறுகிறான் அல்லவா? சுக்ரீவனுக்கு அப்படி என்ன கஷ்டம் நேர்ந்தது என்று பார்க்கும் முன்னர் வாலியைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அருணி என்னும் வாநர ஸ்த்ரீக்குப் பிறந்த வாலியும், சுக்ரீவனும் ரிக்ஷரஜஸ் என்னும் வாநர அரசனால் வளர்க்கப் பட்டனர். மூத்தவன் ஆன வாலிக்குப் பட்டம் கட்டினான் ரிக்ஷரஜஸ். சுக்ரீவன் அவனுக்கு இளையவன் ஆதலால் அண்ணனுடன் கூட உதவிகள் செய்து கொண்டு வந்தான். வாநரர்களின் அரண்மனைகள் கூட பிரமிப்பூட்டும்படியாக அமைந்திருந்ததாக வால்மீகி வர்ணிக்கிறார். அழகான வாநரப் பெண்கள் இருந்ததோடு அற்புதமான ஆடை ஆபரணங்கள் பூண்டும் இருந்திருக்கின்றனர். நடத்தை, அறிவு, பழக்க வழக்கம் போன்றவற்றில் மனிதர்களை ஒத்திருந்தாலும் உணர்ச்சி வசப்பட்டு கோபத்திலோ, மகிழ்ச்சியிலோ அறிவை இழப்பவர்களாக இருந்தனர். ஆகவே இவர்களை வெறும் வாநரங்களாக நினக்காமல் மேலே படிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

வாலி மிகுந்த புத்திசாலியாகவும் திறமை உள்ளவனாகவும் இருந்ததோடு வீரனாகவும் இருந்தான். அவனுக்கும் மாயாவி என்னும் ஒரு அரக்கனுக்கும் ஒரு பெண்ணின் காரணமாகச் சண்டை மூண்டது. மாயாவி ஒரு நாள் நள்ளிரவில் கிஷ்கிந்தை வந்து வாலியைச் சண்டைக்கு அழைத்தான். வாலியும் உடனே சண்டைக்குப் போனான். அவன் மனைவிமார்களும், சுக்ரீவனும் எவ்வளவோ முயற்சி எடுத்துத் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. வாலியை அவர்களால் தடுக்க முடியவில்லை. வாலியின் பலம் அசாத்தியமானது. அனைவரையும் உதறித் தள்ளிவிட்டு விட்டு மாயவியுடன் சண்டைக்குப் போனான் வாலி.

உக்கிரமாகச் சண்டை நடக்கப்போகிறது என்ற கவலையோடு சுக்ரீவன் அண்ணனைத் தொடர்ந்தான். அண்ணனும், தம்பியும் வருவதைக் கண்ட மாயாவியோ ஓட்டமாக ஓடினான். வாலி தொடர்ந்தான். பின்னாலேயே சுக்ரீவனும் தொடர, அந்த அசுரன் பூமிக்குள் இருந்த ஒரு பெரும் பள்ளத்தில் இறங்க, வாலியும் இறங்க யத்தனித்தான். சுக்ரீவன் தடுக்க, வாலி விடாப்பிடியாக, " நான் உள்ளே இறங்கிச் சென்று அவனைக் கொன்றுவிட்டுத் திரும்பி வருகிறேன். நீ இங்கே காவலுக்கு இருப்பாயாக." என்று கூறி சுக்ரீவனைக் காவலுக்கு வைத்துவிட்டுப் பள்ளத்தில் இறங்கி மறைந்து போனான். வாலி உள்ளே நுழைந்ததுமே மறைந்திருந்ஹ மாயாவி பள்ளத்தையும் மூடிவிடவே, சுக்ரீவனுக்குக் கலக்கம் ஆரம்பமாயிற்று. அப்படியும் ஒரு வருஷத்துக்கும் மேல் அங்கேயே சுக்ரீவன் காத்திருந்தான். வாலி என்ன ஆனான் என்றே தெரியவில்லை. அப்போது அந்தப் பள்ளத்திலிருந்து ஓர் அசுர கர்ஜனை கேட்க, ரத்தமும் பிரவாகமாகப் பொங்கிக்கொண்டு வெளிவரலாயிற்று.

Thursday, February 24, 2011

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

அநுமன் தன் வித்தைகளை சூரியனின் மூலம் நன்கு கற்றுத் தேர்ந்ததோடு அல்லாமல் மாபெரும் பண்டிதனாகவும் ஆனான். சூரியன் செல்லும் திசையெல்லாம் கூடவே சென்று ஒரு காலைக் கிழக்கேயும், மற்றொரு காலை மேற்கேயும் வைத்துக்கொண்டு தன்னுடைய பிரயாணத்துக்கு இடையூறு நேராவண்ணம் கற்ற இந்த அதிசய மாணாக்கனின் திறமையைக் கண்டு சூரியனும் மகிழ்வும், பெருமையும் கொண்டான். சூரியன் முன்னேற முன்னேற அநுமன் அவனைப் பாரத்தவண்ணமே பின்னே பின்னே சென்று அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். மேலும் இசையிலும் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றான் அநுமன். முதலில் ஒரு வானரமான உனக்கெல்லாம் இசையைப் பற்றி என்ன தெரியும் என அனுமனைப் பார்த்துக் கேலி செய்த நாரதரே வியக்கும் வண்ணம் அநுமன் வீணை இசைத்தால் கல்லான மலையே உருகும் வண்ணம் அவன் இசைத் திறனும் அமைந்தது. இப்போது குருகுலவாசம் முடிந்து விடைபெறும் நாள் வந்துவிட்டது. குரு தக்ஷிணை கொடுக்கவேண்டும்.

குரு தக்ஷிணையாக எதைத் தருவது என்று சூரியனிடமே கேட்டான் அநுமன். சூரியனோ இப்படி ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடும் குரு பக்தியும் நிறைந்த சீடனுக்குக் கற்றுக்கொடுத்ததே தனக்குக் கிடைத்த மாபெரும் தக்ஷிணை என மறுத்தான். ஆனால் அநுமன் சமாதானம் அடையவில்லை. வெகு நேரம் யோசித்த சூரியன் தன்னுடைய மானஸ புத்திரன் ஆன சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை சென்று உதவிகள் செய்யுமாறும், ஆலோசனைகள் கூறுமாறும் அநுமனிடம் கேட்க அநுமனும் அதற்கு ஒத்துக்கொண்டு கிஷ்கிந்தை நோக்கிப் பிரயாணமாகிறான். இவ்வளவு படித்தும்,, இத்தனை வித்தைகள் கற்றுக்கொண்டும் அநுமனுக்கு அவை எதுவும் நினைவில் இல்லாதவாறு தன் பலம் தனக்கே தெரியாதவாறு ஒரு சாபம் இருந்து கொண்டிருந்தது. சின்ன வயதுக் குறும்போடு அநுமன் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை தவத்தைத் கலைத்து விளையாட, கோபம் கொண்ட ரிஷிகள் அனைவரும் சேர்ந்து அநுமனின் இந்தச் செயலைத் தடுக்க நினைத்தனர். அவன் அதீத பலம் அவர்களுக்குத் தயக்கத்தை அளித்தது. அப்போது முக்காலமும் உணர்ந்த ஞாநியான அகத்தியர் தாம் இதற்கு ஒரு முடிவு கட்டுவதாய்க் கூறினார். ஒரு நாள் தங்கள் வழிபாட்டுக்கு வேண்டிய மலர்கள், கனிகளைப் பறித்து வரும்படி அநுமனிடம் கூற அவனோ மலர்ச்செடிகளையும், கொடிகளையும், பழமரங்களையும் வேரோடு கொண்டுவந்துவிட்டான். இது தான் சமயம் என்று நினைத்த அகத்தியர்அநுமனுக்கு அவன் கற்ற வித்தைகள் மறந்து போகக்கடவது என்று சாபம் கொடுத்தார். என்றாலும் அநுமன் அவதரித்த முக்கிய காரியம் பூர்த்தி அடையவேண்டும் என்பதையும் மனதில் எண்ணி ராமகாரியத்திற்காக அநுமன் பிறப்பெடுத்ததைக் கூறி சாபத்தைத் திரும்ப வாங்கச் சொல்ல, இட்ட சாபம் திரும்ப வாங்க இயலாது என்பதால் சாபத்தை அநுமன் அநுபவித்தே ஆகவேண்டும் எனவும், சரியான நேரம் வருகையில் ஒரு மூத்த வயோதிகரால் அவர் பலம் அவருக்கு எடுத்துச் சொல்லப் படும் எனவும் விமோசனமும் கொடுத்தார். அவ்வளவிலேயே அநுமன் கிஷ்கிந்தை நோக்கி வருகிறான்.

இங்கே கிஷ்கிந்தையிலே வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இடையிலே கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள். வாலியின் பலம் மிக அளவிடமுடியாமல் இருந்தது. அந்த பலத்தை வைத்து அவன் அனைவரையும் வென்றான். கிஷ்கிந்தையை ஆண்டு வந்தான். அவன் மனைவி தாரை இருக்கையிலேயே தம்பி மனைவியான ருமையையும் பலவந்தம் செய்தான். தடுத்துக் கேட்ட சுக்ரீவனை மதிக்கவில்லை. அவனைக் கண்டு லங்காபுரி அரசன் ஆன ராவணனும் பயந்தான். அவனோடு சமரசம் செய்து கொண்டு சமாதானமாகப் போகவே நினைத்து அப்படியே வாலியைத் தனது நண்பனாகவும் ஆக்கிக்கொண்டான். அப்படிப் பட்ட வாலியின் கதை அடுத்துப் பார்க்கலாம்.

Tuesday, November 30, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

ஸ்ரீராமன் விருப்பப்படி தன்னிருப்பிடம் திரும்பிய அநுமன் தன் கல்வியைத் தொடருகிறான். அனைவரும் எதிர்கொள்ளப் பயப்படும் சூரியனையே தனக்குக் குருவாய்க்கொண்டு ஹநுமான் தன் பாடங்களைக் கற்று முடிக்கிறான். சூரியனின் வேகத்துக்கு ஈடு கொடுத்துக்கொண்டு அவன் முகத்தையே பார்த்த வண்ணம் பின்னாலேயே நகர்ந்துகொண்டு கற்று முடித்த ஹநுமான் குரு தக்ஷிணை தர விரும்பினான். ஆனால் சூரியனோ அநுமனின் அர்ப்பணிப்பு உணர்வும், பாடம் கேட்டுக்கொள்வதில் இருந்த ஆர்வமும், புரிதலில் காட்டிய அதீதத் திறமையும், இத்தகையதொரு சீடனைத் தனக்குக் கொடுத்ததன் மூலம் அதுவே சிறந்த தக்ஷிணையாக அமைந்தது எனக் கூறுகிறான். ஆனால் அநுமனோ குரு தக்ஷிணை என்று கொடுக்கவேண்டும் என்று பிரியப்பட சூரியன் தன் மானசீக புத்திரன் ஆன சுக்ரீவனுக்கு உதவி செய்யும்படியும், முக்கியமான நேரங்களில் தக்க ஆலோசனைகள் அளிக்குமாறும் கூறுகிறான்.

இதன் பிறகே அநுமன் சுக்ரீவனிடம் கிஷ்கிந்தைக்கு வந்து சேருகிறான். அநுமன் சுக்ரீவனின் உதவிக்கு வரும் சமயம் சுக்ரீவன் கிஷ்கிந்தையின் அரசனாக இருந்தாலும், அவன் அதை அண்ணனைக் கொன்றுவிட்டுப் பெற்றான் என்ற அவப் பெயருக்கு ஆளாகி இருந்தான். வாலியோ திடீரெனக் கிளம்பி வந்து சுக்ரீவனை விரட்டிவிட்டு அவன் மனைவியான ருமையைத் தன்னிடம் இருத்திக்கொண்டு சுக்ரீவனை கிஷ்கிந்தையை விட்டே விரட்டி விடுகிறான். தன்னிடம் நம்பிக்கையும் விசுவாசமும் உள்ள சிலரை மட்டும் அழைத்துக்கொண்டு சுக்ரீவன் வாலியால் வரமுடியாத இடத்தில் ஒளிந்து கொள்ள நினைக்கிறான். வாலியால் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் வர முடியாது.

அதற்கு ஒரு முனிவரின் சாபம் தான் காரணம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் வாலி, சுக்ரீவன் பற்றிய பூர்வ கதையைத் தெரிந்து கொள்வோமா??? அப்போத் தான் பின்னாடி தொடர செளகரியமா இருக்கும். அண்ணன், தம்பிகளான இவர்கள் ஏன் ஒருவரை ஒருவர் கொல்லும் அளவுக்குப் போனார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். ராமாயணக் கதையே அண்ணன், தம்பி உறவும், அரசபதவியை யார் அநுபவிப்பது, யார் விட்டுக் கொடுப்பது என்பதில் உள்ள பேதங்களையும் குறித்தே. ஸ்ரீராமன் தம்பிக்காகத் தனக்கு உரிமையுள்ள அரசை விட்டுக் கொடுத்துக் காட்டுக்கு வந்தான் எனில் அவன் நண்பராக்கிக்கொள்ளும் சுக்ரீவனோ அண்ணனின் ராஜ்யத்தை அபகரித்துக்கொண்ட பழியுடன் இருக்கிறான். ராவணனோ தன் அண்ணனான குபேரனை விரட்டிவிட்டு லங்காபுரியை அபகரித்துக்கொள்கிறான். தன் சொந்த சகோதரர்களில் அனைவரிலும் இளையவன் ஆன விபீஷணனுக்கும் ராவணனுக்கும் ஒத்தே போகாது. அவன் அண்ணனுக்கு எதிராக ஸ்ரீராமனுடன்சேர்ந்து சண்டையிட்டான். எல்லாவற்றிற்கு ஒரு காரணம் உள்ளது. அது தான் மனிதன் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம். தர்மத்தை மீறி நடந்தான் என்பதற்காகவே தன் அண்ணன் என்றும் பார்க்காமல் விபீஷணன் ஸ்ரீராமனிடம் சரணடைகிறான். அதே தர்மத்திற்காகவே ஸ்ரீராமன் தன் தந்தையின் வாக்கைக் காக்க வேண்டி தனக்கு உரிய ராஜ்யத்தை துறக்கிறான்.

ஒரே தர்மம், ஆனால் அதன் பாதைகளில் எத்தனை வித்தியாசம்???

Wednesday, October 6, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!

என்ன முயன்றும் கூனியால் கைகேயியின் மனதை மாற்ற முடியவில்லை. அனுமனோ ஸ்ரீராமனோடு நெருங்கிப் பழகி ராமனுக்குச் சேவை செய்வதற்காகவே தான் பிறப்பெடுத்திருப்பதாயும் நம்புகிறான். அப்படியே கூறவும் செய்கிறான். ஸ்ரீராமனுக்கும் தன் மனதில் பொங்கும் சக்தியாக அநுமன் வியாபித்திருப்பதாய்த் தோன்றுகிறது.

அதற்குள் அங்கே பாற்கடலில் மஹாவிஷ்ணுவோ இதெல்லாம் தேவையற்றவை என மனம் வருந்துகிறார். அதற்கு ஈசனோ அநுமன் ராமனுக்குச் சேவை செய்யவென்றே பிறந்துள்ளான் எனவும், அங்கே பூமியில் அவனை அனுமனாகாவே ஒரு வாநரனாகவே பார்க்கவேண்டும் எனவும், சிவனின் அம்சம் தானே தவிர சிவனின் அவதாரமோ, அல்லது சிவனேயோ பிறக்கவில்லை என்றும் தெளிவு செய்கிறார். எனினும் மஹாவிஷ்ணு தாம் பூஜிக்கவேண்டிய ஈசனை இந்த ராமாவதாரத்தில் முறைப்படி பூஜிக்கப் போவதாய்ச் சொல்ல, ஈசனும், அதற்கு ஒரு சந்தர்ப்பம் ராவண வதத்தின் பின்னே அமையும் எனவும் வாக்குக் கொடுக்கிறார்.

வசிஷ்டரின் வேத பாடங்களை ஸ்ரீராமனும், அவன் சகோதரர்களும் கற்றுக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் அநுமனும் விண்ணில் பறந்து சென்று சூரியனிடம் பாடம் கற்கின்றான். சூரியனின் பிரயாணத்தோடு கூடவே அந்த வேகத்துக்குத் தானும் ஈடு கொடுத்து சூரியனுக்கு முன்னால் வணக்கத்தோடு நின்றுகொண்டு, தான் பின்னாலேயே பிரயாணம் செய்து கொண்டு பாடங்களைக் கற்றானாம் அநுமன். அநுமன் கற்றுக்கொள்ளும் வேதகோஷங்கள் விண்ணில் மட்டுமின்றி மண்ணிலும், வசிஷ்டரின் ஆசிரமத்தில் எதிரொலிக்க, வசிஷ்டர் அநுமன் சூரியனிடம் பாடம் கேட்பதாயும் அவன் சாதாரணச் சிறுவன் என நினைக்கவேண்டாம் எனவும், கூறுகிறார். அநுமன் தன் வழக்கமான சேஷ்டைகளோடு ரிஷி, முனிவர்களிடம் விளையாட, கோபம் கொண்ட ரிஷிகள், அநுமனுக்குத் தன் பலம் தெரியாமல் போகக் கடவது என சபிக்கின்றனர். அடடா, இப்படி இருந்தால் அப்புறம் ராம காரியம் எப்படி நடக்கும் என சிந்தித்த நாரதர் ரிஷிகளிடம் வேண்ட, அவர்களும் வேறொருவரால் நினைவு செய்யப் படும் வேளையில் அவனுடைய பலமும், வீரமும் அவனுக்கு நினைவில் வரும் என சாப விமோசனத்திற்கு ஒரு வழியையும் கூறுகின்றனர். இப்போது கொஞ்சம் அப்படியே இலங்கையில் என்ன நடக்கிறதுனு ஒரு எட்டுப் போய்ப் பார்த்துடலாம்.

அநுமன் விஸ்வரூபம் எடுத்து சூரியனுக்கு நேரே நின்று பாடம் கேட்பதைப் பார்த்த ராவணனின் வீரர்களில் ஒருவன், ராவணனின் அரண்மனைக்கு ஓடோடிச் சென்று அவனிடம் அநுமன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு நின்று பாடம் கேட்பதையும், அவன் ஒரு வாநரன் எனவும் கூறுகின்றான். ஒரு வாநரன் வேதம் கேட்கிறானா? அதுவும் சூரியனிடமா? எனில் இதில் ஏதோ சூது உள்ளது! இந்தச் சூரியனுக்கு எவ்வளவு தைரியம்?? எனக்கெதிரே வரவே அஞ்சுவான்! இப்போது எனக்கொரு எதிரியை உருவாக்குகிறானா? ம்ம்ம்ம்ம்??? ஒரு கால், ஒரு கால், அன்றொரு நாள், இமயமலையில் கைலையைத் தாண்டும் போது கைலை தடுக்குகிறது என அதைத் தூக்கி அப்பால் போட எண்ணிய என்னை நந்தி சபித்தானே! அது உண்மையாகிவிடுமோ? இருக்கட்டும், இருக்கட்டும், இதற்கெல்லாம் அஞ்சுபவன் இந்த இலங்கேஸ்வரன் இல்லை. சரிதான் இந்த அநுமனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதுதான். அவன் எங்கே இருந்தாலும் சரி! தன் வீரனிடம் அந்த வாநரன் எங்கே இருந்தாலும் அவனைக் கொன்று மண்ணில் புதைக்கச் சொல்கிறான் ராவணன்.
பாடம் கற்றுவிட்டு வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஓய்வாக அமர்ந்து ராமநாமத்தை எழுதிக்கொண்டிருக்கும் அநுமன் மேல் ஒரு பாறாங்கல் விண்ணிலிருந்து விழுகிறது. சத்தம் கேட்டு அனைவரும் ஓடோடி வந்து பார்க்க, அநுமன் உருண்டு ஒரு பக்கமாய்க் கிடக்கப் பாறாங்கல் தரையில் மோதிக்கிடக்கிறது. அநுமனுக்கு எதிரி தோன்றி இருப்பதையும், அவன் யார் என்பதையும் தன் திருஷ்டியின் மூலம் உணர்ந்த வசிஷ்டர் அநுமனை அங்கிருந்து கிளம்பிச் சென்று விடுமாறு கூறுகிறார். அநுமன் மறுக்கிறான். ராமன் இருக்குமிடமே தான் இருக்குமிடம் எனவும், ராமனின் காலடியே தனக்குச் சொர்க்கம் எனவும் கூறுகிறான். அதற்கு உதவுமாறும் வேண்ட, ஸ்ரீராமனோ, தற்சமயம் அநுமன் அங்கிருந்து செல்வதே சரி எனவும், பின்னர் ஒரு சமயம் நிச்சயம் சந்திப்போம் எனவும் அநுமனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைக்கிறான்.

டிஸ்கி: ப்ளாகர் இன்னிக்குப் படம்லாம் காட்டாதேனு எச்சரிக்கை கொடுத்துடுச்சு! :)))))

Sunday, September 5, 2010

ஜெய் ஆஞ்சநேயா! ஆஞ்சநேயப் பிரதாபம்!


இங்கே குறத்தி வடிவில் அன்னையவள் அஞ்சனைக்கும், கேசரிக்கும் நல்வாக்குக் கூறி மனதைச் சமாதானம் செய்து வைத்தாள். அங்கே அயோத்தியில் ஈசனோ ஒரு குரங்காட்டியாகி, தான் அனைவரையும் ஆட்டி வைப்பவன் என்பதையும் மறந்தவர் போல் ஆஞ்சநேயனைக் காட்டி மக்களைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டிருந்தார். அரண்மனைச் சிறுவர்களோடு ஸ்ரீராமனும் அங்கே வர அனுமனுக்கும், ராமனுக்கும் முதல் சந்திப்பு நடக்கிறது. ஈசன் பாட ஆஞ்சநேயன் ஆட மறுக்க, ஈசன் ஸ்ரீராமன் பெயரைச் சொல்ல அதனால் மகிழ்ந்த அநுமன் ஒரு குரங்கைப் போலவே ஆடிப் பாடிக் கரணங்கள் போட்டு அனைவரையும் மகிழ்விக்கிறான்.

ராமன் பெயர் கேட்டுக் குரங்கு ஆடுவதைக் கேட்ட அயோத்தி மன்னனும் அங்கே வந்து பார்க்க ஈசனோ, "ராமா" என்ற மந்திரச் சொல்லுக்கு மட்டுமே அநுமன் கட்டுப்படுவான் என்று சொல்கிறார். மன்னனுக்கு ஆச்சரியம், அதோடு இது ஏதோ பூர்வ ஜன்மத்துப் பந்தம் என்றும் தோன்றுகிறது. அனுமனை ஸ்ரீராமனோடு விளையாட அங்கேயே விட்டுப் போகும்படிச் சொல்கிறான் மன்னன். பொருள் எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாயும் அனுமனை மட்டும் ராமனுக்குத் தோழனாக விட்டுச் செல்லும்படியும் கேட்கிறான். ஆனால் குரங்காட்டி மறுக்கிறான்.

"பொருளை வைத்துக்கொண்டு என்ன செய்வது?? மணி மகுடம் தரித்த மன்னனானாலும் ஒருநாள் மயானம் சென்றே ஆகவேண்டும் அன்றோ? உண்மை அப்படி இருக்கப்பொருள் எதற்கு எனக்கு?" என்று கேட்கிறான் குரங்காட்டியாக வந்த ஈசன். அரண்மனைச் சேவகர்கள் குரங்காட்டியின் இந்தப் பேச்சால் அவனைக் கண்டிக்க, அவர்களைத் தடுத்த மன்னன் மீண்டும் வானரச் சிறுவன் ஆன அநுமனைத் தங்கள் அரண்மனையிலேயே விட்டுச் செல்லும்படிக் கேட்கிறான். ஸ்ரீராமனுக்கும் அது பிடித்திருக்க அவனும் அனுமனைக் குரங்காட்டியிடம் யாசிக்கிறான். அனுமனும் அங்கே ஸ்ரீராமனோடு தங்க விருப்பம் தெரிவிக்கிறான். தன் மனம் இத்தனை நாட்கள் தவித்த தவிப்பு எல்லாம் இதற்குத் தான் என்று புரிவதாயும் கூறினான்.

குரங்காட்டியும் இதற்கு ஒத்துக்கொள்ள, அப்போது அங்கே குறத்தி வடிவில் வந்த அன்னை, அநுமனை அங்கே விட்டுவிட்டுக் குரங்காட்டியை மட்டும் அழைத்துச் செல்கிறாள். சற்று தூரம் சென்றதும் இருவரும் மறைகின்றனர். இங்கே அரண்மனையில் கைகேயியின் அந்தப்புரத்தில் ஸ்ரீராமன் உணவு உண்ண, ராமனோ அனுமனுக்கும் உணவளிக்கச் சொல்கிறான். அப்போது அங்கே வந்த கூனி கைகேயியைக் கண்டிக்கிறாள். ராமன் கூனி சொல்வதை விரும்பவில்லை. இதைக் கண்ட அனுமன் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. இப்படி அனுமனைக் கண்டாலேயே இல்லாததும், பொல்லாததுமாய்ச் சொன்னாளாம் கூனி.

அனுமன் மேல் அடாப்பழி போட அதை நம்பாத கைகேயி பணிப்பெண்களை விசாரிக்கிறாள். பணிப்பெண்களோ மறுக்கின்றனர். அனுமன் கண்ணியமாகவே இருப்பதாய்ச் சொல்ல மந்தரையான கூனிக்கு மீண்டும் அவமானம் நேரிடுகிறது. அங்கே வைகுந்தத்திலும், கைலையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் விஷ்ணுவும், சிவனும். விஷ்ணுவுக்கு இதில் விருப்பமில்லை. இவை தேவை இல்லை என்றும் ராமனுக்குச் சேவை செய்கிறான் அனுமன் என்பதைக் காட்ட இப்படி எல்லாம் சொல்லவேண்டுமா என்றும் கேட்கிறார். என்ன இருந்தாலும் அனுமன் உங்கள் அம்சம் அன்றோ? அதற்கேற்ற மரியாதையுடன் நடத்தவேண்டும் என்றும் சொல்கிறார். ஈசனும் அதற்கு உடன்பட்டு பின்னால் ஒரு சமயம் இந்த ராமாவதாரத்தில் அவர் ஈசனைப் பூசித்து வழிபாடுகள் நடத்தும் தருணமும் வரும் என்றும் சொல்கிறார்.

வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமனும், சகோதரர்களும் குருகுல வாசத்தில் பாடங்கள் கற்க, அனுமனோ தன் வலிமையால் விண்ணில் பறந்து சென்று சூரியனைத் தனக்குப் பாடங்கள் கற்பிக்கும்படி கேட்கிறான். தான் சஞ்சாரம் செய்வதை நிறுத்த முடியாது என்றும் அனுமன் மட்டும் ஓரிடத்தில் நிலையாக நின்று கேட்கும்படி சூரியன் சொல்ல, அவ்வண்ணமே அனுமன் விஸ்வரூபம் எடுத்து உதயகிரியில் ஒரு காலும் அஸ்தமனகிரியில் மற்றொரு காலையும் வைத்துக்கொண்டு நிற்க, சூரியனும் வேத மந்திரங்களிலிருந்து அனைத்தையும் அனுமனுக்குக் கற்பிக்கிறான். தேவாதி தேவர்களும் வந்து பார்த்து அதிசயிக்கும் வண்ணம் இந்தப் பாடங்கள் நடக்கின்றன.

இந்தக் காட்சி லங்காபுரிக்கும் செல்ல, அங்கே ராவணன் இதைக் கேட்டு ஆச்சரியப் படுகிறான். அடுத்து.........